புறக்கணிக்கப்படும் குமரி மாவட்டம்!
குமரி மாவட்டம், எல்லாவிதத்திலும் நல்ல வளமும், மக்களும், ஆய்வாளர்களும், படித்தவர்களும் நிறைந்த மாவட்டம். இந்தியாவிலேயே கல்வியறிவில் முதலிடம் வகிக்கும் பெருமைக்குரிய மாவட்டம் கூட.
இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில். ஒரு மாவட்டத்தின் தலைநகர் என்று சொல்லிக் கொள்ளும் படியாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத நகரம்!
நாகர்கோவிலின் மையப்பகுதிக்கு ஒரு வெளிநாட்டுக்காரர் வந்தால், அங்கேயே மயக்கம் போட்டு விழுந்து விடுவார். அந்த அளவிற்குத் தேசியச் சாலைகள் என்ற பெயரில் இருக்கும் குறுகிய சந்துகளில் வாகனங்களின் நெரிசல்!
1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இம்மாவட்டத்தில் ஏதாவது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வந்துள்ளதா என்றால், இல்லை என அடித்துச் சொல்லலாம்.
மாநிலத்தையே தலைநிமிர்ந்து நிற்க வைக்கும் சுற்றுலாத் தலங்களிலிருந்து அனைத்து வசதிகளையும் ஒருங்கே பெற்ற இம்மாவட்டம், அனைத்து ஆட்சியாளர்களாலும் காலம் காலமாகப் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது.
மாநிலத்தின் தலைநகரம் என்ற பெயரில் அனைத்து முன்னேற்றமும் சென்னையை மையப்படுத்தி முன்னெடுக்கும் ஆட்சியாளர்கள், மாநிலத்தின் வருவாயில் மிகப் பெரியதொரு பங்கினைச் சுற்றுலா மூலம் கொடுக்கும் குமரி மாவட்டத்தைப் புறக்கணிப்பதன் காரணம் ஏனோ?
மாவட்டத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கை வகிக்கப் போகும், குமரி மக்களால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் குளச்சல் துறைமுகத் திட்டம் இதோ வருகிறது, அதோ வந்து விட்டது என்று எல்லா அரசியல் தலைவர்களும் தேர்தல் காலங்களில் கூப்பாடு போடுவதோடு சரி.
இதுவரை வந்த பாடில்லை. ஏன் இந்த ஓரவஞ்சனை? தென் மாவட்டம் தேய்கிறது, வட மாவட்டம் ஓங்குகிறது! இதுதான் உண்மை.
குமரி மாவட்டத்தை ஆட்சியாளர்கள் புறக்கணிப்பதன் மகுடமாக, முதல்வர் கருணாநிதி கூறியதாக கூறப்படும், "நெல்லை எனக்கு எல்லை; குமரி எனக்குத் தொல்லை" என்ற வாக்கியம் குமரியில் பிரபலம்.
இதனை அவர் கூறினாரோ இல்லையோ, தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்கள் குமரி மாவட்டத்தின் முன்னேற்றத்தில் காட்டும் அக்கறையைக் காணும் போது, கலைஞர் மட்டுமல்ல, அனைத்து ஆட்சியாளர்களுக்கும் இது தான் நினைப்பு என்று நினைக்கத் தோன்றுகிறது.
என்ன வளம் இல்லை இந்தக் குமரி மாவட்டத்தில்? படித்தவர்கள் இல்லையா? வசதி இல்லையா? மனிதவளம் இல்லையா? இயற்கை வளம் இல்லையா? அனைத்தும் கணக்கில்லாமல் குவிந்துக் கிடக்கிறது! ஆனால், அதனை நல்லமுறையில் பயன்படுத்தத்தான் எவருக்கும் மனதில்லை! கிடைப்பதைச் சுருட்டுவதோடு சரி!
அரசியல் பலம் மிக்கத் தலைவர்கள் எண்ணற்றோர் குமரி மாவட்டத்தில் இருந்து வந்த பின்னரும், தொடர்ந்து குமரி புறக்கணிக்கப்படுவதன் காரணம் என்ன? எல்லாம் சென்னை தலைவர்களுக்கு ஆமாம் சாமி தலை ஆட்டுபவர்களாக இருக்கும் பட்சத்தில், மக்கள் இனி போராட்டத்தைத் தான் கையில் எடுக்க வேண்டும்.