சென்னை மாநகராட்சி பறிமுதல் செய்த 717 வாகனங்கள்.. உங்க வண்டி இதுல இருக்கான்னு உடனே செக் பண்ணுங்க
சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாகச் சாலையோரங்களில் நீண்ட நாட்களாகக் கேட்பாரற்றுக் கிடந்த 717 வாகனங்களை மாநகராட்சியும் காவல்துறையும் இணைந்து அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளன. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் முழு விவரங்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இப்போது சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொதுவாக மாநகராட்சிகளில் பயன்படுத்த முடியாத அளவுக்கு ரொம்பவே பழசாகிப்போன வண்டிகள், போலீசாரால் பறிமுதல் செய்யப்படும்.. அப்படி பறிமுதல் செய்யப்பட்டும் யாரும் சொந்தம் கொண்டாடாமல் இருக்கும் வாகனங்கள் அப்படியே கிடக்கில் போடப்படும்.. அதேபோல காலாவதியான குப்பை அள்ளும் வண்டிகளும் அங்கு வைத்திருக்க நேரிடும்.

அதற்காக அப்படியே நீண்ட காலத்துக்கும் போட்டு வைத்திருக்க முடியாது.. காரணம், அது தேவையற்ற இட நெருக்கடியை ஏற்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேட்டையும் உண்டாக்கும். அதனால்தான் அரசாங்கம் இவைகளை பொது ஏலத்தில் விடுகிறது.
சென்னை மாநகராட்சி வண்டிகள் ஏலம்
இப்படி ஏலம் போடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை, அப்படியே மாநகராட்சியின் பொது கணக்கில் சேர்த்து விடுவார்கள். இந்த நிதியை வைத்துக்கொண்டுதான் நகரின் புதிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, புதிய நவீன வண்டிகளை வாங்குவது, பொதுமக்களுக்கான சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற மிக முக்கியமான அடிப்படை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது போன்ற காரியங்களுக்கு முழுமையாக பயன்படுத்துகிறார்கள்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி இப்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொதுச் சாலைகளிலும், தெருக்களிலும் நீண்ட நாட்களாக கேட்பாரற்று, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அள்ளிச் செல்லும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் இணைந்து கையில் எடுத்துள்ளன.
717 வாகனங்கள் பறிமுதல்
இதன் ஒரு பகுதியாக, சென்னை திருவல்லிக்கேணி மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் சென்னை தரமணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே ஒட்டுமொத்தமாக 717 வாகனங்களை அதிகாரிகள் கண்டுபிடித்து, அப்படியே அப்புறப்படுத்தியுள்ளனர்.
இப்படி மீட்டெடுக்கப்பட்ட டூவீலர்கள் மற்றும் கார் போன்ற வாகனங்கள் எல்லாமே அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திற்குள் கொண்டு போய் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இப்படி மக்களுக்குப் பெரும் தொந்தரவாக இருந்த 717 வாகனங்களின் முழு விவரங்கள், இன்ஜின் எண்கள் மற்றும் அடையாள எண்கள் என அனைத்தையுமே பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.chennaicorporation.gov.in என்ற பக்கத்தில் அதிகாரிகள் தெளிவாகப் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்.
உங்க வண்டி இருக்கா பாருங்க
இந்த வண்டிகளின் உண்மையான உரிமையாளர்கள் யாராவது இருந்தால், அவர்கள் உடனடியாகத் தங்களின் வாகனங்களை உரிய சட்டப்பூர்வமான ஆவணங்களைக் காட்டி மீட்டுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து சரியாக 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட சென்னை திருவல்லிக்கேணி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் ஜே-13 சென்னை தரமணி போலீஸ் ஸ்டேஷனுக்குச் சரியான ஆதாரங்களுடன் நேரில் சென்று வாகனங்களை உரிமை கொண்டாடிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கறாரான காலக்கெடுவை விதித்திருக்கிறது.
ஏலம் போகும் வாகனங்கள்
ஒருவேளை, சொல்லப்பட்ட இந்த 15 நாட்கள் கெடுவுக்குள் எந்தவிதமான சரியான ஆவணங்களையும் கொண்டு வந்து தங்களது வண்டிகளை மீட்கத் தவறினால், அந்த வாகனங்கள் எல்லாமே உரிமையாளர் இல்லாத கைவிடப்பட்ட சொத்துக்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
அதன் பிறகு உரிமை கோரப்படாத அந்த 717 வாகனங்களையும் சட்ட விதிகளின்படி ஆன்லைன் ஏலம் (Online Auction) மூலமாக முழுமையாக கழிவு செய்து விற்பனை செய்வதற்குரிய அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகள் எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாகத் தொடங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் மிகக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications