ஜெயில், லட்சங்களில் அபராதம்.! துபாயில் இந்த தவறுகளை செய்தால் அவ்வளவு தான்! எச்சரிக்கை
துபாய்: உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய நகரமாக துபாய் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் துபாய்க்கு செல்கிறார்கள். சுற்றுலா, வேலை மற்றும் வணிக காரணங்களுக்காக செல்கின்றனர். அப்படியிருக்கும்போது துபாய் செல்வோர் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான விதிகள் குறித்து நாம் பார்க்கலாம்.
ஐக்கிய அமீரகத்தில் பல கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்தியாவில் சாதாரணமாகக் கருதப்படும் சில செயல்கள், அங்கு கடும் குற்றமாகக் கருதப்படலாம். இந்த சட்டங்களை மீறினால் அபராதம், சிறைத் தண்டனை, நாடுகடத்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். எனவே, அமீரகம் செல்வோர் அங்கு சென்று சேரும் முன்பு இந்த விதிமுறைகள் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மருந்துகள்
சில மருந்துகள் அமீரகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் அல்லது முன் அனுமதி பெறாமல் அவற்றை எடுத்துச் சென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். உரிமம் பெற்ற ஹோட்டல்கள், பார்கள், உணவகங்களில் மட்டுமே மது அருந்த அனுமதி உள்ளது. பொது இடங்களில் குடிபோதையில் இருப்பது அல்லது மது அருந்துவது சட்டவிரோதம். பொது இடங்களிலோ, சமூக வலைத்தளங்களிலோ திட்டுவது, ஆபாச வார்த்தைகள் பயன்படுத்துவது, மோசமான சைகைகள் காட்டுவது குற்றமாகும். இதற்காகச் சிறை அல்லது நாடுகடத்தல் வரை நடக்கலாம்.
அமீரக அரசு, அமீரக மன்னர்கள் ஆட்சியாளர்கள் அல்லது அந்நாட்டு மக்களை விமர்சிக்கும் வகையில் எதாவது போஸ்ட், வீடியோக்கள் அல்லது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை புகைப்படம் எடுப்பது குற்றமாகும். மேலும் அரசு அலுவலகங்கள், ராணுவ கட்டிடங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் போட்டோ எடுக்கவும் தடை உள்ளது. ஜீப்ரா கிராசிங் அல்லது பாதசாரி கடக்கும் இடங்களைத் தவிர வேறு இடங்களில் சாலையைக் கடப்பது சட்டவிரோதம். இதற்குத் தனியாக அபராதம் விதிக்கப்படும்.
அதீத நெருக்கம்
பொது இடங்களில் முத்தமிடுதல், அதீத நெருக்கமாக நடந்து கொள்வது போன்றவை சட்டச் சிக்கலை ஏற்படுத்தலாம். கைகோர்த்து நடப்பதும் கூட பிரச்சினையாக மாறலாம். பொது இடங்களில் உடலை வெளிப்படுத்தும் ஆடைகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும்போது மரியாதையான உடை அணிவது அவசியமாகக் கருதப்படுகிறது..
அமீரகத்தில் போதைப்பொருள் தொடர்பான சட்டங்கள் மிகவும் கடுமையானவை. சிறிய அளவு போதைப்பொருள் வைத்திருந்தாலும் கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். பன்றி இறைச்சி, ஆபாச புத்தகங்கள், வீடியோக்கள் போன்றவற்றை நாட்டிற்குள் கொண்டு வரத் தடை உள்ளது. ரமலான் காலத்தில் பொது இடங்களில் சாப்பிடுதல், புகைபிடித்தல், சத்தமாக இசை கேட்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
மொபைலை பார்க்கக் கூடாது
அமீரகத்தில் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் இல்லை. எனவே சுற்றுலா பயணிகள் உள்ளூர் சட்டங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். மெட்ரோ, டிராம் உள்ளிட்ட பொது போக்குவரத்தில் சாப்பிடுவதோ, குடிப்பதோ அபராதத்திற்கு வழிவகுக்கும். அனுமதியின்றி மற்றவரின் மொபைலை பார்ப்பது பிரைவசி மீறலாக கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.
ஆபாச சைகைகள்
வாகனம் ஓட்டும்போது மற்றவர்களிடம் ஆபாச சைகைகள் காட்டுவது அல்லது சண்டையிடுவது கடுமையான குற்றமாகும். அபராதம், சிறை அல்லது நாடுகடத்தல் வரை நடவடிக்கை எடுக்கப்படலாம். ஹோட்டல் பில் செலுத்தாமல் வெளியேறுவது கூட கடுமையான நிதி மோசடி குற்றமாகக் கருதப்படும். அமீரக அரசின் அனுமதி இல்லாமல் நன்கொடை திரட்டுவது அல்லது ஆன்லைன் மூலம் நிதி சேகரிப்பதும் சட்டவிரோதமாக கருதப்படலாம்.
துபாய் உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக இருந்தாலும், அந்நாட்டு சட்டங்கள் மிகவும் கடுமையானவை. எனவே சுற்றுலா அல்லது வேலைக்காக செல்லும் முன் அங்குள்ள விதிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம். சிறிய தவறுகூட பெரிய சட்ட சிக்கலாக மாறக்கூடும்.














Click it and Unblock the Notifications