ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம் பாஜக வெற்றி வாய்ப்பை பாதிக்குமா?
டெல்லி: அசைக்க முடியாத சக்தியாக பாஜக இருக்கிறது என்று அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறும் நிலையில்தான், பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளன எதிர்க்கட்சிகள். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது தான் அந்த பிரம்மாஸ்திரத்தின் பெயர்.
இந்துத்துவா என்ற பெயரில் அனைத்து ஜாதியினரையும் ஒரே வாக்கு வங்கியாக மாற்றி வருகிறது பாஜக. இதனால் ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டும் தான் பலன் கிடைக்கிறது என்பதை காட்டுவது போல் அமைந்துவிட்டது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு. இதை அனைத்து மாநிலங்களும் செய்யும்போது "இந்துவாக ஒன்றிணைவீர்கள்" என்ற பாஜகவின் கோஷம் வலு இழக்க தொடங்க கூடும்.

இதன் வீரியத்தை உணர்ந்துதான் "இந்தியாவை ஜாதி ரீதியாக எதிர்கட்சிகள் பிளவு படுத்துகின்றன" என்று பேசி அதிரடியை அடுத்த நாளே ஆரம்பித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
வட இந்தியாவின் பல மாநிலங்களிலும்.. தென்னிந்தியாவின் சில மாநிலங்களிலும் கூட, நரேந்திர மோடியின் செல்வாக்கு வளர்ந்து விட்டதாக பல கருத்துக்கணிப்புகள் கூறும் நிலையில், ஜாதி வாரி கணக்கெடுப்பு இதை வீழ்த்தி விட முடியுமா என்பதுக் கேள்விக்குறிதான். ஆனால் அசைத்து விட முடியும் என்று நம்புகின்றன எதிர்க்கட்சிகள்.
இதை அப்படியே கடந்து சென்று விட வேண்டும் என்று நினைக்கிறது பாஜக. ஆனால் 5 மாநில தேர்தல் நெருங்கும்போது நாடு முழுக்க இந்த குரல் எழுந்தால் என்ன செய்ய, அதற்கு பதில் என்ன, என்று தேடுதலையும் தொடங்கி இருக்கிறது. சில பந்துகளை அடிப்பதா, அப்படியே விடுவதா என்ற குழப்பம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்படும். பாஜகவிற்கு இந்த விஷயம் அப்படித்தான்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது, பாஜகவுக்கு எதிரான ஆயுதம் என்பதை உணர்ந்துதான் பீகாரில் ஜாதிவாரி கணக்கு வெளியான உடனேயே, நாடு முழுவதும் இந்த மாதிரியான கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார். பிரியங்காவும் இதை லேசில் விடுவதாக இல்லை.
5 மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் லோக்சபா தேர்தலில் இந்த விவகாரம் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பை தடுக்குமா , தடுக்காதா, அல்லது சீட் எண்ணிக்கையில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமா, உங்கள் கருத்து என்ன பதிவிடுங்கள் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications