சென்னை சூப்பர் மார்கெட்ல துள்ளி அடிக்கும் மீன்களை பாருங்க! வெள்ள பாதிப்பு என பரவும் வீடியோ உண்மையா?
சென்னை: சென்னையில் ஏற்பட்டு உள்ள பெரு வெள்ளத்தின்போது சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்குள் புகுந்த மழை நீரில் மீன்கள் துள்ளி அடிக்கும் காட்சி என்று ஒரு வீடியோ அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மை தன்மை என்னவென்று பார்ப்போம்.
சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் கொட்டித் தீர்த்த பெரும் மழையின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகள், கடைகள் என எல்லா இடங்களுக்கு உள்ளேயும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர். சென்னை வெள்ளம் தொடர்பாக பல்வேறு காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி காண்போரை கலங்க வைத்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க இதுதான் வாய்ப்பு என்று கருதி அரசியல் உள்நோக்கம் காரணமாகவும், சமூக வலைதளத்தில் அதிக லைக்குகளை பெறுவதற்காகவும் பலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

குறிப்பாக 2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின்போது எடுத்த காட்சிகள், வெவ்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட காட்சிகளை பகிர்ந்து தற்போது ஏற்பட்ட சென்னை வெள்ளம் என்று பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. "சென்னை வெள்ளத்தின்போது சூப்பர் மார்க்கெட் உள்ளே என்ன நடக்கிறது என்று பாருங்கள்" என்றி குறிப்பிட்டு சென்னையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்குள் புகுந்த வெள்ள நீரில் மீன்கள் துள்ளி அடித்ததாக தெரிவித்து உள்ளனர்.
அந்த வீடியோவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றின் தரையில் தேங்கி கிடக்கும் நீரில் நூற்றுக்கணக்கான மீன்கள் துள்ளுகின்றன. அந்த வீடியோ உற்று நோக்கும்போது அவை வளர்ப்பு மீன்களை போன்றே தெரிந்தன. அதேபோல் அங்கிருந்தவர்கள் சென்னை மக்களைபோல் இல்லை. வெள்ளையர்கள்போன்று இருப்பதை காண முடிந்தது. இது தொடர்பாக கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் நாம் ஈடுபட்டோம். அப்போது வைரல் ஹாக் என்ற யூடியூப் சேனலில் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார்கள்.

என்ன நடந்தது என்று முழுமையாக விசாரித்தபோது இந்த வீடியோ ஜியார்ஜியாவின் திபிலிசி என்ற நகரத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த மிகப்பெரிய மீன் தொட்டி ஒன்று திடீரென உடைந்ததால் தண்ணீர் சூழ்ந்து உள்ளே இருந்த மீன்கள் அதில் துள்ளியடித்தன. இதனை கடை ஊழியர்கள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டார்கள். இதைதான் சென்னை வெள்ளம் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

Fact Check
வெளியான செய்தி
சென்னை வெள்ளத்திபோது அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்குள் புகுந்த நீரில் மீன்கள் துள்ளி குதிக்கின்றன.
முடிவு
இது 2018 ஆம் ஆண்டு ஜியார்ஜியாவில் மீன் தொட்டி உடைந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ












Click it and Unblock the Notifications