விடிந்தால் டாலருக்கு திருவோடு தூக்கிக் கொண்டு...:
இவ்வாறு விடிந்தாலே டாலருக்கு திருவோடு தூக்கிக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் ஓடிக் கொண்டே இருக்க வேண்டுமா என்று யோசித்த 5 நாடுகளும் பிரிக்ஸ் வங்கியை உருவாக்குவதை விரைவுபடுத்தின.
நேற்று பிரேசிலில் வைத்து இந்த வங்கியின் துவக்கம் அறிவிக்கப்பட்டுவிட்டது. 5 நாடுகளுக்கும் திடீர் திடீரென ஏற்படும் டாலர் பஞ்சத்துக்கு இந்த 50 பில்லியன் டாலர் இருப்பு பெரும் உதவியாக இருக்கும்.
மேலும் சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) இனியும் அமெரிக்கா- ஐரோப்பிய நலன்களை மட்டும் கொண்டு செயல்பட முடியாது. இவர்களிடம் கடன் வாங்கினால் தான் அவர்களுக்கு வட்டி என்ற லாபம் கிடைக்கும். இப்போது இந்த 5 நாடுகளும் தங்களது டாலர் பிரச்சனையை தாங்களே தீர்த்துக் கொண்டு ஐஎம்எப் பக்கம் தலைகாட்டாவிட்டால், அதன் வருமானத்துக்கே பிரச்சனை வரலாம். இதனால் ஐஎம்எப் அமைப்பே மறுசீரமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம். இது அமெரிக்கா-ஐரோப்பா அல்லாத பிற நாடுகளுக்கு பெரும் நலன் பயக்கும்.
இந்த 50 பில்லியன் டாலர் தவிர இந்த 5 நாடுகளும் இணைந்து 100 பில்லியன் டாலர் அவசர கால நிதியையும் (Contingent Reserve Arrangement) உருவாக்க உள்ளன. டாலருக்கு எதிராக ஏதாவது ஒரு நாட்டின் கரன்சியின் மதிப்பு மிக வேகமாக சரியும்போது இந்த அவசரகால நிதி பயன்படுத்தப்படும். பாதிக்கப்பட்ட நாட்டின் கரன்சிகளை இந்த அவசரகால நிதி வாங்கிக் கொண்டு டாலர்களைக் கொடுத்து, அந்த நாட்டின் கரன்சி சரிவை கட்டுப்படுத்தும்.