விஜய் "மற்றும் பலர்னு” சொன்னது மறந்து போச்சா? சீமானுடன் சந்திப்பு பற்றி ஆதங்கத்துடன் சேரன் பதிவு
சென்னை: விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு எடுத்த நடவடிக்கைகள் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன. சட்டமன்றத்தில் எம்எல்ஏவாக பதவியேற்ற உடனேயே, அரசியல் நாகரீகத்தை முன்னிறுத்தும் விதமாக அவர் பல்வேறு கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த சந்திப்புகளில் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வைகோ ஆகியோருடன் சேர்த்து, சீமானையும் விஜய் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் காலத்தில் கடுமையான விமர்சனங்கள் பரிமாறிக்கொண்டிருந்த நிலையில், இந்த நேரடி சந்திப்பு "நாகரீக அரசியல்" என்ற கோணத்தில் பாராட்டப்பட்டாலும், சில தரப்புகளில் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.

சேரன் பதிவு கிளப்பிய விவாதம்
இந்த சூழ்நிலையில், இயக்குநர் சேரன் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் கருத்து தெரிவித்தார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி, அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் வந்ததும், நீங்கள் அரவணைத்ததும் இன்று பண்பாகவும், மாண்பாகவும் ஆகலாம்.. ஆனால், தேர்தல் களத்தில் "மற்றும் பலர்" என உச்சரித்த போது ரத்தம் கொதித்ததும் நாதக தம்பிகளின் 15 வருட உழைப்பை அதில் உள்ள நேர்மையை துளிகூட நினைக்காமல் தம்பி விஜய் அவர்கள் புறந்தள்ளியபோது ஏற்பட்ட வேதனைக்கு ஏது மருந்து அண்ணனே..
எது என்னவாக இருந்தாலும் நீங்கள் பதினைந்து வருடம் மக்களிடம் கத்தி கத்தி விதைத்த மாற்றம் இனி நடந்தால் சந்தோசம்.. உனது எண்ணங்களுக்கும், திட்டங்களுக்கும் இந்த முதல்வர் செவிசாய்த்து நடத்திக்காட்டட்டும்.. நீ தான சொல்வ நான் விதை போடுவேன்.. தம்பி அறுவடை செய்வான்னு... அது இந்த தம்பியாக இருந்துவிட்டு போகட்டும் மகிழ்ச்சியே..!" என்று சேரன் கூறியுள்ளார்.
சீமான் - விஜய் உறவு
சீமான், விஜய் அரசியலுக்கு வந்த ஆரம்பத்தில், இளைஞர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் என அவர் வரவேற்றிருந்தார். ஆனால் அதே நேரத்தில், அரசியல் என்பது சினிமாவை விட மிகவும் பொறுப்பான தளம் என்பதால், தெளிவான கொள்கையும் நிலைப்பாடும் அவசியம் என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பின்னர் சில சந்தர்ப்பங்களில், விஜயின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக இருக்க வேண்டும் என்றும், அவர் எந்த வழியில் போக போகிறார் என்பது மக்களுக்கு புரிய வேண்டும் என்றும் சீமான் கருத்து தெரிவித்திருந்தார். அதுபோல விஜய் குறித்து சில இடங்களில் விமர்சிக்கு தொடங்கி இருந்தார். இதனால், இவர்களுக்கிடையேயான உறவு ஒருபுறம் ஆதரவு, மறுபுறம் விமர்சனம் என்ற கலவையாகவே இருந்து வந்துள்ளது.
தற்போதைய அரசியல் அர்த்தம்
விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு எடுத்துள்ள இந்த சந்திப்பு நடவடிக்கை, கடந்த கால அரசியல் மோதல்களை தாண்டி புதிய அணுகுமுறையை காட்டுவதாக சிலர் பார்க்கின்றனர். அதே சமயம், அடிப்படை ஆதரவாளர்களின் உணர்வுகள் இன்னும் பாதிக்கப்பட்டவையாக உள்ளன என்பதையும் சேரன் பதிவு வெளிப்படுத்துகிறது.
இந்த சம்பவம், "நாகரீக அரசியல்" மற்றும் "நிலைத்த அரசியல் நிலைப்பாடு" ஆகிய இரண்டிற்கும் இடையிலான மோதலை தெளிவாக காட்டுகிறது. ஒரு தலைவரின் பொது நடவடிக்கைகள் எவ்வாறு அவரது ஆதரவாளர்களின் மனநிலையையும் பாதிக்கின்றன என்பதற்கும் இது ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.
ஏற்கனவே சேரன் ஆரம்பத்தில் இருந்தே விஜய்யை விமர்சித்து வந்தார். ஆனால் அவர் வெற்றி பெற்றதும் தான் இதற்கு முன்பு விமர்சித்தது தவறு அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் மக்கள் விஜய்க்கு கொடுத்த ஆதரவை பார்த்து நானே வியந்து போய் இருக்கிறேன். விஜய் இனி முதல்வராக திறம்பட செயல்பட வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், இயக்குநர் சேரன் வெளியிட்ட இந்த பதிவு சாதாரண கருத்து அல்ல; அது ஒரு பெரிய அரசியல் மனநிலையை பிரதிபலிக்கிறது. சி. ஜோசப் விஜய் எடுத்துள்ள அரசியல் நடைமுறை எதிர்காலத்தில் எந்த திசையில் செல்லும் என்பதையும், சீமான் போன்ற தலைவர்களுடன் உருவாகும் உறவு எப்படி மாறும் என்பதையும் தீர்மானிப்பது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளே ஆகும்.













Click it and Unblock the Notifications