சேது சமுத்திர திட்டம் : சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் பேசியது என்ன? முழு விவரம்!
சென்னை: சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களான வேல்முருகன், ஜவாஹிருல்லா, செல்வ பெருந்தகை, நயினார் நாகேந்திரன், ஓ.பன்னீர்செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
தமிழ்நாடு சட்டசபையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 150 ஆண்டு காலக் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்ற தீர்மானத்தை இம்மாமன்றத்தில் முன்மொழிவதை வரலாற்றுக் கடமை என்று நான் கருதுகிறேன். பேரறிஞர் அண்ணா அவர்களுடைய கனவுத் திட்டம் அது. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றப் பாடுபட்ட திட்டம் அது. பாக் நீரினையையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயர்தான் சேதுசமுத்திரத் திட்டம்.

இந்தியாவினுடைய முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தலைமையில் 1963 ஆம் ஆண்டு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இடம்பெற்ற திட்டம் இது. 1967 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், 'தம்பிக்கு' எழுதிய மடலில் இத்திட்டதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். 'சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றினால், வர்த்தகம் பெருகும். இலங்கையைச் சுற்றிக் கொண்டு கப்பல் போக வேண்டிய நீளம் குறையும். இங்கேயுள்ள மீனவர்களின் வாழ்வு செழிக்கும். தமிழ்நாடு எல்லா வளமும் கொண்ட நாடாக மாறும்' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதினார்கள். இத்திட்டத்தை நிறைவேற்றித் தருவதற்கு எழுச்சி நாள் கொண்டாடுவது என்றும் அறிவித்தார்கள்.
1972 ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுக நுழைவு வாயிலில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சிலையைத் திறந்து வைக்க பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் வந்தபோது, அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இதனை வலியுறுத்தினார். தூத்துக்குடி துறைமுகத்தின் பயன் மேலும் வளர வேண்டுமானால், சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் மிகமிக அவசியம் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வலியுறுத்திப் பேசினார்கள்.
1998 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்கள், இத்திட்டத்துக்கான திட்டப் பணிகளுக்காக நிதியினை ஒதுக்கினார். பா.ஜ.க. ஆட்சியில்தான் சேதுசமுத்திரத் திட்டத்துக்கான பாதை எது எனத் தீர்மானிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு ஒன்றிய அளவில் ஆட்சி மாறி, காங்கிரஸ் தலைமையில் தி.மு.க.வை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி மலர்ந்த பிறகு 2,427 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, திட்டப் பணிகள் பாதியளவு முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க. சார்பில் இத்திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது என்பதும், இத்திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் அம்மையார் அவர்கள் திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இத்திட்டத்துக்கு எதிராக வழக்குப் போட்டார் என்பதையும் இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். இந்த அரசியல் முட்டுக்கட்டை போடும் செயல் மட்டும் நடக்காமல் இருந்தால் இத்திட்டம் தொடங்கப்பட்டு பத்தாண்டு காலத்தில் ஏராளமான பயன் கிடைத்திருக்கும்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சுட்டிக் காட்டியதைப் போல, நாட்டினுடைய அந்நியச் செலாவணி வருவாய் அதிகரிக்கும்; தமிழ்நாட்டிலே தொழில் வணிகம் பெருகும்; கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும்; தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில துறைமுகங்களில் சரக்குகளைக் கையாளும் திறன் அதிகரிக்கும்; சிறுசிறு துறைமுகங்களை உருவாக்க முடியும்; சேதுக் கால்வாய் திட்டத்தின்கீழ், மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதால், கடல்சார் பொருள் வர்த்தகம் பெருகி, அதன் காரணமாக மீனவர்களுடைய பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் உயரும். மீனவர்களுடைய பாதுகாப்பைக் கணக்கில் கொண்டுதான் இந்தத் திட்டத்தினுடைய காரியங்கள் நடைபெறுகின்றன. மன்னார் வளைகுடாவில் இருந்து பாக் கடல் சென்று வர மீனவர்களுக்கு இந்தக் கால்வாய் வசதி அளிக்கும். இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறைமுகங்களில் இந்திய சரக்குகள் பரிமாற்றம் செய்வது தடுக்கப்படும். நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும். இத்திட்டத்தினால் மிக முக்கியமாக, ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும். இவை எல்லாம்தான் அப்போது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சுட்டிக்காட்டியவை. இவை அனைத்தும் நடந்திருக்கும். நடக்காமல் போனதற்கான அரசியல் காரணங்களை நான் விரிவாகப் பேச விரும்பவில்லை.
தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவு திட்டமான சேது சமுத்திரத் திட்டம் தொடர்புடைய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவோம் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு சொல்லி இருக்கிறது. ஆனால் ''ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம்" என்று ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார். இத்தகைய நிலைப்பாட்டுக்கு பா.ஜ.க. அரசு வந்துள்ள நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தைப் போராடியும் வாதாடியும் செயல்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை இப்பேரவையின் சார்பில் நிறைவேற்றித் தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்! பேரவைத் தலைவர் அவர்களே! சேது சமுத்திரம் திட்டம் தொடர்பான தீர்மானத்தை நான் இப்பொழுது முன்மொழிகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழ்நாடு சட்டசபையில், சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்: ''தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேது சமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது. 1860 ஆம் ஆண்டு 50 இலட்சம் ரூபாயில் Commander Taylor என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. அதன்பிறகு 1955-ல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ஏ. இராமசாமி முதலியார் குழு, 1963-ல் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம், 1964-ல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்திரசிங், ஐ.சி.எஸ் தலைமையிலான உயர்நிலைக் குழு - ஆகிய பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டு காலம் ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டதுதான் சேது சமுத்திரத் திட்டமாகும். இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது பிரதமராக இருந்த மாண்புமிகு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் "Feasibility Study"-க்கு அனுமதியளித்தார்கள். அப்போதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னர் ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் 2004 ஆம் ஆண்டு 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி அவர்களும் முன்னிலை வகிக்க இந்தத் திட்டத்தை பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் 2-7-2005 அன்று துவக்கி வைத்தார்கள். திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் இத்திட்டத்துக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களைச் செழிக்க வைக்கக்கூடிய இந்தத் திட்டத்துக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இந்த சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. எந்தக் காரணத்தைக் கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ, அதையே நிராகரிக்கக்கூடிய வகையிலே, தற்போது "இராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதைக் கூறுவது கடினம்" என்று ஒன்றிய அமைச்சர் மாண்புமிகு ஜிதேந்திர சிங் அவர்கள் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார்.
இப்படி ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில், சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு - வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதி, இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது. இனியும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது. எனவே, மேலும் தாமதமின்றி இந்த முக்கியமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட, ஒன்றிய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்றும் இந்த மாமன்றம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.'- இந்த தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று அனைவரையும் கேட்டு அமைகிறேன் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
இத்தீர்மானத்தின் மீது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பேசியதாவது: வேல்முருகன்(தமிழக வாழ்வுரிமைக் கட்சி): 150 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் சிறு கப்பல்கள் வந்து போவதற்கும், இலங்கையை தவிர்த்து கப்பல் செல்லாமல் இருக்கவும் வாய்ப்பு உருவாகி இருக்கும்.தற்போது இத்திட்டத்தை முதலமைச்சர் நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது.
ஜவாஹிருல்லா (ம.ம.க): தமிழருக்கு மிகப் பெரிய அளவில் உதவி செய்யக் கூடிய சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடக் கூடாது. அதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முயற்சியை மனதார வரவேற்கின்றேன்.
நாகை மாலி (சிபிஎம்):சேது கால்வாய் திட்டத்தை ராமர் பாலம் என்று சொல்லி ராமர் பெயரை சொல்லி ஒன்றிய அரசு கிடப்பில் போட்டுவிட்டது. கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் நம்பிக்கைகளையும் சிலர் வரலாறு என சொல்கின்றனர். மக்கள் இதை நம்பவேண்டும் என முயற்சிக்கின்றனர். கட்டுக் கதைகளும் கற்பனைகளும் நம்பிக்கைகளும் வரலாறாகாது. ராமாயணம் ஒரு மகத்தான இலக்கிய படைப்பு. கம்பனின் கவித்திறன் இதில் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் இது ஒரு கற்பனை காவியமாகும். இதை மகாத்மா காந்தி சொல்கிறார். ஜவஹர்லால் நேரு, ராமாயணம் ஒரு கற்பனை காவியமே என்கிறார். ராஜாஜி, ராமாயணம் ஒரு கற்பனை காவியமே என்று சொல்கிறார். வரலாறு வேறு; உண்மை வேறு. நம்பிக்கை வேறு. தற்போது, மத்திய அமைச்சரே சேது சமுத்திரத்தில் ராமர் பாலம் இருந்ததற்கு எந்த அடையாளமும் இல்லை என்று சொல்லி இருக்கிறார். இது தமிழர்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி
நயினார் நாகேந்திரன் (பாஜக): ராமரை நாங்கள் தெய்வமாக வழிபடுகிறோம். அப்படி இருக்கும் போது ராமாயணம் கற்பனை என்றெல்லாம் நீங்கள் சொல்ல கூடாது. ராமர் பாலம் கட்டினாரா என்று தெரியாது.. இது தெய்வ நம்பிக்கை தொடர்பானது. இதை எல்லாம் எப்படி அனுமதிக்க முடியும். சேது சமுத்திர திட்டம் வந்தால் உண்மையில் நான்தான் மகிழ்ச்சி அடைவேன். நான் தென் மாவட்டத்தை சேர்ந்தவன். தென் மண்டலம் இதனால் வேகமாக வளர்ச்சி அடையும். தென் மண்டலத்தில் கடல் வழி போக்குவரத்து எளிமையாக்கும். இதனால் தென் மண்டலம் வளம் பெறும். அதனால் இந்த திட்டத்தால் அதிகம் சந்தோசம் அடையும் நபராக நான்தான் இருப்பேன். முதலில் வாஜ்பாய் காலத்தில் இதற்காக சோதனைகள் செய்யப்பட்டன. இங்கே பெரிய டீம் ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவில் திட்டத்தை எப்படி நிறைவேற்றலாம் என்று ரிப்போர்ட் தயாரிக்கப்பட்டது. அதன்பின் மன்மோகன் சிங் காலத்தில் இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. கருணாநிதி இதற்காக குரல் கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து அந்த திட்டம் பற்றி பேசி வந்தார். ஆனால் இந்த பகுதி ஆழம் இல்லாத பகுதி. இங்கே மண் எடுக்க எடுக்க மண் சரியும். இதனால் இங்கே கட்டுமானம் செய்வது மிகவும் கடினம். இங்கே பெரிய ஆழம் இல்லை. பக்கத்திலேயே மண்டபம் இருக்கிறது. அதனால் இங்கே போக்குவரத்து மிகவும் கடினம். அதேபோல் இது தெய்வமாகி மதிக்கப்படும் ராமர் கட்டியதாக நம்பப்படும் பாலம். அதை எல்லாம் நினைவில் வைத்து இங்கே கட்டுமானத்தை தொடங்க வேண்டும்.இந்த திட்டத்தை கொண்டு வந்தால் எங்களை விட யாரும் அதிகமாக மகிழ்ச்சி அடையமாட்டார்கள். ராமர் பாலத்திற்கு சேதமில்லாமல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற வேண்டும். அதை எல்லாம் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை கொண்டு வந்தால் அதற்கு பாஜக ஆதரவு தரும். இங்கே இருக்கும் கட்டுமான பலத்தை ஆய்வு செய்ய வேண்டும். முறையாக ஆய்வு செய்த பின்பே இந்த திட்டத்தை கொண்டு வர முடிவு செய்தோம். அதனால் இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.
ஜிகே மணி (பாமக): ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் இது ஒரு வளர்ச்சி திட்டம். இது இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டு திட்டம் என்பதை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்; இதற்கு முதலமைச்சர் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு பாமக எப்போதும் ஆதரவு தெரிவிக்கும்.
ஓ.பன்னீர்செல்வம்: முதலமைச்சரின் தீர்மானத்தின் அடிப்படையில் சாதகங்களை பேசி வலு சேர்க்க வேண்டும், ஆதரவு கேட்க வேண்டும், கடந்த காலங்களில் பல்வேறு கருத்துக்கள் அரசியல் கட்சியினர் தெரிவித்திருப்பார்கள் அதை பேசுவதற்கு இது நேரமல்ல.இந்த திட்டம் வரவேற்க கூடிய ஒன்று. சாதக, பாதகங்களை ஆய்வு செய்து நிறைவேற்ற வேண்டும்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ராமாயணம் குறித்தெல்லாம் இங்கு பேசியுள்ளனர். சுண்டல் கொடுப்பது போல இத்திட்டம் முடிந்து விடக்கூடாது என்றெல்லாம் இங்கு பதிவாகியுள்ளது. 2024-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இந்த செயல்படுத்தப்படும். இவர்கள் செய்யவில்லை என்றாலும் புதிய அரசு திட்டத்தை செய்யும்.
பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக): சில பேர் யாரையோ திருப்திபடுத்துவதற்காக, உலகத்தின் 100 கோடிக்கும் மேல் மக்கள் பின்பற்றுகிற ராமர் என்கிற கதாபாத்திரம் கற்பனையானது என இந்த சபையில் பதிவாகி இருப்பது எங்களது மனதை புண்படுத்துவதாக இருக்கிறது. சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். 100 கோடிக்கும் மேல் மக்கள் பின்பற்றுகிற ஒரு மதத்தின் நாயகன் ராமர். ஒருநாளைக்கு ஆயிரம் முறை ராமா ராமா என உச்சரிக்கிறோம். ராமர் ஒரு கதாபாத்திரம் என சொல்வதற்கு இது என்ன சினிமாவா? ராமர் ஒரு அவதாரப் புருஷர். ஆகையால் ராமர் கற்பனை பாத்திரம் என்பதை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு சட்டசபையில் அரசியல் கட்சித் தலைவர்கள் உரையாற்றினர்.
-
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications