ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!
உலகளாவிய தொழில்நுட்ப வரைபடத்தில் தமிழ்நாடு எப்போதுமே ஒரு தனித்துவமான ஆளுமையாகத் திகழ்ந்து வருகிறது. 10-20 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப (IT) புரட்சியைத் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவிலேயே ஐடி சேவை ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு உருவெடுத்தது.
அதேபோல், தற்போது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வாழ்வாதாரத்தையும், உலக வர்த்தகச் சந்தையையும் அடியோடு மாற்றி அமைத்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையிலும் உலகிற்கே முன்னோடியாகத் திகழத் தமிழ்நாடு அரசு ஒரு முக்கியமான திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை அரசுப் பள்ளி மாணவர்களை இன்றே உலகத் தரத்திலான ஏஐ தொழில்நுட்பத்திற்குத் தயார்படுத்தும் நோக்கில், பள்ளி கல்வித் துறை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய கல்வித் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், புதிய கல்வி ஆண்டிற்கான அரசின் தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் புதிய கட்டுப்பாடுகள் குறித்துப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை வெளியிட்டார்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதி-மத ஒழிப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான புதிய விதிகளைப் பட்டியலிட்ட அவர், மிக முக்கியமாக அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உலக அளவிற்கு உயர்த்தும் நவீன தொழில்நுட்பக் கல்வித் திட்டத்தை வெளியிட்டார்.
மாணவர்கள் வெறும் மனப்பாடக் கல்வியையும், மதிப்பெண்களையும் மட்டுமே நம்பியிருக்கும் நிலையை முற்றிலும் மாற்றி, முதற்கட்டமாகத் தமிழகத்தில் உள்ள 5,000 அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (AI), காக்னிட்டிவ் ஏ.ஐ., கோடிங் (Coding), பைதான் (Python), விர்ச்சுவல் ரியாலிட்டி (VR), ஆக்மெண்ட்ட்டட் ரியாலிட்டி (AR) மற்றும் எச்.டி.எம்.எல். (HTML) போன்ற நவீன தொழில்நுட்பப் பாடங்கள் மாணவர்களுக்கு நேரடியாகக் கற்றுக்கொடுக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

இன்குபேஷன் மையங்களாக மாறும் பள்ளிகள்!
இந்த அதிநவீனத் திட்டத்தின் முக்கிய நோக்கம் குறித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "நம் வீட்டுப் பிள்ளைகள் சர்வதேச நிறுவனங்கள் தயாரிக்கும் சாட் ஜிபிடி (ChatGPT) அல்லது கூகுள் ஜெமினி (Google Gemini) போன்ற செயற்கை நுண்ணறிவுச் செயலிகளை வெறும் நுகர்வோராக அல்லது பயனாளர்களாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது.
மாறாக, அவர்களே இது போன்ற புதிய உலகத் தரத்திலான ஏஐ தொழில்நுட்பங்களையும், புதிய கணினி மென்பொருட்களையும் சொந்தமாக உருவாக்கும் இன்குபேஷன் மையங்களாக (Incubation Centres) நமது அரசுப் பள்ளிகள் மாற வேண்டும் என்பது தான் இந்த அரசின் முதன்மை இலக்கு" என்று குறிப்பிட்டார்.
ஆசிரியர்கள்
இத்திட்டத்திற்காகப் புதிய ஆசிரியர்களைத் தனியாக நியமித்து அரசுக்குக் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தாமல், தற்போது பள்ளிகளில் இருக்கும் திறமையான ஆசிரியர்களுக்கே 'டிரைனிங் தி டிரெய்னர்ஸ்' (Training the Trainers) என்ற முறையில் உயர் தொழில்நுட்பப் பயிற்சிகள் முழுமையாக வழங்கப்பட்டு, அவர்கள் மூலமாக மாணவர்களுக்குப் பாடங்கள் கொண்டு சேர்க்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.












Click it and Unblock the Notifications