பேனரை கவனிச்சீங்களா? நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் திமுக உண்ணாவிரதம்.. முழங்கிய திமுகவினர்!
மதுரை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரையில் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் அருகே ஆயிரக்கணக்கான திமுகவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த 20ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெற்ற நிலையில் மதுரையில் மட்டும் இன்று நடக்கிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

நீட் தோ்வை தடை செய்யாத மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. ஆனால், மதுரையில் மட்டும் அன்றைய தேதியில் உண்ணாவிரதம் நடைபெறவில்லை. அன்று மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்றதால், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் மட்டும் வேறொரு தேதியில் உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது
மதுரையில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் 23ஆம் தேதி நடைபெறும் என்று திமுக அறிவித்தது. பின்னர் மீண்டும் இந்த உண்ணாவிரத தேதி ஆகஸ்ட் 24க்கு மாற்றப்பட்டது. அதன்படி, மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெறுகிறது.

திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கோ.தளபதி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பாஜக அரசையும், தமிழ்நாடு ஆளுநரையும் கண்டித்தும் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து அவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் உரையாற்றினர்.

உண்ணாவிரத பந்தலில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா உள்ளிட்டவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், இதில் பங்கேற்ற மாணவரணியினர் பலர் அனிதாவின் படம் அச்சிடப்பட்டிருந்த டி.ஷர்ட் அணிந்திருந்தனர். மதுரை மாவட்ட தி.மு.கவினர் ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications