Avatar Fire and Ash Review: விஷுவல் விருந்து! அவதார் 3 எப்படி இருக்கு? மீண்டும் மிரட்டல் காட்சி!
சென்னை: மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, "அவதார்" ரசிகர்கள் காத்திருந்த தருணம் வந்துவிட்டது. ஜேம்ஸ் கேமரூன் மீண்டும் பாண்டோராவை திரையில் கொண்டு வந்திருக்கிறார். 'Avatar: Fire and Ash', அவதார் சீரிஸின் மூன்றாவது பாகம், டிசம்பர் 19, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த தடவை அவதார் உலகம் சற்று டார்க். அழகான இயற்கை, அமைதியான நாவி மக்கள், மென்மையான கதை - இவை எல்லாம் பின்னுக்கு போய், சோகம், கோபம், பழிவாங்கும் உணர்வு, போர் ஆகியவை முன்னணிக்கு வந்திருக்கின்றன.

வே ஆஃப் வாட்டர்க்கு பிறகு தொடங்கும் கதை
'Avatar: The Way of Water' முடிந்த சில வாரங்களுக்குள்ளேயே இந்த கதை தொடங்குகிறது. ஜேக் சல்லி மற்றும் அவரது குடும்பம் இன்னொரு பெரிய ஆபத்தை எதிர்கொள்ள தயாராகிறார்கள். இந்த தடவை எதிரி மனிதர்கள் மட்டும் இல்லை. பாண்டோராவே எரிகிறது.
படத்தில் புதிய நாவி குலம் ஒன்று அறிமுகமாகிறது. அவர்கள் தான் மாங்குவான், அல்லது ஆஷ் பீப்புள். எரிமலைப் பிரதேசத்தில் வாழ்ந்த இவர்கள், ஒரு பெரும் வெடிப்பில் தங்கள் ஊரை இழந்தவர்கள். இயற்கையோடு அமைதியாக வாழும் நாவிகள் போல அல்லாமல், கோபமும் வெறுப்பும் இவர்களின் அடையாளம்.
வராங் - நல்லவளா, கெட்டவளா
இந்த ஆஷ் பீப்புளின் தலைவியாக வரும் வராங் கதாபாத்திரத்தில் ஓனா சாப்லின் நடித்திருக்கிறார். இதுவரை பார்த்த நாவிகள் எல்லாம் நல்லவர்கள், இயற்கையை நேசிப்பவர்கள் என்ற இமேஜை இந்த கேரக்டர் முற்றிலும் உடைக்கிறது.
வராங் முழுக்க வில்லன் இல்லை, முழுக்க ஹீரோவும் இல்லை. அந்த கிரே ஷேட் தான் இந்த கதாபாத்திரத்தை சுவாரசியமாக்குகிறது. ஆனால் இதே விஷயம் சில ரசிகர்களுக்கு "தேவையில்லாத மாற்றம்" போலவும் தோன்றியிருக்கிறது.
மூன்று மணி நேரத்துக்கு மேலான பயணம்
படத்தின் நீளம் சுமார் 3 மணி 15 நிமிடம். இதுதான் பெரிய விவாதமாகி இருக்கிறது. ஒரு தரப்பு, "இவ்வளவு நேரத்தையும் படம் தாங்கி நிற்கிறது, எங்கும் போர் அடிக்கவில்லை" என்கிறார்கள். மற்றொரு தரப்பு, "ஒரு மணி நேரம் வெட்டியிருக்கலாம், பல காட்சிகள் தேவையில்லாமல் இழுக்கப்படுகிறது" என்கிறார்கள்.
நெட்டிசன்ஸ் ரிவ்யூ - இரண்டு உலகம்
சோசியல் மீடியாவில் படம் குறித்து கருத்துகள் வந்து கொண்டே இருக்கிறது. ஒருபக்கம்,"இது தான் ஜேம்ஸ் கேமரூனின் சிறந்த அவதார் படம், வியூவல்ஸ் அசத்தல், மூன்று மணி நேரமும் பிடித்திருந்தது, சை-ஃபை ரசிகர்களுக்கான மஸ்ட் வாட்ச்" என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
மற்றொரு பக்கம், கதை பலவீனமாக இருக்கிறது, கேரக்டர் டெவலப்மென்ட் சரியில்லை, அவதார் 2-ஓட மறுபதிப்பு மாதிரி தான், இந்த தடவை டெக்னாலஜியும் காப்பாற்றவில்லை" என்று கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
ஒரு ரசிகர் கூட, "இதுவரை வந்த அவதார் படங்களில் இதுதான் மோசமானது. இனி இந்த டெக்கேட்ல அவதார் வேண்டாம்" என்று ஓப்பனாக சொல்லியிருக்கிறார்.
பாண்டோரா இன்னும் முடிவடையவில்லை
விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், ஜேம்ஸ் கேமரூன் ஒரு விஷயத்தை தெளிவாக அறிவித்திருக்கிறார். அவதார் உலகம் இத்துடன் முடிவடையவில்லை. இந்த தொடரில் இன்னும் இரண்டு படங்கள் வரவிருக்கின்றன. ஒன்று 2029-ல், மற்றொன்று 2031-ல் வெளியாகும் என திட்டமிடப்பட்டுள்ளது.
சுருக்கமாக சொன்னால்
'Avatar: Fire and Ash'கண்களுக்கு விருந்து, ஆனால் கதையில் எல்லோருக்கும் ஒரே மாதிரி பிடிக்காத படம். வியூவல்ஸ், உலக அமைப்பு, புதிய நாவி குலம் - இவை பலமாக இருக்கின்றன. ஆனால் நீளம், கதை ஓட்டம், சில கதாபாத்திரங்கள் ரசிகர்களை இரண்டு பக்கமாகப் பிரித்திருக்கின்றன. வியூவல்ஸ் முக்கியம் என்று நினைப்பவர்கள் தியேட்டரில் பார்க்கலாம். கதை தான் முக்கியம் என்றால், எதிர்பார்ப்பை கொஞ்சம் குறைத்துக்கொண்டு போவது நல்லது.












Click it and Unblock the Notifications