திமுக எம்பி டி.ஆர்.பாலுவுடன் சமரசமா? அவதூறு வழக்கு வாபஸ் ஏன்? அமெரிக்காவிலிருந்து அண்ணாமலை
நியூயார்க்: திமுக எம்பி டி.ஆர்.பாலுவுடன் நான் சமரசம் செய்து கொண்டேனா? அவதூறு வழக்கை அவர் வாபஸ் பெற்ற விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வி தி லீடர்ஸ் அமைப்பின் அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிபதியையும் என்னையும் பார்த்தார். பிறகு அவர் இதுவரைக்கும் 8 பேர் மீது அவதூறு வழக்கு போட்டிருக்கிறேன்.

6 பேரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியிருக்கிறேன். ஒரு தனியார் பத்திரிகையிடம் ரூ 25 லட்சம் நஷ்ட ஈடு வாங்கியிருக்கிறேன். இது எட்டாவது கேஸ், இதுவரைக்கும் நான் போட்ட எந்த அவதூறு வழக்கிலும் தோற்றதில்லை என்றார்.
மேலும் "எனக்கு 82 வயதாகிறது. நான் 50 ஆண்டுகளாக ஒரே அரசியல் கட்சியில் பயணித்து வருகிறேன். அந்த அரசியல் கட்சியின் பொருளாளராக 35, 40 ஆண்டுகளாக இருந்து வருகிறேன்" என்றார். பிறகு படிப்படியாக குறுக்கு விசாரணை வரை சென்றுவிட்டது.
அந்த நபரே கோர்ட்டுக்கு வந்து இந்த வழக்கை வாபஸ் வாங்குவதாக சொல்லியிருக்கிறார். அவர் வாபஸ் வாங்கியதால் அண்ணாமலை சமரசம் செய்து விட்டாரா என்கிறார்கள்.
அப்போதுதான் நான் மீடியா நண்பர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல நினைத்தேன். யாரோ ஒருவர் என் மீது வழக்குப் பதிவு செய்தார். வழக்கை பதிவு செய்தவரே அதை வாபஸ் வாங்கினால், வழக்கை பதிவு செய்தவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
வழக்கை பதிவு செய்தவர் எப்போது வேண்டுமானாலும் வழக்கை வாபஸ் பெறலாம். எனவே அதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. நான் யாரை என்ன பேசினேனோ அது உண்மை, தொடர்ந்து பேசுவேன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதனை சந்தித்துக் கொள்ளலாம். ஊழலை தனிப்பட்ட முறையில் எதிர்க்கிறேன்.
தமிழகத்தில் ஊழல் கட்டுக்குள் வருகிறது என்றால் ஒரு நாகரீக குடிமகனாக மகிழ்ச்சி. எந்த ஒரு அரசு வந்தாலும் ஒரு ஆண்டாவது கால அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்களே ஒரு புதிய கம்பெனிக்கு சென்றால் 6 மாதம் அல்லது ஒரு ஆண்டு நன்றாக வேலை செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படும்.
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் கொடுப்போம், ஆதரிப்போம். நன்றாக வேலை பார்க்கட்டும், தடைகளை போட வேண்டாம். தவெக அரசு தமிழகத்திற்கு நல்லது செய்தால் முதல் ஆளாக நாம் எப்போதுமே வரவேற்க போகிறோம். இவ்வாறு அண்ணாமலை பேசியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவராக பதவி வகித்த அண்ணாமலை DMK Files என்ற பெயரில் திமுக முன்னாள் அமைச்சர்கள் பலரின் சொத்து விவரங்களை கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியிட்டார். அதில் குறிப்பாக திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர்.பாலு, அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா, அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 21 நிறுவனங்கள் உள்பட ரூ 10 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து சேர்த்திருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர்.பாலு அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு சைதாப்பேட்டை 17ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
விசாரணையின் போது நேரில் ஆஜரான டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை நடத்தினார். இந்த குறுக்கு விசாரணையின் போது அண்ணாமலையும் தனது மனைவி பெயரில் சொத்துகளை வாங்கி ஊழல் செய்துள்ளதாக டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியதால் அண்ணாமலையும், டி.ஆர்.பாலுவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கும் இதே நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் இருவரும் பரஸ்பரம் இந்த வழக்குகளை வாபஸ் பெறுவதாக தெரிவித்துக் கொண்டனர். அது போல் வழக்குகளின் விசாரணையை தொடர விரும்பவில்லை என மனுக்களை தாக்கல் செய்தனர். இதை ஏற்ற குற்றவியல் நடுவர் செந்தில் குமார் இரு தரப்பு வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications