மாருதி சுசூகி நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் அபராதம்.. திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி
தஞ்சாவூர்: மாருதி சுசூகி நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தயாரிப்பு குறைபாடு உள்ள காரினை விற்பனை செய்த நிரூபிக்கப்பட்ட நிலையில், கஸ்டமரின் காரினை திரும்ப எடுத்துக் கொண்டு, அதற்கான பணத்தை திருப்பி கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள பிஎல்ஏ நிறுவனத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட செலரியோ கார் ஒன்றை மன்னார்குடியைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் வாங்கி இருக்கிறார். இவர் ரூ.6,59,447க்கு வாங்கிய நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் எஞ்சின் பகுதியில் இருந்து அதிகளவு இரைச்சல் சத்தம் வந்துள்ளது.

எப்படி புதிய காரில் இருந்து இரைச்சல் சத்தம் வரும் என்பது புரியாமல் கருணாநிதி குழம்பி இருக்கிறார். இதன்பின் உடனடியாக மாருதி சுசூகி ஷோரூம் சென்ற அவர், காரினை சர்வீஸ் செய்ய கொடுத்துள்ளார். சர்வீஸ் செய்ய கொடுத்த போதும், அந்த நிறுவனம் முறையாக சர்வீஸ் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
சர்வீஸின் போதே எஞ்சின் பகுதியில் இருந்து இரைச்சல் சத்தம் வருகிறது என்று புகார் அளித்துள்ளார். 4 முறை சர்வீஸ் செய்யப்பட்ட போதும், அந்த புகாருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. அதனை சரி செய்யவும் அந்த நிறுவனம் தயாராக இல்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த கருணாநிதி, உடனடியாக திருவாரூர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதன்பின் மாருதி சுசூகி தரப்பில், காரில் தயாரிப்பு குறைபாடு எதுவும் இல்லை. குளிர் சாதனத்தில் இருந்து வரும் சாதாரண இரைச்சல் என்று பதில் அளித்துள்ளனர். இதன்பின் கார் மெக்கானிக் ஒருவரை கொண்டு காரினை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த ஆய்வில், காரின் எஞ்சின் பகுதியில் இருந்து இரைச்சல் வருவதற்கு தயாரிப்பு குறைபாடு தான் காரணம் என்று தெரிந்து, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்பின் திருவாரூர் நுகர்வோர் மன்றம், மாருதி சுசூகி நிறுவனம் காரினை திரும்ப எடுத்துக் கொண்டு காருக்கான பணத்தை திரும்ப வழங்கவும், குறைபாட்டுடன் கார் தயாரித்த மாருதி சுசூகி நிறுவனம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications