Fact Check: 2007ல் இந்திய அணி.. மன்மோகன் சிங்கை தவிர்த்து விட்டு சோனியா காந்தியுடன் போட்டோ எடுத்ததா?
சென்னை: கடந்த 2007ம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வென்ற போது, கிரிக்கெட் வீரர்கள் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பதில் சோனியா காந்தியுடன் போட்டோ எடுத்துக்கொண்டதாக சோஷியல் மீடியாக்களில் தகவல்கள் ஷேராகி வருகிறது. இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா திரும்பிய வீரர்களுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரமதர் மோடியை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து பெற்றனர். வான்கடே மைதானத்தில் வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பெற்றிருந்த போது, கிரிக்கெட் வீரர்கள் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர் என தகவல் சோஷியல் மீடியாக்களில் ஷேராகி வருகிறது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் (BJP) IT செல் தலைவர் அமித் மாளவியாவும் இதை ஷேர் செய்திருந்ததால் இது விவாதங்களை கிளப்பியது.
"2007 உலக கோப்பை பட்டம் வென்ற போது சோனியா காந்தியுடன் வீரர்கள் போட்டோ எடுத்துக்கொண்டனர். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெயருக்கு பிரதமராக இருந்தார். அவர் ஒரு பொம்மை பிரதமர். அவரிடம் ஆட்சி அதிகாரம் இல்லை. அதிகாரத்தை கையில் வைத்திருந்தது காங்கிரஸ்தான்" என்று சோஷியல் மீடியாவில் பகிரப்பட்ட படங்களுடன் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இது உண்மையான தகவல் இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பல்வேறு செய்தி ஊடகங்கள் இது குறித்த உண்மையை சரிபார்த்திருக்கின்றன. அந்த வகையில் கடந்த 2007ல் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சோனியா காந்தியை சந்தித்தது உண்மைதான் என்று தெரிய வந்திருக்கிறது. ஆனால் அதே நாளில் அதாவது 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும் வீரர்கள் சந்திருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படமும் கூகுளில் கிடைக்கிறது.
குறிப்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இது குறித்த செய்தியை எழுதியிருக்கிறது. அதில் மன்மோகன் சிங்குடன் இந்திய அணி வீரர்கள் எடுத்த புகைப்படம் காண கிடைக்கிறது. மன்மோகனுடன் அம்பிகா சோனி, பிருத்விராஜ் சவான், ராஜீவ் சுக்லா மற்றும் பலர் இருந்தனர் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டிருக்கிறது.

Fact Check
வெளியான செய்தி
2007ம் ஆண்டு உலக கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்ற போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை தவிர்த்துவிட்டு சோனியா காந்தியுடன் வீரர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
முடிவு
2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குடனும் இந்திய அணி போட்டோ எடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications