அமெரிக்க வீரருக்கு ரெட் கார்டு கொடுப்பீங்களா? டென்ஷனில் போன் போட்ட டிரம்ப்! அந்தர் பல்டி அடித்த ஃபிபா.. சர்ச்சை
வாஷிங்டன்: உலக கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்க கால்பந்து வீரர் போலரின் பலோகனுக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டு எச்சரிக்கையை நீக்க கோரி, சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவருக்கு போன் செய்து டிரம்ப் பேசியுள்ளார். டிரம்ப் பேசியதும் தனது முடிவை பிஃபாவும் திரும்ப பெற்றது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அரசியல் விவகாரங்களில் அதிரடியாக பேசி அவ்வப்போது விமர்சனத்திற்கு உள்ளாகி வந்த டிரம்ப், தற்போது கால்பந்து போட்டிக்குள்ளும் தலையிட்டு இருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
கால்பந்து உலக கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. விறுவிறுப்பான கட்டத்தை பிஃபா உலக கோப்பை தொடர் எட்டியுள்ளது. பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் பிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

உடனே போனை போட்ட டிரம்ப்
பொதுவாக விளையாட்டு போட்டிகளில் நடுவர் அல்லது போட்டியை நடத்தும் அமைப்பின் முடிவில் வெளியில் இருந்து யாரும் அழுத்தங்கள் கொடுக்க மாட்டார்கள். கிரிக்கெட் போட்டிகள், கால்பந்து உள்ளிட்ட போட்டிகளுக்கு இத்தகைய நடைமுறைகளை பார்த்து இருக்கிறோம். ஆனால், உலக கோப்பை கால்பந்து தொடரில் நடுவர் எடுத்த முடிவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய டிரம்ப், உலக கால்பந்து சம்மேளன தலைவருக்கு போன் செய்து சொந்த நாட்டு வீரருக்கு எதிராக கொடுக்கப்பட்ட ரெட் கார்டை ரத்து செய்ய வைத்து இருக்கிறார். டிரம்ப் தலயீட்டால் முடிவு மாற்றப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
போஸ்னியாவுக்கு எதிரான 2-வது சுற்று ஆட்டத்தின் போது அமெரிக்க வீரர் போலரின் பலேகான் எதிரணி வீரர் ஒருவரின் கணுக்காலை மிதித்துவிட்டார். அதற்காக அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பாதியில் வெளியேற்றப்பட்டார். கால்பந்து போட்டிகளுக்கான விதிகளின் படி ரெட் கார்டு கொடுக்கப்பட்டால், அடுத்த ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்படும். இதனால் பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில் விளையாட முடியாத நிலை எற்பட்டது.
முடிவை மாற்றிய பிஃபா
இதற்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் இன்பான்டினோவை அழைத்து பேசி, பலோகனுக்கு வழங்கப்பட்ட ரெட் கார்டு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டார். இந்த முடிவு மோசமானது என்றும் கூறியிருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்பே தலையிட்டு நெருக்கடி கொடுத்ததாலோ என்னமோ, ரெட் கார்டு நடவடிக்கையை நிறுத்திவைப்பதாக பிஃபா கூறியுள்ளது.
இதனால், பலோகன் பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில் அவர் விளையாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் இந்த முடிவுக்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தவறான முன்னுதாரனமாக மாறிவிடும் என்று ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு கூறியுள்ளது. அதேநேரத்தில் பிஃபாவின் முடிவை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், பிஃபா கூட்டமைப்பு முடிவுக்கு நன்றி. சரியான முடிவை எடுத்துள்ளது. மிகப்பெரிய அநீதியை திரும்ப பெற்றுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
உலக வரலாற்றில் இதுவே முதல்முறை
இதற்கிடையே, பெல்ஜியம் அணி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இது குறித்து பெல்ஜியம் கால்பந்து கூட்டமைப்பு கூறுகையில், பிஃபாவின் முடிவு வியப்பு அளிக்கிறது. சட்ட ரீதியான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். உலக வரலாற்றிலேயே இத்தகையதொரு முடிவு எடுக்கப்படுவது இதுவே முதல்முறை என்று நான் கருதுகிறேன்." என்று கூறியுள்ளது.














Click it and Unblock the Notifications