தமிழகத்தில் குழந்தை தத்தெடுப்பு பதிவுக்கு புதிய வழிகாட்டுதல்.. அனைத்து மதத்தினருக்கும் நல்ல செய்தி
சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினரும் பயன்பெறும் வகையில் குழந்தை தத்தெடுப்பு ஒப்பந்த பதிவுக்கான புதிய வழிகாட்டுதலை பதிவுத்துறை வெளியிட்டிருக்கிறது. இந்து மதத்தினர் மேற்கொள்ளும் சட்டப்பூர்வ தத்தெடுப்புகளுக்கு மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் அனுமதி மற்றும் குழந்தைகள் நல கமிட்டி அனுமதி தேவையில்லை. சிறார் நீதி சட்டம் 2015-ன் நடைமுறைகளும் பொருந்தாது. பிற மதத்தினரை (முஸ்லிம், கிறிஸ்தவர்கள்) பொறுத்தமட்டில் குழந்தையை தத்தெடுக்க விரும்பினால், மத்திய தத்தெடுப்பு வள ஆணையம், குழந்தைகள் நல கமிட்டி மூலமாகவோ அல்லது சிறார் நீதி சட்ட நடைமுறைகளை பின்பற்றியோ தத்தெடுப்பு பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. அவரது சகோதரருக்கு 3 குழந்தைகள். அவரின் சகோதரர் சமீபத்தில் இறந்த நிலையில், அவரது 8 வயது மகனை தத்தெடுக்க முடிவு செய்தார். மகனை தத்து கொடுக்க சகோதரரின் மனைவியும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து தத்தெடுப்பு பத்திரம் பதிவுக்காக மேலூர் கிழக்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால், 'இஸ்லாம் மதம் தத்தெடுப்பை அனுமதிக்கவில்லை' எனக் கூறி அந்த விண்ணப்பத்தை சார் பதிவாளர் நிராகரித்தார். இதனால், அதை ரத்து செய்து தனது தத்தெடுப்பை பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "இஸ்லாம் மதம் குழந்தை தத்தெடுப்பை அங்கீகரிக்கவில்லை என்பது உண்மை தான். அதே நேரத்தில் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2000-ன் கீழ் 2015ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தம், மத பின்னணியில் அடிப்படையில் விருப்பமுள்ள பெற்றோர்கள் குழந்தைகளை தத்தெடுக்க வழி வகை செய்கிறது. சிறார் நீதிச் சட்டம் குழந்தைகளை தத்தெடுக்க உதவுகிறது. கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்கள் தத்தெடுப்பை அங்கீகரிக்காவிட்டாலும், அந்த மதத்தினர் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்றார். இது ஒருபுறம் எனில், மத வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் குழந்தை தத்தெடுப்பு ஒப்பந்தத்தை பதிவு செய்யும் வகையில் உரிய வழிகாட்டுதல்களை உருவாக்க பதிவுத்துறைக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் கூடுதல் அரசு தலைமை வக்கீலிடம் பதிவுத்துறை சட்டக்கருத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து குழந்தை தத்தெடுப்பு ஒப்பந்தம் பதிவு செய்யும் நடைமுறையில் முக்கியமான சட்ட வழிகாட்டுதல்களை பதிவுத்துறை வழங்கி உள்ளது. தமிழ்நாடு பதிவுத்துறையின் ஐஜி 03.07.2026 அன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண் 1261/C1/2025, தத்தெடுப்பு (Adoption Deed) ஆவணங்களை பதிவு செய்யும் நடைமுறையில் முக்கியமான சட்ட வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இந்த சுற்றறிக்கை, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய WP(MD) No.18174/2018 தீர்ப்பின் அடிப்படையிலும், அரசின் அறிவுறுத்தல் மற்றும் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரின் சட்டக் கருத்தின் அடிப்படையிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தத்தெடுப்பு என்பது அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டத்தின் கீழ் நடைபெறுவதில்லை. ஒவ்வொரு மதத்தினரும் அவர்களுக்கு பொருந்தும் தனிப்பட்ட சட்டங்களின்படி அல்லது Juvenile Justice Act-ன் கீழ் மட்டுமே தத்தெடுப்பு செய்ய வேண்டும். இந்த சட்ட விதிகளை மீறி எந்த தத்தெடுப்பு ஆவணமும் பதிவு செய்யப்படக் கூடாது என்பதற்காகவே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பதிவுத்துறை ஐ.ஜி. வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறுகையில், இந்த சுற்றறிக்கை, மதுரை ஹைகோர்ட்டு கிளை வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், அரசின் அறிவுறுத்தல் மற்றும் கூடுதல் அரசு தலைமை வக்கீல் அளித்த சட்டக் கருத்தின் அடிப்படையிலும் வெளியிடப்படுகிறது.
இந்து மதத்தினர் மேற்கொள்ளும் தத்தெடுப்பை பொறுத்தமட்டில் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 1956-ன் கீழ் அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
இந்து மதத்தினர் மேற்கொள்ளும் சட்டப்பூர்வ தத்தெடுப்புகளுக்கு மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் அனுமதி மற்றும் குழந்தைகள் நல கமிட்டி அனுமதி தேவையில்லை. சிறார் நீதி சட்டம் 2015-ன் நடைமுறைகளும் பொருந்தாது.
பிற மதத்தினரை (முஸ்லிம், கிறிஸ்தவர்கள்) பொறுத்தமட்டில் குழந்தையை தத்தெடுக்க விரும்பினால், மத்திய தத்தெடுப்பு வள ஆணையம், குழந்தைகள் நல கமிட்டி மூலமாகவோ அல்லது சிறார் நீதி சட்ட நடைமுறைகளை பின்பற்றியோ தத்தெடுப்பு பதிவை மேற்கொள்ள வேண்டும். தத்தெடுப்பு ஆவணங்களை சார்-பதிவாளர்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். எந்த சட்டத்தின் கீழ் தத்தெடுப்பு நடைபெறுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும். சட்டத்திற்கு முரணான ஆவணங்களை பதிவு செய்ய மறுக்க வேண்டும்.
அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இந்த சுற்றறிக்கை முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை மாவட்ட பதிவாளர்கள் மற்றும் பதிவுத்துறை துணை தலைவர்கள் கண்காணிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications