சில்க் ஜூப்பாவுடன் கோச் வண்டியில் வந்த தியாகராஜ பாகவதருக்கா இந்த கதி? சேலம் கோயில் வாசலில் டாப் ஹீரோ
சென்னை: செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்சே, ராணா டகுபதி நடிப்பில் உருவாகி உள்ள காந்தா படம் வெளியாகி உள்ளது.. இந்த படம் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தியாகராஜ பாகவதர் குறித்து டாக்டர் காந்தராஜ் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
Tamilmind என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், தியாகராஜ பாகவதர் மொத்தமே நடித்தது 12 படங்கள்தான்.. 12 படங்களும் சூப்பர் ஹிட்டாயின.. அதிலும் ஹரிதாஸ் படம், 3 வருட தீபாவளிக்கு ஓடியது.. தியாகராஜ பாகவர் போல உச்சத்துக்கு போனவரும் இல்லை, சரிந்தவரும் இல்லை.

தங்க தட்டில் சாப்பிட்ட தியாகராஜ பாகவதர்
திருச்சியை சேர்ந்த அவருக்கு சொந்த மாட மாளிகைகள் இருந்தன.. கோச் வண்டியில்தான் செல்வார்.. இவர் சாலையில் சென்றாலே இவரை பார்ப்பதற்கு இருபக்கமும் கூட்டம் நிரம்பி நிற்கும்..
வெள்ளித் தட்டு, வெள்ளி கூஜாவில்தான் சாப்பிட்டு தண்ணீர் குடிப்பார்.. அந்த வெள்ளித் தட்டில் நடுவில் தங்கத்தை இழைத்து போட்டிருப்பார்கள்.. சில்க் ஜூப்பா, அக்தரை பூசிக் கொண்டு வருவார்.. கண் கூசும் அளவுக்கு நல்ல சிவப்பு.. வெற்றி பாக்கு போட்டு வரும்போது உதடும் சிவப்பாக இருக்கும்.. நல்ல குரல் வளம்.
கெட்ட நேரத்தில் சிக்கிய பாகவதர்
தியாகராஜ பாகவதருக்கும் லட்சுமி காந்தன் என்ற பத்திரிகைகாரர் மூலம் கெட்ட நேரம் வந்தது.. நடிகர், நடிகைகள், செல்வந்தர்களின் அந்தரங்க விஷயங்களை பற்றி தன்னுடைய மஞ்சள் பத்திரிகைகளில் எழுதுவார்.. இப்படி கிசுகிசு எழுதியை மிரட்டி பணம் பறிப்பார்.. இதனால் சினிமா நடிகர்கள், நடிகைகள், பணக்காரர்கள் என பலரும் ஆத்திரத்தில் இருந்தனர்..
ஒருநாள் வால்டாக்ஸ் சாலையில் ரிக்ஷாவில் லட்சுமி காந்தன் வந்து கொண்டிருந்தபோது 3 பேர் அவரை கத்தியால் குத்திவிட்டனர். இதனால் உடனடியாக ஜி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், டாக்டர் ஒருவர் தாமதமாக வந்ததால், லட்சுமி காந்தன் இறந்துவிட்டார்..
தியாகராஜ பாகவதர், என்எஸ் கிருஷ்ணன், ஸ்ரீராமுலு நாயுடு என்ற பட தயாரிப்பாளர் இவர்கள் 3 பேருமே முதன்மை குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்து, ஆயுள் தண்டனை தந்து சிறையில் தள்ளியது..
மாறிய சினிமா உலகம்
அன்றிருந்த அத்தனை கட்சிக்காரர்களும் சேர்ந்து மேற்கண்ட 3 பேரையும் விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.. இந்தியாவில் அன்று சுப்ரீம் கோர்ட் இல்லாததால், லண்டன் பிரிட்டிஷ் அரசிடம்தான் அப்பீல் கோரப்பட்டது.. இறுதியில் கருணையின் அடிப்படையில் விடுதலையானார்கள்.
இவர்கள் ரிலீஸாகி வருவதற்குள் சினிமா உலகமே மாறிவிட்டது.. வசனங்கள், நாத்திக கருத்துக்கள் போன்றவை இடம்பெற்றுவிட்டன.. ரசிகர்களின் ரசனை மாறியிருந்ததால், 3 படங்களில் பாகவதர் நடித்தும் அவை ஓடவில்லை.. சிறையிலிருந்து வருவதற்குள், பாகவதரின் உறவினர்கள் சொத்தை சூறையாடிவிட்டனர்.. படங்கள் இல்லாமல், சொத்தை இழந்து பிச்சை எடுக்கும் நிலைமைக்கு வந்துவிட்டார்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்
நோயால் பாதிக்கப்பட்டு கண் பார்வையும் பறிபோனது.. பார்வை இல்லாமல்தான் சிவகாமி என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் தினசரி சாயங்காலம் 5 மணிக்கு வந்து பாட ஆரம்பித்துவிடுவார். அதே சேலத்தில்தான் இறந்தார்.. எப்படி வாழ முடியும் என்பதற்கு உதாரணமாக பாகவர் இருந்தாரோ, எப்படி வாழ கூடாது என்பதற்கும் பாகவதர் ஒரு உதாரணமாகும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications