ஆணவக்கொலை தடுப்பு சட்டம்.. தீவிரம் காட்டும் அமைச்சர் வன்னி அரசு! ஆர்வம் காட்டாத விஜய் அரசு?
சென்னை: ஆணவப்படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர தமிழக சமூக நீதித்துறை அமைச்சரும், விசிகவின் முக்கிய நிர்வாகியுமான வன்னி அரசு தீவிரம் காட்டி வருகிறார். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்று வன்னி அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில் முதல்வர் விஜய்க்கு இந்த சட்டத்தை உடனடியாக கொண்டு வருவதற்கு விருப்பம் இல்லை என்று பரவலாக பேச்சு எழுந்துள்ளது.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த எவிடென்ஸ் கதிர், ஆணவக்கொலை தடுப்பு சட்டம் குறித்து அமைச்சர் வன்னி அரசு பேசியதில் தவெக அரசாங்கத்திற்கு உடன்பாடில்லை என்றே கேள்விப்படுகிறேன். அதே நேரத்தில் வன்னி அரசு ஆர்வமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக எவிடென்ஸ் கதிர் கூறுகையில், ஆணவக்கொலை தடுப்புக்கு ஒரு சட்டம் வேண்டும் என்பதில் வன்னி அரசு ஆர்வமாக இருக்கிறார்.

தவெக அரசுக்கு கூட உடன்பாடு இல்லை?
மற்ற அமைச்சர்களை விட வன்னி அரசு இது பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். பல வருடங்களாக இது பற்றி வன்னி அரசு பேசி வருகிறார். ஆனால் வன்னி அரசு பேசுவதில் தவெக அரசுக்கு கூட உடன்பாடு இல்லை என்று சொல்கிறார்களாம். எப்படி இவர் நெருக்கடி கொடுக்கிறார் என்று.. ஆனால் அமைச்சர் வன்னி அரசு பேசியது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குரல். அதை புரிந்து கொண்டு தவெக உடனடியாக சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
ஆணவக்கொலை பற்றிய சரிதான புரிதல் எந்த போலீஸ் அதிகாரிகளுக்கும் இல்லை. அதை எப்படி விசாரிக்க வேண்டும். எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்ற புரிதல் வீக் ஆக உள்ளது. எனவே அது குறித்து பயிற்சி தேவை. சமூக நீதி, அடிப்படை உரிமைகள் இது பற்றி எல்லா மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து இதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பே உள்ளது" என்றார்.
மசோதா கொண்டு வர ஆலோசனை
தற்போது தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய கட்சிகளில் ஒன்றாக விசிக உள்ளது. அரசில் பங்கெடுத்து இருப்பதால், இந்த சட்டத்தை கொண்டு வர வன்னி அரசு மும்முரம் காட்டினாலும் விஜய்யின் திட்டம் என்னவென்று வரும் நாட்களில்தான் தெரியவரும். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய வன்னி அரசு கூறுகையில், "மயிலாடுதுறையில் நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஆணவப்படுகொலை பற்றி சட்டமன்றத்தில் என் முதல் உரையிலேயே பேசியிருந்தேன்.
ஆணவப்படுகொலையை தடுக்க தனிச்சட்டம் தேவை என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இது பற்றி முதல்வரிடமும் பேசியுள்ளேன். வரும் கூட்டத்தொடரில் கண்டிப்பாக ஆணவ படுகொலை பற்றி விவாதிக்கப்படும். அது பற்றிய மசோதா கொண்டு வர ஆலோசனை செய்து வருகிறோம். ஆணவ படுகொலையை நிறுத்துவதற்கு எல்லா முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம்" என்று பேசியுள்ளார்.














Click it and Unblock the Notifications