டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்கச் சொன்ன நிர்வாகிகள்.. எடப்பாடி சொன்ன பதில்!
சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு, டிடிவி தினகரன் வேறு கட்சியை நடத்தி வருவதாக எடப்பாடி பழனிசாமி பதில் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, அதிமுக சிதறு தேங்காய் போல உடைந்து வருகிறது. முக்கிய நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இதுவரை அதிமுகவின் 6 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். 47 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில் தற்போது அக்கட்சிக்கு 41 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் நாள்தோறும் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்தவகையில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம் மற்றும் கும்பகோணம் பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சி அமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அப்போது சில அதிமுக டெல்டா நிர்வாகிகள், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "டிடிவி தினகரன் தற்போது தனியாக ஒரு அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். அப்படியிருக்கும்போது அவரை எப்படி அழைத்து வந்து கட்சியில் சேர்க்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டுமெனில் டிடிவி தினகரனை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கலாம் என்று சில நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களாக அதிமுகவின் சில நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அதிமுகவை வலுப்படுத்தவும், அதிமுக ஆதரவு வாக்குகளை ஒருங்கிணைக்கவும் டிடிவி தினகரனுடன் மீண்டும் இணக்கமான உறவை உருவாக்க வேண்டும் என்ற கருத்து கட்சியின் ஒரு பகுதியினரிடம் உருவாகி வருகிறது.
அதிமுக ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த கும்பகோணம் பகுதிச் செயலாளர் பத்ம குமரேசன், "இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், டி.டி.வி. தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும் எனும் எங்கள் பகுதியைச் சேர்ந்த தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் இருக்கும் கருத்தை, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தேன்.
அதனை கேட்ட எடப்பாடி பழனிசாமி, "டிடிவி தினகரன் தனியாக கட்சி நடத்திவருகிறாரே' என பதில் அளித்தார். டி.டி.வி. தினகரன் அதிமுகவில் சேர்ந்தால் கட்சி பலமடைந்து, வருங்காலங்களில் அதிமுக நிச்சயம் ஆட்சி அமையும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications