பாஜகவை விடுங்க! திமுக, அதிமுக மீது சந்தேகமாக இருக்கிறது! பகீர் கிளப்பும் மார்க்சிஸ்ட் சண்முகம்
மதுரை: திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் சேர்ந்தார் போல ஒரே நாளில் ஆளுநரை சந்தித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
மதுரை செல்லூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மறைந்த குமரவேலின் படத் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது : அரசியல் சாசனம் ஆளுநருக்கு வழங்கியிருக்கக் கூடிய அதிகாரங்களை மீறி இங்கே மதுரையில் ஆய்வு கூட்டம் நடத்தியது போன்ற நடவடிக்கைகள் வன்மையாக கண்டனத்துக்குரியது.

ஏற்கனவே ஆர். என். ரவி ஆளுநராக இருந்தபோது இத்தகைய அணுகுமுறையை அவர் மேற்கொண்ட போதெல்லாம் தமிழகம் ஒட்டுமொத்தமாக கண்டித்திருக்கிறது.
ஆகவே புதிதாக வந்திருக்கிற ஆளுநர் அர்லேகர் அதே அணுகுமுறையை கடைபிடிப்பது என்பது பொருத்தமானது அல்ல ; அரசியல் சாசனம் ஆளுநருக்கு என்ன கடமைகளை வரையறுத்திருக்கிறதோ அதற்கு உட்பட்டு அவர் நடந்து கொள்ள வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம் .
நூல் வெளியீட்டு விழாவில் பொதுமக்கள் தங்களுக்கு பிரச்சனைகள் ஏதாவது இருந்தால் நேரடியாக மக்கள் பவனை அணுகலாம் என்கிற முறையில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அப்படி பிரச்சனையை தீர்ப்பதற்கு எந்த வாய்ப்புமே ஆளுநருக்கு கிடையாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இருக்கக் கூடிய நிலையில் ஆளுநர் தானாகவே பிரச்சனைகளை தீர்த்து விடுவது போல பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது என்பது கொஞ்சமும் பொருத்தமானது அல்ல ; ஆகவே இந்த அணுகுமுறையை ஆளுநர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
சோஃபா வந்ததால் கூட்டணி கட்சிகள் சென்றவிட்டதாக உதயநிதி பேசியது குறித்த கேள்விக்கு? அவர் கூறுகையில், இதேபோன்று சட்டசபையிலும் சொல்லியிருக்கிறார். தொடர்ச்சியாக இதையேதான் அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இந்த மாதிரியான அபாண்டமான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் இப்படி சொல்வது என்பது தவறானது. அப்படி என்றால் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். அபாண்டமான முறையில் இத்தகைய கருத்துகளை சொல்லக் கூடாது.
தவெகவை ஏன் ஆதரித்தோம் என்பதற்கான அரசியல் பூர்வமான காரணங்களை தெளிவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படுத்தியிருக்கிறது.
ஆகவே அரசியல் ரீதியாக தான் முடிவுகளை எடுத்தோமே தவிர எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதைப் போல அந்த மாதிரியான தன்மையில் முடிவு என்பது மேற்கொள்ளப்படவில்லை.
இத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் அவர் சொல்லிக் கொண்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. திருமாவளவன் இடைத்தேர்தலில் போட்டியிட்டு துணை முதல்வர் ஆவதாக எழும் கருத்துகள் குறித்த கேள்விக்கு? அவர் கூறுகையில், இடைத்தேர்தலைப் பொருத்தமட்டிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இடதுசாரி கட்சிகள் இப்போது ஒரு மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கியிருக்கிறோம்.
நாங்கள் அந்த அணியிலோ இந்த அணியிலோ கிடையாது. நாங்கள் இடதுசாரி என்பது தனித்து செயல்படுகிறோம். அதே நேரத்தில் தவெக கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு என்பது தொடரும். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை
கரூர் சம்பவம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு குறித்த கேள்விக்கு ? கரூர் நெரிசல் மரணத்தை பொருத்தமட்டிலும் ஏற்கனவே மத்திய புலனாய்வுத்துறை வழக்கு விசாரணை என்பது இருக்கிறது விசாரணை இன்னும் முடிய முடியவில்லை.
மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது ஒரு அமைச்சர் இப்படி பேசுவது என்பது தவறானது அதனை விசாரணையில் குறுக்கிடுவதற்கு சமமானது. ஆதவ் அர்ஜுனா இது போன்ற கருத்துக்களை பேசியிருக்கக் கூடாது வழக்கு விசாரணை முடிவு வரட்டும்.
மத்திய புலனாய்வுத் துறை என்ன கண்டுபிடிக்கிறார்களோ யார் குற்றவாளியோ அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது அமைச்சர் இவ்வாறு கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையது அல்ல.
அமைச்சரவை கூட்டத்தில் தனி நபர்கள் கலந்து கொள்வது தொடர்பாக பாஜக, ஆளுநரை சந்தித்து புகார் அளித்தது தொடர்பான கேள்விக்கு பாஜக, அதிமுக, திமுக மூன்று பேருமே ஒரே நாளில் ஆளுநரை சந்தித்தியிருக்கிறார்கள்.
ஆளுநர் பதவியை வேண்டாம் என்பதுதான் திமுக, அதிமுகவின் கருத்து. ஆளுநர் என்பது மத்திய அரசின் ஏஜெண்ட் தான், தபால்காரர் இப்படி தான் அடைமொழி என்பது கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் இவர்கள் போய் ஆளுநரிடம் புகார் தெரிவித்திருப்பது என்பது பற்றி ஆழமாக யோசிக்க வேண்டியிருக்கிறது. பாஜக ஆளுநரை மத்திய அரசு ஏஜென்ட் என்கிற முறையில் சந்திப்பது ஆச்சரியம் இல்லை.
திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் நேற்று சேர்ந்தார் போல ஒரே நாளில் ஆளுநரை சந்தித்திருப்பது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications