மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500.. இதுவரை வாங்காதவர்கள் பெயரும் இடம்பெறும்.. அமைச்சர் ரமேஷ் அப்டேட்!
திருச்சி: மகளிர் உரிமைத் தொகைக்காக நிறைய பேர் மனு கொடுக்கின்றனர். இதனை அனைத்தையும் நாங்க பரிசீலித்து வருகிறோம். நாங்களும் தேர்தல் வாக்குறுதியில் ரூ.2,500 தருவதாக சொல்லியிருந்தோம். சொன்னதுபடியே ரூ.2,500 திட்டத்தினை முதல்வர் விஜய் தொடங்கும் போது அனைவருக்கும் பணம் வந்திடும்.. இது வரை மகளிர் உரிமைத் தொகை வாங்காதவர்கள் பெயரும் அதில் ஆட்டோமெட்டிக்காக இடம் பெறும்.. யாரும் கவலைப்பட வேண்டாம். இதற்காக யாரும் தனித் தனியாக மனு கொடுக்க தேவையில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறினார்.
கடந்த திமுக ஆட்சியில் தொடர்ந்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் தவெக ஆட்சியிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ரூ. 1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், தவெக தேர்தல் அறிக்கையில் கூறிய ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதே போன்று இதுவரை வாங்காத குடும்பத் தலைவிகளும், புதிய பயனாளிகளும் மகளிரி உரிமைத் தொகை பெறுவதற்கு தனியாக மனு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தான் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ரமேஷ், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அனைத்து மகளிரும் இடம் பெறுவார்கள்.. யாரும் விடுபட மாட்டார்கள் என்று கூறினார்.
திருச்சியில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான ரமேஷ் கலந்துகொண்டு குறைகளை கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டார். அப்போது அமைச்சர் ரமேஷ் பேசியதாவது:-

மகளிர் உரிமைத் தொகை ரூ.2500
ஒரு மனு கொடுத்தால் அதை உடனே நிறைவேற்ற முடியாதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனால் கண்டிப்பாக அந்த மனுவுக்கு உரிய நடவடிக்கையை எடுப்போம். கொஞ்சம் கால அவகாசம் மட்டும் கொடுங்க. கண்டிப்பாக நம்ம முதல்வர் விஜய் எல்லாருக்கும் எல்லாம் செய்து கொடுப்பார். மக்களும் பெரிய கோரிக்கைகள் எல்லாம் வைக்கவில்லை. அடிப்படை விஷயங்களை செய்யச் சொல்லி தான் கோரிக்கை மனு கொடுக்கிறார்கள்.
கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் மக்களை சந்திக்கவே இல்லை.. ஆனால் இப்போது மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை நாங்கள் கேட்டு வருகிறோம். மகளிர் உரிமைத் தொகைக்காக நிறைய பேர் மனு கொடுக்கின்றனர். இதனை அனைத்தையும் நாங்க பரிசீலித்து வருகிறோம். தேர்தலுக்கு முன்னாடியே தமிழக வெற்றிக் கழகம் வாக்குறுதி கொடுத்து இருந்தது. குடும்பத் தலைவிகள் எல்லாருக்கும் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.2,500 தருவோம் என சொல்லியிருந்தோம்.
ஆட்டோமேட்டிக்காக பணம் ஏறிடும்
யாரும் கவலைப்பட வேண்டாம்.. இப்போது ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறோம். மகளிர் உரிமைத் தொகைக்காக யாரும் தனியாக மனு கொடுக்க வரிசையில் நிற்க வேண்டாம். தயவு செய்து இங்கு நின்று நேரத்தை வீண் செய்ய வேண்டாம். நீங்க உங்க வீட்டில் உள்ள வேலைகளை பார்க்கலாம். ஏனென்றால் இதுவரை மகளிர் உரிமைத் தொகை வாங்குகிறவர்களாக இருந்தாலும் சரி.. இப்போது வரை மகளிர் உரிமை தொகை வாங்காமல் இருப்பவர்களும் சரி.. எல்லாருக்கும் சேர்த்து உங்க பெயர் எல்லாம் மொத்தமாக முதல்வர் விஜய் இதற்கான அறிவிப்பை வெளியிடும் போது ஆட்டோமேட்டிக்காக எல்லாருக்கும் பணம் ஏறிடும்.
தனியாக மனு கொடுக்க தேவையில்லை
நாங்க தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தது போலவே மாதம் ரூ.2,500 கொடுப்போம். மாதம் ரூ.2,500 திட்டத்தினை முதல்வர் விஜய் தொடங்கும் போது அனைவருக்கும் பணம் வந்திடும்.. இதற்காக யாரும் தனித் தனியாக மனு கொடுக்க தேவையில்லை. இதுவரை வாங்குகிறவர்கள், வாங்காதவர்கள் என எல்லார் பெயருக்கும் மொத்தமாக லிஸ்ட் ரெடியாகி பணம் வந்துடும். இன்னும் பட்ஜெட் நாங்க தாக்கல் செய்யவில்லை. விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
இன்னைக்கு நீங்க கொடுக்கின்ற எல்லா மனுக்களையும் நானே படித்து பார்த்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லி எதையெல்லாம் மேக்சிமம் செய்ய முடியுமோ அதை எல்லாம் உடனே செய்து விடுவோம். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.














Click it and Unblock the Notifications