பிஞ்சு குழந்தையிடம் இப்படியா நடந்துகொள்வது.. அமைச்சர் கீர்த்தனாவுக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி
சென்னை: அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் 'ரீல்ஸ் அமைச்சர்' ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது என்று அமைச்சர் கீர்த்தனாவை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும், உங்கள் ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்றும், மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் கிளாஸ் எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி வகுப்பறைக்கு சென்ற கீர்த்தனா, மாணவிகளிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகளைக் கேட்டார். இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் மாணவிகள் சிலர் திணறியதாக கூறப்படுகிறது. உடனே ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு நன்கு ஆங்கிலம் கற்றுத் தருமாறு அறிவுறுத்தினார்.

மேலும், "முதல் பெஞ்ச் மாணவியே இப்படி இருக்கும்போது லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப்பாருங்கள்" எனக் கூறினார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சோசியல் மீடியாக்களில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் 'ரீல்ஸ் அமைச்சர்' ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive. மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்" என்று கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications