நீட் தேர்வு.. எக்ஸாம் டைம் எக்ஸ்ட்ரா கொடுத்த NTA! இந்த முறையாவது தேர்வு சரியாக நடக்குமா?
டெல்லி: நீட் வினாத்தாள் லீக் ஆனதால், கடந்த மே மாதம் 3ம் தேதி நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மறு தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மறு தேர்வில் மாணவர்கள் தேர்வெழுத கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்திருக்கிறது.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே-3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதியிருந்தனர். ஆனால் ராஜஸ்தானில் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார் காரணமாக, இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வு வினாத்தாள்கள் லீக் ஆவது இது முதல் முறை கிடையாது. கடந்த 7 ஆண்டுகளில் 70க்கும் அதிகமான முறை பேப்பர் லீக் ஆகியிருக்கிறது.

இப்படி இருக்கையில் இந்த ஆண்டு முதல் நடத்தப்படும் நீட் தேர்வில் அதிரடி மாற்றங்கள் அமல்படுத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது.
அதாவது, இனி நீட்-யுஜி தேர்வு 195 நிமிடங்கள் (3 மணி நேரம் 15 நிமிடங்கள்) நடைபெறும். இதற்கு முன்பு 180 நிமிடங்கள் (3 மணி நேரம்) மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக 15 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முறைகேடுகள் மற்றும் ஆள்மாறாட்டங்களைத் தடுப்பதற்காக பல புதிய பாதுகாப்பு நடைமுறைகளை கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
தேர்வு மையத்திற்குள் நுழையும் போதும், தேர்வு முடிந்து வெளியேறும் போதும் இரண்டு கட்ட பயோமெட்ரிக் (கைரேகை மற்றும் விழித்திரை ஸ்கேன்) சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வித உலோகப் பொருட்களும் இல்லாத எளிய ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். முழுக்கை சட்டைகள், பெரிய பட்டன்கள் கொண்ட ஆடைகள் மற்றும் ஷூ அணிந்து வர அனுமதி இல்லை. சாதாரண செருப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
தேர்வு மையங்களில் AI தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஜாமர்கள் பொருத்தப்பட்டு முறைகேடுகள் முழுமையாகக் கண்காணிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது.
எல்லாம் ஓகேதான். ஆனால், மாணவர்களின் முறைகேட்டை விட.. தேர்வை நடத்தும் டெஸ்டிங் ஏஜென்சியின் முறைகேடுதான் பெரியதாக இருக்கிறதே! என்று பெற்றோர்கள் கூறியுள்ளனர். இனியாவது, தேர்வு சரியாக நடக்குமா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications