For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக சாரணர் தினம்

By புன்னியாமீன்
Google Oneindia Tamil News

Baden Powell
வருடந்தோறும் ஆகஸ்ட் 01ம் உலக சாரணர் தினம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ரீதியிலான சாரணர்களும், சாரணியத்தின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவுகூரும் தினமாக உலக சாரணர் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. பொதுவாக ஆகஸ்ட் முதலாம் தேதி என சில நாடுகளில் இத்தினம் சிறப்புத்தன்மை பெற்றாலும்கூட, ஜுலை மாத இறுதி வாரமும், ஆகஸ்ட் முதலாம் வாரமும் சாரணியத்தைப் பொருத்தவரையில் முக்கியமான நாட்களாகும். 1907ம் ஆண்டு ஜுலை மாதம் 28ம் தேதி சாரண இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும், தன்னலமற்ற மனித நேயமிக்க சேவையுணர்வை உலகில் விதைத்திட்ட 'சேர். றொபர்ட் ஸ்டீவன் ஸ்மித் பேடன் பவல்" என்பவரால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. லண்டன், பிரவுண்ரு தீவில் முதலாவது சாரணிய இயக்க மகாநாடும், சாரணியப் பாசறையும், ஆகஸ்ட் முதலாம் தேதி தொடக்கம் ஆகஸ்ட் ஆறாம் தேதி வரை நிகழ்ந்தது.. எனவே, முதலாவது சாரணிய இயக்கப் பாசறை நடைபெற்ற தினத்தை அடிப்படையாகக் கொண்டே உலக சாரணியர் தினம் கொண்டாடப்படுகின்றது.

சமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கான பயிற்சிக்களமாகக் கல்விச்சாலைகளில் மாணவ, மாணவியர்களுக்கான சாரணர் இயக்கம் உலகளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சாதி, மத வேற்றுமை கடந்து சகோதர மனப்பான்மையுடன் சமூகத்தை அணுகுவதற்கான நல்ல பண்பாட்டினை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறது. வயது வந்தோர்க்கான கல்வி, சாலை விதிமுறைகளை மேற்கொள்ளுதல், விழா நடைபெறும் காலங்களில் கூட்டத்தினைக் கட்டுப்படுத்துதல், மரங்களை நடுதல் போன்ற பணியினைச் சாரணர் இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.

வாய்மை, நேர்மை, நம்பகத்தன்மை, தேசப்பற்று, நேசம் ஜீவகாருண்யம், மரியாதை, தைரியம் போன்ற இன்னோரன்ன ஆளுமை விருத்தியம்சங்களைக் கொண்டு மனித நேயப்பண்புகளுடன் சேவைகள் மூலம் சமூகத்துடன் ஒன்றிணைந்த அமைப்பாக மிளிரும், 'எதற்கும் தயாராக இரு! " எனும் தொனிப் பொருளைக் கொண்ட சாரணிய இயக்கத்தை உருவாக்கிய பிதாவாகக் கருதப்படும் பேடன் பவல், 1857 பெப்ரவரி 22ம் தேதி பிறந்தார். ரெவறண்ட் பேடன் பவல் என்பவரின் மூன்றாவது திருமணத்தில் பிறந்த பத்துக் குழந்தைகளில் எட்டு ஆண்கள். அந்த ஆண்களில் ஏழாவதாகப் பிறந்தவர் பேடன் பவல். இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது இவரது தந்தையார் காலமானார். காலமானவரைக் கௌரவிப்பதற்காகப் பவல் என்றிருந்த குடும்பப் பெயர் பேடன் பவல் ஆக்கப்பட்டது.

புலமைப் பரிசில் பெற்று சார்ட்டார்ஹவுஸ் பாடசாலையில் கல்வி கற்ற பேடன் பவல் 1876இல் பிரித்தானிய இராணுவத்தில் இணைந்தார். இளம் வயதில் இராணுவத்தில் இணைந்து கொண்ட பேடன் பவல் இந்தியா, கனடா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் பணிபுரிந்தார். 1910 இல் ஓய்வு பெற்றார். தென்னாபிரிக்காவில் பணியாற்றிய வேளையில், 1907ம் ஆண்டில் 22 இளைஞர்களுடன் சாரணர் இயக்கத்தை ஆரம்பித்தார்.. லண்டன், பிரவுண்ரு தீவில் முதலாவது சாரணிய இயக்க மகாநாடும் சாரணியப் பாசறையும், இவரால் நிகழ்த்தப்பட்டது. சிறுவர்களுக்கான சாரணீயம் (Scouting for Boys) என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார்.. ஆபிரிக்காவிற்குத் திரும்பிய பேடல் பவுல் தனது புத்தகமான எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங் (Aids to Scouting) வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும் அவை பல இளைய மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுவதையும் கண்டார்.

1910ல் சாரணியம் உலகெங்கும் பரவத் தொடங்கியது. தற்போது உலகில் சாரணர் சங்கங்கள் 216 நாடுகளில் செயல்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கையிலும் பார்க்கக் கூடுதலான நாடுகளில் செயல்படும் தொண்டு நிறுவனமாக சாரணர் அமைப்பு விளங்குகின்றது. உலகம் முழுவதிலும் 38 மில்லியன் சாரணர்கள் உள்ளனர். ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் 18 மில்லியன் சாரணர்கள் உள்ளனர் எனபுள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன..

1912ல் உலக சகோதரத்துவத்தை வளர்க்கும் தூரநோக்கில் உலகப் பயணத்தை பேடன் பவல் மேற்கொண்டார். இதேவேளை அவரது பாரியார் சீமாட்டி 'ஒபேவா பேடன் பவல்" 1910ல் பெண்கள் சாரணியத்தை ஆரம்பித்து உலகெங்கும் வியாபிக்க வழிகோலினார். 1916ல், குருளைச் சாரணர் இயக்கமும், 1918ல் ரோவர்ஸ் சாரணர் இயக்கமும் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இன்று சாரணியர் இயக்கமும், பெண்கள் சாரணிய இயக்கமும் சமுதாய வளர்ச்சிக்காகப் பாடுபடுகின்றன. இவை எதிர்காலச் சமூகத்திற்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகின்றது. உலக சகோதரத்துவத்தை இலட்சியமாகக் கொண்ட சாரணியத்தின் மூலமாக உலக நாடுகளில் சமாதானத்தையும், ஒற்றுமையையும் கட்டியெழுப்புதல் வேண்டும், என்பதே இன்றைய எதிர்பார்ப்பாகும். பேடன்பவல் தனது இறுதிக்காலத்தில் துணைவியாரோடு ஆபிரிக்காவில் வசித்தார். 1941-01-08ம் நாள் காலமானார்.

1920ல் உலக சாரணர்களை ஒன்றிணைத்து, சாரணர் ஜம்போரி ஒன்றை தனது தலைமையில் இங்கிலாந்தில் கொண்டாடினார். இந்நிகழ்வு 1920-08-06ம் தேதி இடம்பெற்றது. அந்நாளில் பேடன்பவல் உலகின் பிரதம சாரணர் எனப் பிரகடனப்படுத்தப்பட்டார். இவரை இங்கிலாந்தின் 5ம் ஜோர்ஜ் மன்னர், 'கில்வெல் பிரபு" எனப் பெயர்சூட்டி, பாராட்டிக் கெளரவித்தார். அன்று முதல் நான்காண்டுகளுக்கு ஒருமுறை சாரணர் ஜம்போரி உலக நாடுகளில் நிகழ்கின்றது.

இன்று உலகில் பெருமளவு நாடுகளில் பலகோடி சாரணர் இயக்கங்கள் உருவாகி, பேடன் பவல் பிரபுவின் தூரநோக்கை நிறைவேற்றி வருகின்றமை, நிறைவளிக்கின்றது. சாரணியர் அமைப்பு உலகமயப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். சாரணர் இயக்கத்தில் ஜம்போரிப் பாசறைகள் முக்கியத்துவம் பெற்றவை. சாரணர் உலக ஜம்போரிகளில், உலகளாவிய ரீதியில் சாரணர்கள் ஒன்றிணைக்கப்பட்டு பயிற்சிக்கும், செயற்பாட்டிற்கும், கடமையுணர்வு, நற்புணர்வு ஆகியவற்றிக்கு ஏற்ற வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும். ஆரம்பகாலங்களில் ஜம்போரிகளில் உலகளாவிய சாரணர்கள் ஒன்றிணைக்கப்பட்டனர். தற்போதைய நாடுகளில் அளவிலும் பிரதேச, பிராந்திய ரீதியிலும் தலைமைத்துவம் ஏற்றுள்ள சாரணியத்தில் சாதனை படைத்துள்ள சாரணர்களே ஜம்போரியில் வரையருக்கப்படுகின்றனர்.

முதலாவது சாராணியர் உலக ஜம்போரி (உலக சாரணியர்களை ஒன்றிணைக்கும் பாசறை) 1920ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஒலிம்பியா எனுமிடத்தில் நடைபெற்றது. முதலாவது உலக ஜம்போரியில் 34 நாடுகளைச் சேர்ந்த சுமார் 8, 000 சாரணியர்கள் கலந்து கொண்டனர். இரண்டாவது உலக ஜம்போரி, 1924ஆம் ஆண்டு டென்மார்;கில் நடைபெற்றது. இதில் சுமார் 5, 000 சாரணியர்கள் கலந்து கொண்டனர்.

1929ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்றாவது உலக ஜம்போரில் 69 நாடுகளைச் சேர்ந்த சுமார் 50, 000 சாரணியர்கள் கலந்துகொண்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. தொடர்ந்து நான்காவது உலக ஜம்போரி 1933ஆம் ஆண்டு ஹங்கேரியிலும் (25, 792 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), ஐந்தாவது உலக ஜம்போரி 1939ஆம் ஆண்டில் ஹொலன்டிலும் (28, 750 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), ஆறாவது உலக ஜம்போரி 1947ஆம் ஆண்டு பிரான்சிலும் ( 24, 152 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), ஏழாவது உலக ஜம்போரி 1951ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிலும் ( 12, 884 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), எட்டாவது உலக ஜம்போரி 1955ஆம் ஆண்டு கனடாவிலும் (11, 139 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), 80 நாடுகளிலிருந்து சுமார் 30, 000 பேர் கலந்துகொண்ட ஒன்பதாவது உலக ஜம்போரி 1957ஆம் ஆண்டு இங்கிலாந்திலும் 44 நாடுகளிலிருந்து 12 ,203 பேர் கலந்துகொண்ட பத்தாவது உலக ஜம்போரி 1959ஆம் ஆண்டு பிலிப்பைன்சிலும் 14, 000 சாரணியர்கள் கலந்துகொண்ட, பதினொறாவது உலக ஜம்போரி 1963ஆம் ஆண்டு கிரேக்கத்திலும், பன்னிரெண்டாவது உலக ஜம்போரி 1967ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவிலும் நடைபெற்றன. ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற இந்த ஜம்போரியில் 105 நாடுகளைச் சேர்ந்த 12, 011 சாரணியர்கள் பங்கேற்றுள்ளனர்.

பதின்மூன்றாவது உலக ஜம்போரி 1971ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்றது. இந்த ஜம்போரியில் 87 நாடுகளைச் சேர்ந்த 23, 758 சாரணியர்களும், 1975ஆம் ஆண்டு நோர்வேயில் நடைபெற்ற 14வது உலக ஜம்போரியில் 91 நாடுகளைச் சேர்ந்த 17, 259 சாரணியர்களும், பங்கேற்றுள்ளனர். 15வது உலக ஜம்போரி ஈரானில் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும், ஈரானில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகள் காரணமாக அந்த ஜம்போரி நடைபெறவில்லை. இதனால் 15வது உலக ஜம்போரி 1983ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்றது. இதில் 14, 752 சாரணியர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 1987-1988 இல் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 16வது உலக ஜம்போரியில் 84 நாடுகளைச் சேர்ந்த 14, 434 சாரணியர்களும், 1991 இல் கொரியாவில் நடைபெற்ற 17வது உலக ஜம்போரியில் 135 நாடுகளைச் சேர்ந்த சுமார் 20.000 சராணியர்களும், 1995 இல் நெதர்லாந்தில் நடைபெற்ற 18வது உலக ஜம்போரியில் 166 நாடுகளைச் சேர்ந்த 28, 960 சாரணியர்களும், 1998-1999 20ஆம் நூற்றாண்டில் கடைசியாக சிலி நாட்டில் நடைபெற்ற 19வது உலக ஜம்போரியில் 157 நாடுகளைச் சேர்ந்த சுமார் 31, 000 சராணியர்களும், 21ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற முதலாவது ஜம்போரி 2002-2003 இல் தாய்லாந்தில் நடைபெற்றது. இந்த 20வது உலக ஜம்போரியில் 147 நாடுகளைச் சேர்ந்த சுமார் 24. 000 சாரணியர்கள் கலந்து கொண்டனர். சாரணியம் உருவாக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் நேரத்தில் 21வது உலக சாரணிய ஜம்போரி இங்கிலாந்தில் 2007ஆம் ஆண்டு நடைபெற்றது. மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த ஜம்போரியில் 147 நாடுகளைச் சேர்ந்த சுமார் 24, 000 சாரணியர்கள் பங்கேற்றனர்.

22வது உலக ஜம்போரி 2001இல் சுவீடன் நாட்டிலும்ää 23வது உலக ஜம்போரி 2015ஆம் ஆண்டு ஜப்பானிலும், 24வது உலக ஜம்போரி 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்;பட்டுள்ளன.

சாரணிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட பலர, ; இன்று உலகில் பலதுறைகளிலும் பெயர் பதித்திருப்பதைக் காணலாம். உதாரணமாக, முதன்முதலாக சந்திரனில் காலடியெடுத்து வைத்த நீல்ஆம்ஸ்ரோங் ஒர் சாரணியரே இவர் அமெரிக்காவின் Eagle Scout விருது பெற்றவர். நிலவில் இதுவரை காலடி பதித்து நடந்த 12 பேரில் 11 பேர் சாரணர்கள் .(ஆம்ஸ்ட்ராங்குடன் சென்ற ஆல்டிரின் உட்பட). 1959 லிருந்து இதுவரை 214 பேர் விண்வெளி விஞ்ஞானிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களில் 125 பேர் சாரணர்கள். ஜெமினி 7, ஜெமினி 12, அப்பல்லோ 8, அப்பல்லோ 13, ஆகிய விண்கலன்களில் சென்று வந்தவர், NASA வின் தலைவராக இருந்தவர் ஜேம்ஸ் லோவல் ஒரு சாரணர். உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஜனாதிபதி ஜான் F கென்னடி ஒரு Cub Scout ஆக இருந்தவர். அமெரிக்க ஜனாதிபதிகள் வரிசையில் பில் கிலிண்ட்டன், ஜார்ஜ் புஷ் போன்றோர்களும் சாரணர்களே. உலகப் புகழ் பெற்ற Microsoft Computer நிருவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் பில் கேட்ஸ் ஒரு சாரணர். இவ்வாறான பல சாரணியர்கள் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

இலங்கை சாரணர் சங்கம் 2012ம் ஆண்டில் நூற்றாண்டு நிறைவைக் காணவிருக்கின்றது. ஆனால், உலக சாரணர் சங்கத்தில் அங்கத்துவம் பெறுவதற்கு எமது சங்கத்தில் ஒரு இலட்சம் சாரணர்கள் உறுப்புரிமை பெறவேண்டும். இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினரே தற்போது இலங்கை சாரணர் சங்கம் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

2012 ஆம் ஆண்டிற்குள் இலங்கை சாரணர் சங்கத்தின் உறுப்பினர்களை ஒரு இலட்சமாக்குவதற்கான திட்டம் ஒன்று கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 1907 இல் உலகில் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கம் இலங்கையில் ஐந்து ஆண்டுகள் கழித்து 1912 இல் கிறீன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

1912ல் இலங்கையில் சாரணர் இயக்கம் மாத்தளை கிறிஸ்து அரச கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. 1917 மார்ச் 21ல் கண்டி பெண்கள் உயர் பாடசாலையில் பெண்கள் சாரணியம் உருவாக்கப்பட்டது. உலக சாரணியப் பொது அமைப்பின் ஒரு பகுதியாக ஆசிய பசுபிக் பிராந்தியமுள்ளது.. உலகில் இது பரந்துபட்ட பிராந்தியமாகும். இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் பெருமளவு சனத்தொகையும் கொண்டுள்ளதுடன் அரசியல் பொருளாதார கல்வி சமூக கலாசாரம் என்பவற்றிலும் முன்னேறி வரும் நாடுகளாகும். இந்நாடுகளிலுள்ள தேசிய சாரணர் இயக்கங்கள் ஒன்றிணைந்து ஆசிய-பசுபிக் பிராந்திய அமைப்பினை உருவாக்கியுள்ளன. இலங்கையும் இவ்வமைப்பில் இணைந்து தனது பங்களிப்பினைப் புரிந்து வருகின்றது. 1921ம் 1934ம் ஆண்டுகளில்,தனது மனைவியோடு பேடன்பவல் இலங்கைக்கு விஜயம் செய்து பல சாரணிய நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X