சென்னையில் 7 லட்சம் மக்களை.. நேரடியாக குஷியில் ஆழத்த போகும் சூப்பர் பாலம்.. எங்கே வருகிறது?
சென்னை: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, கிண்டி முதல் வேளச்சேரி வரையில் குருநானக் கல்லூரி சந்திப்பில் ₹310 கோடி மதிப்பில் 3 கிலோமீட்டர் நீள மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை அன்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இதற்கான பணிகள் அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ளது.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தரும் தகவலின்படி, குருநானக் கல்லூரி சந்திப்பு (ஃபீனிக்ஸ் மால் சந்திப்பு) மற்றும் ஃபைவ் ஃபர்லாங் சாலை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. ஆய்வுப் படி, ஃபைவ் ஃபர்லாங் சாலை சந்திப்பில் ஒரு மணி நேரத்திற்கு 7,459 பயணிகள் கார்களும், குருநானக் கல்லூரி சந்திப்பில் ஒரு மணி நேரத்திற்கு 7,742 பயணிகள் கார்களும் பயணம் செய்கின்றன. கிட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் இங்கே பயணம் செய்கிறார்கள்.

இந்த நெரிசலைக் குறைக்கும் வகையில் ஒரு மேம்பாலம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது என்று ஓர் அதிகாரி தெரிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலங்கள் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த இரண்டு வழிப்பாதை மற்றும் 12 மீட்டர் அகல மேம்பாலம், வேளச்சேரி பிரதான சாலையில் சர்தார் படேல் சந்திப்பிற்குப் பின் தொடங்கி, வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலுக்கு அப்பால் நீளும்.
எந்ததெந்த பாதைகள் வழியாக செல்லும்
இது ரேஸ் கோர்ஸ் சாலை சந்திப்பு, ஃபைவ் ஃபர்லாங் சாலை சந்திப்பு மற்றும் வேளச்சேரி பைபாஸ் சாலை சந்திப்பு ஆகியவற்றை உள்ளடக்கும். மேலும், ஃபைவ் ஃபர்லாங் சாலை மற்றும் குருநானக் கல்லூரி அருகே 5.5 மீட்டர் அகல ஒருவழி அணுகு பாதைகள் (down ramps) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இருபுறமும் 5.5 மீட்டர் அகல சேவைச் சாலை மற்றும் 1.5 மீட்டர் அகல நடைபாதை அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்பதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக சுமார் 1,100 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என்றும், மூன்று மாதங்களுக்குள் டெண்டர் விடப்படும் என்றும் அதிகாரி தெரிவித்தார்.
கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம்
இன்னொரு பக்கம் கொருக்குப்பேட்டைக்கும் வியாசர்பாடிக்கும் இடையே ஒரு ரயில்வே மேம்பாலம் (ROB) அமைக்க ₹70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பெருநகர சென்னை மாநகராட்சியும், ரயில்வே அமைச்சகமும் இணைந்து கட்டும் திட்டமாகும்.
இது 600 மீட்டர் நீளமுள்ள, இரண்டு வழிப்பாதையாக எஃகு ரயில்வே மேம்பாலமாக இருக்கும். அணுகுச்சாலை பகுதியை பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலங்கள் துறை செயல்படுத்தும். இந்த ROB, கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள லெவல் கிராசிங் எண். 2-ஐ தியாகப்பா தெரு மற்றும் கண்ணன் தெருவுடன் இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்க, ரயில்வே லெவல் கிராசிங் ஒரு நாளைக்கு பல முறை மூடப்படுவதால் வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் என்று ஓர் அதிகாரி கூறினார்.
இந்த ROB-ன் மொத்த நீளம் 555 மீட்டர் ஆகும், இதில் ரயில்வே பகுதி 55 மீட்டர் ஆகும். இதன் அகலம் 8.40 மீட்டர். இது எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து 60 மீட்டர் தொலைவில் உள்ள தியாகப்பா தெருவில் தொடங்கி, 30 டிகிரி கோணத்தில் ரயில் பாதைகளைக் கடந்து கண்ணன் தெருவில் முடிவடைகிறது.
ரயில்வே இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளித்து, 2023-24 ஆம் ஆண்டுக்கான தங்கள் பணி திட்டத்தில் சேர்த்துள்ளது. இந்த திட்டத்திற்காக சுமார் 1,550 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு ₹60 கோடி ஆகும்.
இந்த ROB, கொருக்குப்பேட்டை, எம்.கே.பி. நகர், கண்ணதாசன் நகர், எழில் நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் வசிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications