Fact check: அண்ணாமலையார் கோயில் சுவாமி தூக்கும் இஸ்லாமிய பணியாளர் என்று பரவும் வதந்தி! உண்மை என்ன?
சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கார்த்திகை தீபத் திருவிழாவில் சுவாமியை தூக்க ஷாருக்கான் என்ற இஸ்லாமியர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சுவாமியை தூக்க இந்துக்கள் யாரும் இல்லையா? என்றும் கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. என்ன நடந்தது என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. திருக்கார்த்திகை தினத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையாரை தரிசித்தனர்.

இந்நிலையில், “திருவண்ணாமலை அண்ணாமலையார் கார்த்திகை தீபத் திரு விழாவில் சுவாமியை தூக்க இந்துக்கள் யாரும் இல்லையா? இந்த திராவிட மாடல் ஆட்சியின் அறம் அற்ற துறையின் செயலை பாருங்கள் இந்துக்களே” என ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதோடு, சுவாமி தூக்கும் பணியாளர் ஒருவரின் அடையாள அட்டையையும் பதிவிட்டிருந்தார். அதில் ஷாருக்கான் என்ற பெயர் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அவர் பெயர் ஷாருக்கேஷ் எனத் தெரிவித்து, சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் அட்டையையும் வெளியிட்டுள்ளது உண்மை சரிபார்ப்புக்குழு.
வதந்தி: “திருவண்ணாமலை அண்ணாமலையார் கார்த்திகை தீபத் திருவிழாவில் சுவாமியை தூக்க இந்துக்கள் யாரும் இல்லையா?" என்று சுவாமி தூக்கும் பணியாளர் ஷாருக்கான் என்றுள்ள அடையாள அட்டை சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?: இது முற்றிலும் தவறான தகவல். ஒப்பந்ததாரரின் அடையாள அட்டையில் உள்ள நபரின் பெயர் எஸ்.ஷாருக்கான் அல்ல, ஷாருகேஷ். இவரது தந்தையின் பெயர் சரவணன். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் ஷாருக்கேஷ் என்றே அச்சிடப்பட்டுள்ளது. 2024க்கு வழங்கப்பட்ட அட்டையில் பெயர் பிழையால் தவறான தகவல் பரப்பப்படுகிறது. வதந்தியைப் பரப்பாதீர்! என உண்மை சரிபார்ப்புக்குழு தெரிவித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சுவாமி தூக்கும் இஸ்லாமிய பணியாளர் என்று கூறி ஒரு தகவல் பரப்பப்பட்டது.
முடிவு
ஒப்பந்ததாரரின் அடையாள அட்டையில் உள்ள நபரின் பெயர் எஸ்.ஷாருக்கான் அல்ல, ஷாருகேஷ். தவறான செய்தி பரபப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications