Fact Check: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை வீடியோ.. ஹைதராபாத்தில் இல்லை.. குஜராத்திலாம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பெய்து வரும் கன மழைக்கு இடையே, முதலையொன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதாக கூறி ஒரு வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.
ஹைதராபாத் உட்பட தெலுங்கானாவின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதியில் உள்ள புராணா புல் அருகே மூசி ஆற்றின் கரையில் ஒரு முதலை ஓய்வெடுப்பதை கடந்த வாரம் சிலர் பார்த்தனர்.
இந்த அச்சம் விலகுவதற்குள், ஹைதராபாத் நகருக்குள் வெள்ளத்தில் ஒரு முதலை நீந்திச் செல்வது போன்ற காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முதலையை பார்த்த மக்கள் அச்சப்படுகிறார்கள். அது மக்களை பார்த்து வாயை பிளந்து சீறுகிறது. அது கடிக்காமல் இருக்க மக்கள், தப்பிக்க முயல்கிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாக சுற்றி வருகிறது.
Fact check: இந்த வீடியோ ஹைதராபாத்தில் நடந்த நிகழ்வு இல்லை. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே, இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் உலவியுள்ளது.
2029ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், குஜராத் மாநிலம், வதோதராவில் பலத்த மழை பெய்தது. விஸ்வாமித்ரி நதி நிரம்பி வழிந்தது. விஸ்வாமித்ரி நதி முதலைகளின் உறைவிடமாகும். எனவே, அங்கிருந்து முதலைகள் வதோதரா நகருக்குள் வந்தன.
ஆகஸ்ட்டில் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள வீடியோவின் படி "வெள்ளம் காரணமாக, வதோதராவின் வீட்டு பகுதிகளுக்குள் முதலைகள் நுழைந்த சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 10 அடி நீளமுள்ள முதலையை மக்கள் பார்த்து வன அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அதை பிடித்தனர் ". என்று கூறப்பட்டிருந்தது. அந்த வீடியோதான் இப்போது தவறுதலாக சுற்றி வருகிறது.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருடன் தொலைபேசியில் பேசி நிலவரத்தை கேட்டறிந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம், தேவைப்படும் இந்த நேரத்தில் இரு மாநிலங்களுக்கும் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது" என்று தெரிவித்தார்.
Fact Check
வெளியான செய்தி
ஹைதராபாத்தில் பெய்து வரும் கன மழைக்கு இடையே, முதலையொன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதாக கூறி ஒரு வீடியோ காட்சி வைரலாகியுள்ளது
முடிவு
இந்த வீடியோ ஹைதராபாத்தில் நடந்த நிகழ்வு இல்லை. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே, இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் உலவியுள்ளது.