நல்லவங்களுக்கு தான் சோதனையா? மகனை இழந்த ஜானகிக்கு, பாடகி சித்ராவின் பதிவு.. கலங்க வைத்த வார்த்தை
சென்னை: தென்னிந்திய திரையிசையின் நைட்டிங்கேல் என்று ரசிகர்களால் போற்றப்படும் பின்னணி பாடகி எஸ். ஜானகி வாழ்க்கையில், இப்போது தாங்க முடியாத பேரிழப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது. அவரது ஒரே மகனான முரளி கிருஷ்ணா திடீரென உயிரிழந்த செய்தி, இசை உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல ஆயிரம் பாடல்கள், பல கோடி ரசிகர்கள் இருந்தாலும், ஜானகி அம்மாவுக்கு வாழ்க்கை என்றால் அது தன் மகன் தான். அந்த மகனை இழந்த செய்தி, அவருக்கு இடி போல இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த துயரமான தருணத்தில், ஜானகி அம்மாவுக்கு ஆறுதல் கூறி, பின்னணி பாடகி கே. எஸ். சித்ரா தனது சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவு, ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.
சித்ராவின் ஆறுதல்
சித்ரா தனது பதிவில், "ஜானகி அம்மாவின் அன்புக்குரிய ஒரே மகன் முரளியின் மறைவு செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அன்பான சகோதரரை இழந்துவிட்டோம். இந்த தாங்க முடியாத வேதனையை கடந்து செல்ல ஜானகி அம்மாவுக்கு இறைவன் மன பலத்தை தர வேண்டும். மறைந்த ஆன்மா சாந்தியடையட்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வார்த்தைகள் சாதாரணமான ஆறுதல் வார்த்தைகள் அல்ல. ஏனெனில், ஒரு குழந்தையை இழந்த தாயின் வலியை, இன்னொரு தாயான சித்ரா நேரடியாக அனுபவித்தவர்.
சித்ராவின் வாழ்க்கையிலும் அதே பேரிழப்பு
பின்னணி பாடகி கே. எஸ். சித்ரா, ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களை மகிழ்வித்தவர். ஆனால், அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய துயரம், அவரது ஒரே மகள் நந்தனாவின் இழப்பு.
2011ஆம் ஆண்டு, சித்ராவின் மகள் நந்தனா, சிறு வயதிலேயே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். அந்த சம்பவம், சித்ராவின் வாழ்க்கையை முற்றிலும் உலுக்கியது. அந்த நாளிலிருந்து, சித்ரா மேடையில் சிரித்தாலும், அவரது மனதுக்குள் அந்த வலி என்றும் மறையவில்லை என்று நெருக்கமானவர்கள் பலரும் கூறியுள்ளனர்.
ஒரு தாய் தனது குழந்தையை இழப்பது என்பது, எந்த காலத்திலும் ஆற முடியாத காயம். அந்த காயத்துடன் வாழும் ஒருத்தர் தான் சித்ரா. அதனால் தான், இன்று ஜானகி அம்மாவின் துயரத்தை அவர் சொற்களால் அல்ல, உணர்வால் புரிந்து கொண்டு ஆறுதல் சொல்லியிருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து இருக்கின்றனர்.
ரசிகர்களின் மனதை நொறுக்கிய இரு தாய்களின் கதை
ஜானகி அம்மாவும், சித்ராவும் - இருவரும் இசையால் உலகத்தை மகிழ்வித்தவர்கள். ஆனால் வாழ்க்கை அவர்களுக்குக் கொடுத்த சோதனை, மிகவும் கொடூரமானது. ஒருத்தர் தனது கணவரை இழந்து, மகனை வாழ்க்கையாக வைத்திருந்த நிலையில், இன்று அந்த மகனையும் இழந்துள்ளார். மற்றொருத்தர், தன் ஒரே மகளை சிறு வயதிலேயே இழந்து, அந்த வலியுடன் இன்றுவரை வாழ்ந்து வருகிறார்.
இந்த இரண்டு தாய்களின் கதை, சமூக வலைதளங்களில் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. "கடவுள் ஏன் நல்ல மனசு கொண்டவர்களுக்கே இப்படியான சோதனைகளை தருகிறார்?" என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது ஜானகி அம்மாவுக்கான துயரம் மட்டுமல்ல. குழந்தைகளை இழந்து, அமைதியாக கண்ணீர் சிந்தும் அனைத்து பெற்றோர்களின் வலியும் இதுதான்.
ஜானகி அம்மாவுக்கு இந்த பேரிழப்பை தாங்கிக் கொள்ள இறைவன் பேராற்றலை அளிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஒருமித்த பிரார்த்தனை.
அதேபோல், இந்த வலியை அனுபவித்த சித்ராவின் ஆறுதல், பலராலும் பாராட்டப்படுகிறது.
மறைந்த முரளி கிருஷ்ணாவின் ஆன்மா சாந்தியடையட்டும். ஜானகி அம்மாவுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.












Click it and Unblock the Notifications