பிரதமர் மோடியை அசிங்கப்படுத்திய சிறுமி என பரவும் படம்.. பலகையில் எழுதியது என்ன? FACT CHECK
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து பலகையில் எழுதி சிறுமி அவரை அசிங்கப்படுத்திவிட்டதாக தகவல் பரவி வரும் நிலையில் அது குறித்து உண்மை தன்மையை அலசுவோம்.
கடந்த சில நாட்களாக பேஸ்புக், வாட்ஸ் அப், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காவி உடை அணிந்து இருக்கும் சிறுமி ஒருவர் பலகையுடன் நின்றுகொண்டு இருக்கும் புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. "மோடியை அசிங்கப்படுத்திய சிறுமி" என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த புகைப்படத்தில், "அன்புள்ள மோடி தாத்தா; என் பெயர் துவாரகா மதிவதனி. 2 ஆம் வகுப்பு படிக்கிறேன். திருச்சிக்கு வந்த நீங்க ஏன் நெல்லைக்கு வரல; வெள்ளத்தால பாதிக்கப்பட்ட எங்களுக்கு ஸ்டாலின் தாத்தா 6000 ரூபாய் கொடுத்தாரு. நீங்க ஒன்னுமே தரல. நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம்; எங்களுக்கு நிவாரணம் குடுங்க." என்று அந்த பலகையில் எழுதப்பட்டு இருந்தது.

இதுகுறித்த உண்மை தன்மையை ஆராய ரிவர்ஸ் இமேஜ் தேடலில் ஈடுபட்டோம். அப்போது இந்த சிறுமி பதாகையுடன் நிற்கும் வேறு சில புகைப்படங்களும் கிடைத்தன. அதில், "அன்புள்ள மோடி தாத்தா; என் பெயர் துவாரகா மதிவதனி. 2 ஆம் வகுப்பு படிக்கிறேன். எங்க ஊர் நாகப்பட்டினம். இங்கே அரசு நடத்தும் பள்ளிக்கூடம் ஹிந்தி படிக்க எதுவும் இல்லை. பள்ளிக்கூடம் கட்டுறதுக்கு என் அப்பாகிட்ட இடம் தர சொல்லுறேன். நீங்க பள்ளிக்கூடம் கட்டித் தாங்க. அதுல நாங்களும் ஹிந்தி கத்துக்கனும். ஜெய் ஹிந்த்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த ரிவர்ஸ் இமேஜ் தேடலில் மேலும் பல படங்கள் கிடைத்தன. அதில் அந்த சிறுமி தனது தந்தையுடன் நிற்கும் புகைப்படங்களும் கிடைத்து உள்ளன. இது எங்கே எடுக்கப்பட்ட புகைப்படம் என்ற விபரத்தை அறிய முற்பட்டோம். அப்போது திருச்சியில் புதிய விமான நிலைய திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி அண்மையில் சென்றபோது எடுக்கப்பட்ட படம் என்பது உறுதியானது.
அதேபோன்று ஒரு தனியார் நாளிதழின் யூடியூப் சேனலிலும் அந்த சிறுமியுடன் அவரது தந்தை பேட்டி அளித்து இருக்கிறார். சில தொலைக்காட்சி ஊடகங்களிலும் இந்த பேட்டி வெளியாகி இருக்கிறது. அதில், "சிறுமி இந்தி கற்க வேண்டும் என விரும்பியதால் இப்படி கோரிக்கை விடுத்தோம்." என்று தெரிவித்தார். இதனை போட்டோஷாப் செய்து சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருப்பதை உறுதிபடுத்துகிறோம்.

Fact Check
வெளியான செய்தி
நெல்லைக்கு வந்து வெள்ள நிவாரண நிதியை எப்போது தருவீர்கள் என்று பிரதமர் மோடியிடம் சிறுமி கேட்டு பலகை வைத்து இருந்ததாக புகைப்படம் பரவி வருகிறது.
முடிவு
இந்தி கற்பதற்கான பள்ளிக்கூடத்தை கட்டித் தருமாறு சிறுமி பலகை வைத்து இருந்தார்.












Click it and Unblock the Notifications