ஜி20 மாநாடு.. டெல்லியில் குவியும் உலக தலைவர்கள்.. சேரியை ஸ்கிரீன் போட்டு மூடிய மோடி அரசு? உண்மை என்ன
டெல்லி: ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெறும் நிலையில், அங்குக் குடிசை பகுதிகள் ஸ்கிரீன் கொண்டு மூடப்பட்டுள்ளதாகப் போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
உலகின் முக்கிய அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பு சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிற்கும் வழங்கப்படும். கடந்த முறை இந்தோனேசியாவுக்கு இந்த தலைமை பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.

இந்தாண்டு முழுக்க நாட்டின் பல்வேறு நகரங்களிலும் ஜி20 தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், டெல்லியில் இப்போது உச்சி மாநாடு நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு நாட்கள் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது.
உச்சி மாநாடு: இந்த உச்சி மாநாட்டிற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. டெல்லியில் உலக தலைவர்கள் பலரும் குவிந்துள்ள நிலையில், அங்கே பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிரோன் மூலம் டெல்லியில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தலைவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளைச் சுற்றிப் பல அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே சாலையோரம் பச்சை நிறத்தில் திரைச்சீலைகள் உடன் பிரதமர் மோடியின் படம் கொண்ட ஜி20 பேனர்களின் படம் இப்போது சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது. டெல்லியில் இப்போது இந்தப் போட்டோக்கள் எடுக்கப்பட்டதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
சாடல்: டெல்லியில் உள்ள குடிசை பகுதிகளை நீக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மோடி அரசு, திரைச்சீலைகள் கொண்டு குடிசை பகுதிகளை மூடியுள்ளதாக நெட்டிசன்கள் பலரும் சாட்டினர். மோடி அரசு தனது தோல்வியை மறைக்கவே இப்படிச் செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போட்டோவை பகிர்ந்த நெட்டிசன் ஒருவர், "டெல்லியில் எப்படி ரொம்பவே ஈஸியாக வறுமை ஒழித்துள்ளார்கள் பாருங்கள். நாட்டில் வறுமையை ஒழிக்கப் பாடுபடும் அரசு சாரா நிறுவனங்கள் இதுபோல பேனர்கள், திரைச்சீலைகளை வைத்து ஈஸியாக வறுமையை ஒழிக்கலாம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். ஜி20 நெருங்க நெருங்க இந்தப் படத்தை மேலும் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மை தானா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உண்மை என்ன: இந்த படத்தை நாம் ரிவர்ஸ் சேர்ச் செய்யும் போது இது புது படம் இல்லை.. பழைய படம் என்பது நமக்குத் தெரிகிறது. இந்த போட்டோ கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி எடுக்கப்பட்டது. அப்போது மும்பையில் ஜி20 சார்ந்து ஒரு நிகழ்வு நடைபெற்ற நிலையில், வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் உள்ள ஜோகேஸ்வரி குடிசை பகுதியை மறைக்க இப்படிச் செய்துள்ளனர். அப்போதே பல செய்தி நிறுவனங்கள் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளன.
ஜி20 தொடர்பாக மும்பையில் நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் இதுபோல திரைச்சீலைகளைப் போட்டு குடிசை பகுதிகளை மூடியுள்ளதாக அப்போதே பல செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மூலம் இப்போது டெல்லியில் எடுக்கப்பட்ட படம் என்று இணையத்தில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெளிவாகிறது. பழைய போட்டோவை தான் இப்போது எடுக்கப்பட்ட படத்தைப் போலச் சிலர் பரப்பி வருகின்றனர்.

Fact Check
வெளியான செய்தி
டெல்லியில் ஜி20 மாநாடு நடக்கும் நிலையில், அங்குள்ள குடிசை பகுதிகளைத் திரைச்சீலைகள் கொண்டு மூடியுள்ளனர்.
முடிவு
கடந்த 2022இல் மும்பையில் எடுக்கப்பட்ட படத்தை.. ஏதோ இப்போது எடுக்கப்பட்ட படத்தைப் போலச் சிலர் பொய்யாகப் பரப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications