சென்னை வினோத் வீடியோ விஷன் முதல் அரசியலில் இருந்து விலகுகிறேன் வரை.. யார் இந்த வி.கே. சசிகலா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலைவிட்டே விலகுவதாக அதிமுக பொதுச்செயலாளர் என உரிமை கோரி வந்த சசிகலா நடராஜன் திடீரென அறிவித்துள்ளார். அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்க்கவே முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இனி அரசியலே வேண்டாம் என வெளிப்படையாக அறிவித்து தம்முடைய அரசியல் சகாப்தத்துக்கு முடிவுரை எழுதியிருக்கிறார் சசிகலா.

சசிகலாவின் படிப்பு 10-ம் வகுப்பு. 1973-ம் ஆண்டு அக்.16-ல் விளார் கிராமத்தை சேர்ந்த ம. நடராஜனை திருமணம் செய்து கொண்டார் சசிகலா. இந்த திருமணத்தை நடத்தி வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.

1980களில் சசிகலாவின் கணவர் ம. நடராஜன் கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக அரசுப் பணியில் இருந்தார். அந்த கால கட்டத்தில்தான் ஜெயலலிதா எனும் மாஜி நடிகையை எம்ஜிஆர் அரசியலுக்குள் கொண்டு வந்தார்.

Bio of VK Sasikala who quit from public life

அதிமுகவின் பொதுச்செயலாளர், ராஜ்யசபா எம்.பி. என அப்போது கட்சியில் எழுந்த கடும் எதிர்ப்புகளை மீறி ஜெயலலிதா எனும் அரசியல் தலைவரை உருவாக்கினார் எம்ஜிஆர். இதற்கு அரசு இயந்திரத்தை முழு வீச்சிலும் பயன்படுத்தினார் எம்ஜிஆர். இங்கிருந்துதான் சசிகலா எனும் சோ கால்ட் ராஜமாதாவின் அத்தியாயமும் தொடங்கியது.

கடலூரில் ஜெயலலிதா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அந்த கூட்டத்தை வீடியோ பதிவு செய்வதற்கு மக்கள் தொடர்பு அதிகாரி ம. நடராசனின் வினோத் வீடியோ விஷனை ஏற்பாடு செய்தார் ஆட்சியராக இருந்த சந்திரலேகா ஐ.ஏ.எஸ். வினோத் வீடியோ விஷனை சென்னை ஆழ்வார்பேட்டை பீமண்ண தோட்டம் எனும் பகுதியில் நடத்திக் கொண்டிருந்தவர்தான் சசிகலா.

வீடியோ பதிவில் ஜெயலலிதாவுடன் தொடங்கிய நட்பு மெல்ல மெல்ல நெருக்கமானது. ராஜ்யசபாவுக்கு ஜெயலலிதா செல்லும் போது உடன் பயணிக்கிற இடத்தையும் சசிகலா பெற்றார். எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை சசிகலா, அவரது குடும்பம் இருந்த இடம் யாருக்கும் தெரியாது.

1987 டிசம்பர் 24-ந் தேதி எம்.ஜி.ஆர். காலமானார். அப்போது ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக நின்றது. எம்.ஜி.ஆர். உடல் ஏற்றப்பட்ட ராணுவ வண்டியில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு நடுரோட்டில் விழவைக்கப்பட்டார் ஜெயலலிதா. எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதாவை ஒரு தலைவராக ஏற்றுக் கொண்டது அதிமுகவின் ஒரு பிரிவு.

அன்றைய காலத்தில் ஜெயலலிதாவின் பாதுகாவலர்களாக இருந்தவர்கள் சசிகலாவின் உறவினர்கள். ஜெயலலிதா எனும் தலைவரின் அறிவிக்கப்படாத ஆலோசகரானார் சசிகலாவின் கணவர் நடராஜன். ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக சென்னை போயஸ் கார்டன் இல்லத்திலேயே குடியேறியேவிட்டார் சசிகலா.

ஜெயலலிதா கைகளுக்கு அதிமுக முழுமையாக வந்தது முதல் சசிகலா, அவரது கணவர் நடராஜன், சசிகலாவின் உறவினர்கள் நிழல் அரசாங்கத்தையும் நிழல் அதிமுகவையும் நடத்தி வந்தனர்.

1991-96 கால கட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சசிகலா அண்ட் கோவின் ஆட்டம் பகிரங்கமாகவே இருந்தது. தமிழகமே இந்த அண்ட்கோவின் ஆட்டத்தால் ஆடிப் போனது. இதன் உச்சமாக நடந்தது சசிகலா உறவினர் சுதாகரனை ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுத்து இந்தியாவையே அதிரவைக்கும் அளவுக்கு ஆடம்பர திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது பிறந்த ஒரு வார்த்தை மன்னார்குடி மண்ணுக்கே இன்றளவும் களங்கமாகவும் இருக்கிறது. சசிகலா அண்ட்கோவுக்கு மக்கள் கொடுத்த பெயர் மன்னார்குடி மாஃபியா என்பதுதான்.

1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்க காரணமானவர்கள் இந்த சசிகலா அண்ட் கோதான். சசிகலா அண்ட் கோவின் தலையீடுகள், ஆட்டங்கள் ஜெயலலிதாவுக்கும் தெரிந்துதான் நடந்தது. ஒருகட்டத்தில் சசிகலா, சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பது, பின்னர் சேர்த்துக் கொள்வது என்ற கண்ணாமூச்சி ஆட்டத்தையும் ஜெயலிதா ஆடினார்.

ஆனால் ஜெயலலிதா அம்மாவின் நிழலாக சசிகலா எனும் சின்னம்மா உருவானார். அதிமுகவின் அத்தனை நிகழ்வுகளையும் தீர்மானிக்கும் சக்திகளாக சசிகலாவும் அவரது குடும்பமும் வியாபித்து கிடந்தனர். வினோத் வீடியோ விஷன் நடத்திய சசிகலா இன்றைக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துகளின் அதிபதியாகி இருக்கிறார். அத்தனையும் சட்டவிரோதமான முறைகளில் சம்பாதித்தவை என்பதை இந்த தேசமே நன்கு அறியும்.

ஜெயலலிதாவின் ஏற்றம், இறக்கம், இறப்பு என அத்தனையிலும் சசிகலாவின் பங்கு இல்லாமல் இல்லை. ஜெயலலிதா எனும் ஆளுமை மறைவுக்குப் பின்னர் நிழல் உலக சின்னம்மா தன்னை பகிரங்கமாகவே வெளிப்படுத்திக் கொண்டார். புதிய ஜெயலலிதாவாக தம்மை உருமாற்றிக் கொண்டார். ஜெயலலிதா காலத்தில் அடைய முடியாத அரசியல் ஆசைகளை நோக்கி சசிகலா பயணப்பட்டார். சசிகலாவை எம்.எல்.ஏக்கள் முதல்வராகக் கூட தேர்ந்தெடுத்தனர்; அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று போயஸ் கார்டனுக்கு போய் சசிகலாவே தஞ்சம் என தேவுடு காத்து கிடந்தனர் இன்றைய அமைச்சர்கள்.

நேர்மையே வெல்லும் என்பதைப் போல எல்லாவற்றையும் எளிதாக பெற முடிந்த சசிகலாவால் நீதியை மட்டும் விலைக்கு வாங்க முடியவில்லை. சட்டவிரோதமாக வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்த வழக்கில் சசிகலா ஏ2 என அடையாளப்படுத்தப்பட்டு தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏ3 ஆக சசிகலாவின் உறவினர் இளவரசி, ஏ4 என சசிகலாவின் உறவினர் சுதாகரன் ஆகியோரும் பெங்களூரு சிறையில் தள்ளப்பட்டனர். இவர்களுக்கான 4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து வெளியே வந்தார்.

ஆனால் சசிகலாவின் ஆட்டம் ஓயவில்லை. பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார் ஆகும்போதே அதிமுக கொடியை ஜெயலலிதா பயன்படுத்திய காரில் கட்டிக் கொண்டு பவனி வந்தார். பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 23 மணிநேர யாத்திரை மேற்கொண்டு தமக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாக நம்ப வைத்தார் சசிகலா.

அதிமுக பொதுச்செயலாளர் எனும் கோதாவில் தொடர்ந்த வழக்கை விரைவாக விசாரிக்க கோரி மனுத் தாக்கல் செய்தார். சசிகலா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கழகப் பொதுச்செயலாளர் என பதிவு செய்திருந்தார். தற்போதைய தேர்தல் களத்தில் சசிகலாவை, தினகரனின் அமமுகவை கண்டிப்பாக அதிமுக சேர்க்க வேண்டும் என அரும்பாடுபட்டது பாஜக.

அதிமுக முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை அத்தனை பேரும் சசிகலாவுக்கு எதிராக இருந்தனர். இதனால் பாஜகவின் மல்லுக்கட்டு வெல்லாமல் போனது. இதன் விளைவாக அரசியலைவிட்டே விலகுகிறேன் என இப்போது சசிகலா அறிவித்திருக்கிறார். அதிமுகவுக்கு சசிகலா உருவாக்கி கொண்டிருந்த மிகப் பெரிய நெருக்கடி விலகிவிட்டது. அதிமுகவின் தொண்டர்களால்தான் எம்ஜிஆர் உருவாக்கிய மாபெரும் இயக்கம் இனி செயல்படும் என்பதற்கு சசிகலாவின் விலகல் அறிக்கைதான் சாட்சி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+