வெட்கமா இல்லையா.. எம்எல்ஏக்களிடம் விலை பேசினால் அவ்வளவு தான்.. திமுகவுக்கு செங்கோட்டையன் எச்சரிக்கை
சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியலில் பரபரப்பு ஓயவில்லை. தவெக குதிரை பேரம் நடத்தி எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மறுபக்கம் தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி, ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வதாக திமுக மீது தவெக புகார் கூறியுள்ளது. தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எங்களின் சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசுவது, குதிரை பேரம் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு ஆட்சி அமைந்த பிறகு அதற்கு எதிராக இவ்வளவு சதிகள் நடக்கவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் இந்த ஆட்சிக்கு நல்ல ஆலோசனை வழங்க வேண்டியவர்கள் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவது வெட்ககேடானது.

விலை பேசினால் தண்டனை
எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் விலை பேசுவது, குதிரை பேரம் செய்திருப்பவர்களுக்கு உரிய தண்டனை காவல்துறை மூலம் கிடைக்கும். நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் எங்களிடம் தவெக பேரம் பேசியது என்று ஆளுநரிடம் புகார் அளித்துள்ளனர். இது எங்கள் மீது வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார்கள். ஆஸ்டினை பற்றி உங்களுக்கே நன்கு தெரியும். அம்மா காலத்தில் ராஜ்யசபா உறுப்பினராக, மாவட்ட செயலாளராக இருந்தார். அதிமுகவில் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு திமுகவுக்கு சென்றார்.
இப்போது திமுகவில் தனக்கு விளம்பரம் வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கருத்துகளை சொல்லியுள்ளார். எங்களுக்கு அந்த தேவையே இல்லை. எங்களுக்கு தேவையான வலிமையான ஆதரவை கூட்டணி கட்சிகள் வழங்கி வருகிறார்கள். ஆஸ்டினை போன்றவர்களை நாங்கள் அழைக்க வேண்டிய தேவையில்லை. ஒரு அரசு செய்கிற திட்டங்களை நிறைவேற்றி, இறுதியில் எந்த பணிகளை முடிக்கிறார்களோ அதற்கு பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் தான் இடம்பெறுவார்.
நேர்மையாக தூய்மையாக
அந்த நிலைப்பாட்டை திமுக மாற்ற வேண்டும் என்று நினைப்பது இதுவரை இல்லாத ஒன்று. அதிமுகவில் 95 சதவீதம் முடித்த பணிகளை, வெறும் 5 சதவீதம் மீத பணிகளை செய்து கல்வெட்டில் போட்டவர்கள் அவர்கள். அப்படிப்பட்டவர்கள் தவெகவை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. தவெக தூய்மையாகவும், நேர்மையாகவும் கண்ணியமாக நாட்டை கொண்டு செல்வதற்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications