சென்னையில் பயணத்தை மாற்ற போகும்.. மிக முக்கியமான பைபாஸ்.. 20 நிமிஷத்தில் சல்லுன்னு போகலாம்
சென்னை: தாம்பரம் புதூர் வருவாய்க் கிராமத்தில், அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்த 50 வீடுகள் அடங்கிய 90 கட்டிடங்களை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
9.3 கி.மீ நீளமுள்ள தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலையை முடிக்கும் விதமாக இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சிமென்ட் கான்கிரீட் கட்டமைப்புகள். கடந்த 40 ஆண்டுகளில் கட்டப்பட்டவை ஆகும்.

வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் பங்கேற்று இந்த கட்டுமானங்களை இடித்து வருகின்றனர். ஜிஎஸ்டி சாலையில் பெருங்களத்தூரில் இருந்து ராஜகீழ்ப்பாக்கம் வரையிலான நான்கு வழிச் சாலை காட்டப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக விரைவில் 200 மீட்டர் தூரத்தை அகற்றும் பணிகள் செய்யப்படுகின்றன.
இதன் ஒரு கட்டமாகவே தாம்பரம் புதூர் வருவாய்க் கிராமத்தில், அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்த 50 வீடுகள் அடங்கிய 90 கட்டிடங்களை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
இந்த இடத்திலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள முருகமங்கலத்தில் கணக்கெடுக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு ஏற்கனவே டோக்கன்கள் வழங்கப்பட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக குடியிருப்பாளர்கள் தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை. பயனாளிகள் செலுத்த வேண்டிய செலவில் மின் இணைப்புக்கான கட்டணங்கள் உட்பட சுமார் ₹6.53 கோடியை மாநில அரசு செலுத்தியுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் ₹7 லட்சம் செலவாகும் . இவை சுமார் 640 சதுர அடியில் கட்டப்பட்டு உள்ளது.
சாலை பணிகள்: நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இங்கே மீதமுள்ள பகுதிகளை 5.38 கோடியில் முடிக்க மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக டெண்டர் விடப்பட்டுள்ளது.
மப்பேடு மற்றும் நெடுங்குன்றத்தில் ஏற்கனவே உள்ள இருவழிச் சாலைகளை ஆறுவழிப் பாதையாக விரிவுபடுத்தும் திட்டம் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சாலை அமைக்கப்பட்டால், வேளச்சேரி மற்றும் அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் நெரிசல் மிகுந்த ஜிஎஸ்டி சாலையை கடந்து பெருங்களத்தூரை 20-30 நிமிடங்களில் அடையலாம்.
எம்எஸ்ஐ சாலையில் ராஜகீழ்ப்பாக்கம் சந்திப்பை பெருங்களத்தூருடன் இணைக்கும் 8.8 கி.மீ., திட்டம், 10 ஆண்டு கால தாமதத்திற்கு பின், கடந்த ஜூலை மாதம் புத்துயிர் பெற்றது. ஆனால் மீண்டும், நிலம் கையகப்படுத்துதல் சிக்கல்கள் காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
குறிப்பாக பெருங்களத்தூரில் வன கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்தது. தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தில் நீடித்து வரும் தாமதம் குறித்து தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விரக்தியை வெளிப்படுத்தி வந்தனர். முக்கியமாக எட்டு மாதங்களுக்கும் மேலாக எந்த ஒரு ஒப்பந்ததாரர்களும் ஒப்பந்தம் செய்யப்படாத காரணங்களால் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளாமல் மாநில நெடுஞ்சாலை துறை காலம் தாழ்த்தி வந்தது.
6 வழி சாலை பணிகள்: இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாத நிலையில்... விடுபட்ட மற்ற இணைப்புகளில் பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மப்பேடு, நெடுங்குன்றம் வழியாக செல்லும் சாலையை ஓராண்டுக்குள் அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட பாதைகள் தவிர, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், எதிரெதிர் போக்குவரத்தைப் பிரிப்பதற்காக, மத்திய மீடியனில் விபத்துத் தடுப்புகள் அமைக்கப்படும் பணிகள் நடந்து வருகின்றன.
மழைக்காலங்களில் போக்குவரத்து தாமதத்தை மோசமாக்கும் நீர் தேங்குவதைத் தடுக்க இங்கே புதிய மழைநீர் வடிகால் நிறுவப்படும். பைபாஸ் முழுவதும் நீர் ஓட்டத்தை நிர்வகிக்க முக்கிய இடங்களில் ஏழு கான்கிரீட் பாக்ஸ் கட்டப்படும். இதன் மூலம் கனமழையின் போதும் இங்கே டிராபிக் ஜாம் ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications