அதானிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற விவகாரம்.. அமெரிக்க நீதித்துறை கொடுத்த முக்கிய விளக்கம்
வாஷிங்டன்: தொழிலதிபர் கவுதம் அதானி தொடர்பான குற்றவியல் வழக்கை வாபஸ் பெற்றது குறித்து வெளியான ஊடகச் செய்திகள் ஆதாரமற்றவை என்றும், அமெரிக்காவில் அதானி குழுமம் மேற்கொள்ள இருந்த முதலீடுகளுக்கும் அந்த முடிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அமெரிக்க நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் செய்யப்பட்ட பைலிங்கில், நீதித்துறையின் மூத்த அதிகாரி ஆர். டிரென்ட் மெக்காட்டர் கூறியிருப்பதாவது:- "அதானி மீதான பத்திரச் சந்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெறும் முடிவு, வழக்கின் சட்டரீதியான அம்சங்களை விரிவாக ஆய்வு செய்த பிறகே எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் அதானி குழுமம் முதலீடு செய்யவிருந்ததால் வழக்கு கைவிடப்பட்டதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானவை.

முதலீடுகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகும் முன்பே, வழக்கை தள்ளுபடி செய்ய முடிவு செய்திருந்ததாகவும், முதலீடுகள் பற்றிய பேச்சு எதுவாக இருந்தாலும் அந்த முடிவு மாறியிருக்காது. இந்த முடிவு எடுப்பதற்கு முன்பு, அரசு தரப்பு மற்றும் அதானி தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்கள், ஆதாரங்கள் மற்றும் சட்டரீதியான அம்சங்கள் அனைத்தும் விரிவாக பரிசீலிக்கப்பட்டன" என்று கூறியுள்ளார்.
மேலும், பெயர் வெளியிடாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட ஊடகச் செய்திகளின் நம்பகத்தன்மை பற்றி நீதித்துறை கேள்வி எழுப்பியது. நீதித்துறையின் தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் சிலர் உள்துறை விவரங்களை கசியவிட்டதாகவும், பெயர் குறிப்பிடப்படாத ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட பரபரப்பான செய்திகளுக்கு நீதிமன்றம் முக்கியத்துவம் அளிக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் பல்வேறு சட்ட பலவீனங்கள் இருந்ததது எனவும் நீதித்துறை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க நீதிமன்றத்தின் அதிகார வரம்பு தொடர்பான சிக்கல்கள், முதலீட்டாளர்களுக்கு நிதி இழப்பு ஏற்படாதது, போதுமான ஆதாரங்கள் இல்லாதது மற்றும் இந்தியாவில் நடைபெற்ற இணை விசாரணைகள் உள்ளிட்ட அம்சங்கள் வழக்கைத் தொடர்ந்து முன்னெடுப்பதை பலவீனப்படுத்தியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்த பொது விவாதங்கள், அதிகாரப்பூர்வ நீதிமன்ற ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், பெயர் வெளியிடாத ஆதாரங்களை நம்பி வெளியிடப்படும் தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்றும் நீதித்துறை வலியுறுத்தியிருக்கிறது. நம்பகமற்ற அதாவது விவரம் இல்லாத ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மீடியா தகவல்களை, நீதித்துறையின் அதிகாரப்பூர்வ சட்ட மதிப்பீட்டை விட மேலானதாக கருதப்பட முடியாது என்றும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications