என்னாது விஜயபாஸ்கர்களுக்கு பெரிய பதவியா? அப்ப நாங்க எங்க போறது? தவெகவினர் போர்க்கொடி? திணறும் விஜய்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் இணைந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சி.விஜயபாஸ்கருக்கும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் மண்டல அளவிலான பொறுப்பு வழங்குவதற்கு தவெகவில் தலைமைக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியது.
அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள்தான் இந்த இரு விஜயபாஸ்கர்களும்! இருவருமே தங்கள் மாவட்டங்களில் இன்னொரு ஆளுமையை எதிர்த்து முன்னுக்கு வந்தவர்கள்.

சி.விஜயபாஸ்கர், தற்போதைய அமைச்சர் பர்வேஸின் தந்தையை எதிர்த்து ஒரே கட்சியில் பயணித்ததாக சொல்லப்படுகிறது. அது போல் செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது அவருடன் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மோதல் போக்கை கையாண்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இருவருமே கடந்த 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில் பரஸ்பரம் வென்றுள்ளனர். ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி என்பவரின் தனி நபரின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டதால் தாங்கள் வெளியேறுவதாக கூறி தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து இவர்கள் இருவரும் முன்னாள் அமைச்சர்களான திருச்சி வளர்மதி, ஆனந்தன், 10 ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தனர். இதற்காக சி.விஜயபாஸ்கர் மாமல்லபுரமே குலுங்கும் அளவுக்கு ஒரு விழாவையே எடுத்தார்.
இந்த நிலையில் தான் யாரை எதிர்த்தோமோ அவரின் மகன் பர்வேஸுடன் அனுசரணையாக இருந்து வருகிறார். புதுக்கோட்டை தவெக அலுவலகத்திற்கு சென்ற சி.விஜயபாஸ்கரை பர்வேஸ் வரவேற்றார்.
அது போல் 10ஆம் தேதி கரூருக்கு விஜய் வருவதாக திட்டமிடப்பட்டுள்ளதால் அங்கு அவரை வரவேற்பதற்கான பணிகளை மாவட்டச் செயலாளர் மதியழகனுடன் இணைந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்து வருகிறார். இவரிடம் மதியழகன் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார்.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்த முன்னாள் அமைச்சர்களுக்கு பதவி பதவி கொடுப்பது குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு பனையூர் தவெக அலுவலகத்தில் முதல்வர் விஜய் ஆலோசனை செய்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது சி.விஜயபாஸ்கருக்கு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல பொறுப்பாளர் பதவியையும், அது போல் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியையும் வழங்க ஆலோசனை நடந்ததாக தெரிகிறது. இதற்கு விஜய்யும் ஒப்புதல் அளித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இதை தவெகவினர் எதிர்த்து வருகிறார்கள்.
இதுகுறித்து தவெகவினர் சிலர் கூறுகையில் எங்கோ மாற்றுக் கட்சியில் இருந்து வந்த இருவருக்கும் இத்தகைய பெரிய பதவிகளை கொடுத்தால், கட்சியில் உழைத்தவர்களுக்கு என்ன மரியாதை? தேர்தலுக்கு முன்பு வரை தவெக தேர்தலில் ஒரு சீட்டு கூட ஜெயிக்காது என்றுதானே அனைவரும் கூறி வந்தனர்.
ஆனால் கட்சியினராகிய நாங்கள் கடுமையாக உழைத்து ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளோம். இப்போது நம்மை தேடி வந்தவர்களுக்கு நல்ல பதவிகளை கொடுத்தால் விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து வேலை பார்த்தவர்களுக்கு என்ன மரியாதை என நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்துவதால் கட்சி தலைமை என்ன முடிவெடுக்கும் என தெரியவில்லை. தவெகவில் நிறைய முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து விலகி போய் சேர்ந்துள்ளார்கள். அவர்களுக்கும் பதவி என்றால் தவெகவினருக்கு ஒன்றும் இல்லையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் யாருக்கும் எந்த பதவி என்பதை இதுவரை தவெக தலைமை அறிவிக்கவில்லை என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications