Fact Check - ஆசிக்கா? ஆசிஷா?.. மைசூர் பொறியியல் மாணவி கொலைக்கு லவ் ஜிஹாத் காரணமா? உண்மை இதுதான்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூரில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்த நிலையில் அவரை இஸ்லாமிய இளைஞர் ஒருவர் லவ் ஜிஹாத் செய்து கொன்றுவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்ட நிலையில் தற்போது அதன் உண்மைத் தன்மை குறித்து அலசுவோம்.
மைசூரில் உள்ள வித்யாவர்தக் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தவர் அபூர்வா ஷெட்டி. இவர் மைசூர் - ஹுனாசூர் சாலையில் அமைந்து இருக்கும் விடுதியில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார்.
இறந்த மாணவி விடுதியில் தனது ஆண் நண்பருடன் தங்கி இருந்த நிலையில் அவர் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவியை கொன்றவர் ஆசிக் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

இணையதள செய்தி
இது தொடர்பாக ஸ்டார் ஆஃப் மைசூர் என்ற இணையதளத்தில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி ஒரு செய்தி வெளியானது. அதில், கொல்லப்பட்ட அபூர்வா ஷெட்டி 21 வயது பெண் என்றும் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வந்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஹிங்கல் கிராமத்தை சேர்ந்த 26 வயதான ஆசிக் என்று என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

லவ் ஜிஹாத் சந்தேகம்
இந்த நிலையில், அபூர்வா ஷெட்டி லவ் ஹிஜாத் காரணமாக கொல்லப்பட்டார் என சமூக வலைதளங்களில் வலதுசாரிகள் குற்றம்சாட்டினர். இந்துத்துவா ஆதரவாளரான சுரேஷ் சாவன்கே நடத்தி வரும் சுதர்ஷன் டிவியில் பணிபுரியும் சாகர் குமார் என்பவர், "ஸ்டார் ஆஃப் மைசூர்" செய்தியை பகிர்ந்து "எனது அப்துல் அப்படியல்ல" என்று குறிப்பிட, இதை வைத்து பலரும் லவ் ஜிஹாத் கொலை என்று குற்றம்சாட்டினர்.

ஆசிகா ஆஷிஷா?
இது தொடர்பாக மைசூரு தேவாராஜா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ள முதல் தகவல் அறிக்கையில், அபூர்வா ஷெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள நபரின் பெயர் ஆசிஷ் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், வலதுசாரிகளும், சில ஊடகங்களும் கடைசி எழுத்தை மாற்றி ஆசிஷ் என்பதற்கு பதில் ஆசிக் என்று தகவல் பரப்பி இருப்பது உறுதியாகியுள்ளது.

முதல் தகவல் அறிக்கை
ஆஷிஷ் ஆகஸ்டு 31 ஆம் தேதி விடுதியில் அறையை முன்பதிவு செய்துள்ளார் என்றும் ஆகஸ்டு 30 ஆம் தேதி அபூர்வா ஷெட்டி கடைசியாக தனது குடும்பத்தினருடன் பேசியுள்ளார் எனவும், அவரது உடல் ஆகஸ்டு 31 - செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு இடைப்பட்ட நேரத்தில் மீட்கப்பட்டு உள்ளது என்று எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் மதமா என்று அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

என்ன மதம்?
இது தொடர்பாக மைசூர் துணை காவல் கண்காணிப்பாளர் அன்பிரகாஷ் கவுடா கூறுகையில், "நான் தான் முதலில் அந்த பெண்ணின் உடலை பார்த்தேன். அதற்கான ஆவணங்களை திரட்டியதும் நானே. அவர் பெயர் ஆஷிக் இல்லை, ஆசிஷ். அவர் இந்து மதத்தை சேர்ந்தவர். இதில் மதசாயம் பூச வேண்டாம். இந்த கொலைக்கு மதம் காரணமில்லை." என்றார். இது தொடர்பாக இறந்த பெண்ணின் தந்தை ரவிஷ் குமாரும் கைதான நபர் இந்து மதத்தை சேர்ந்த வொக்கலிகா சமுதாயத்தை சேர்ந்தவர்." என்று கூறியுள்ளார்.

Fact Check
வெளியான செய்தி
கர்நாடகா மாநிலம் மைசூரில் பொறியியல் மாணவியை ஆசிக் என்ற இளைஞர் லவ் ஜிஹாத் காரணமாக கொலை செய்துவிட்டார்.
முடிவு
வழக்கில் கைதானவர் ஆஷிஷ் என்று FIRஇல் உள்ளது. டிசிபியும் கொலைக்கு மதம் காரணமில்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications