ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி
டெல்லி: தமிழகத்தின் சாலைப் போக்குவரத்து உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியை, தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று (ஜூன் 2, 2026) டெல்லியில் நேரில் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின்போது தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறும் நோக்கில் விரிவான மனு ஒன்றை மத்திய அமைச்சரிடம் அளித்தார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், தொழில்துறை வளர்ச்சி மற்றும் சரக்குப் போக்குவரத்து தேவைகளைக் கருத்தில் கொண்டு பல முக்கிய கோரிக்கைகளை ஆதவ் அர்ஜுனா முன்வைத்துள்ளார். கோவை எல்&டி பைபாஸ் மற்றும் கோவை-திருச்சி சாலைத் திட்டங்கள் ஏற்கனவே ஒப்புதல் பெற்று பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதும் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் கோரியுள்ளார்.
ஏற்கனவே உள்ள திட்டங்கள்
கோவை எல்&டி பைபாஸ் (நீலாம்பூர் - மதுக்கரை) மற்றும் கோவை - திருச்சி ஆகிய வழித்தடங்களை 6 வழிச்சாலைகளாக மேம்படுத்தும் திட்டங்கள் ஏற்கனவே ஒப்புதல் பெற்று, அதற்கான பணிகள் தற்போதே வெவ்வேறு கட்டங்களில் செயல்பாட்டில் உள்ளன. இந்தச் சூழலில், மத்திய அமைச்சர் நிதின் கட்காரியுடனான சந்திப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஏற்கனவே நடக்கும் இந்த இரு திட்டங்களின் பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளார்.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சுமார் 1,500 கிலோமீட்டர் நீளமுள்ள நான்கு வழிச்சாலைகளை ஆறு வழிச்சாலைகளாக மேம்படுத்தும் சிறப்பு மெகா திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தினார். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் பெரிதும் பலனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய வழித்தட கோரிக்கைகள்:
செங்கல்பட்டு - திண்டிவனம் (NH-32) சாலையை 6 அல்லது 8 வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும். சென்னையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் மிக முக்கிய பாதையாக இது செயல்படுகிறது.
கோயம்புத்தூர் புறவழிச்சாலை (நீலாம்பூர் - மதுக்கரை, NH-544) பகுதியை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும். கோவை எல்&டி பைபாஸ் பகுதியில் அதிகரிக்கும் போக்குவரத்தை சமாளிக்க இது அவசியம்.
திருச்சி (பஞ்சப்பூர்) - ஜீயபுரம் - கரூர் (NH-81) வழித்தடத்தை 6 வழிச்சாலையாக மேம்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரூர் - கோயம்புத்தூர் இடையிலான பகுதியை அதிவேக அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலையாக (Access-Controlled Highway) மாற்ற வேண்டும்.
மேலும், மாதவரம் - சோழவரம் பகுதியில் சென்னை நகரின் வடக்கு நுழைவாயிலை மேம்படுத்தும் திட்டத்துக்கும் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பு மீது கவனம்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 71,313 சாலை விபத்துகள் பதிவாகி, 18,421 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு சாலை பாதுகாப்புக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தினார். NHAI-யின் ரோந்து வாகனங்கள் மற்றும் அவசர ஆம்புலன்ஸ் சேவைகளை அதிகரிக்கவும், விபத்து பிளாக் ஸ்பாட்களில் பாதுகாப்பான யூ-டர்ன்கள் அமைக்கவும், நெடுஞ்சாலை ஓரங்களில் Trauma Care Centres (விபத்து சிகிச்சை மையங்கள்) அமைக்கவும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
2025-27 காலத்துக்கான மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதி (CRIF) திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தமிழகத்தின் கோரிக்கைகளை கனிவோடு கேட்டறிந்து, அனைத்து திட்டங்களையும் சாதகமாக பரிசீலனை செய்வதாக உறுதியளித்துள்ளார். இத்திட்டங்கள் நிறைவேறினால் தமிழகத்தின் சாலைப் போக்குவரத்து உள்கட்டமைப்பு புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications