Fact Check: வாய்க்காலே இல்லாத பாலம்.. பரவி வரும் போட்டோ.. இது எங்கே நடந்த கொடுமை?
சென்னை: வாய்க்கால் இல்லாமல் பாலம் கட்டப்பட்டுள்ள புகைப்படங்கள் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த பாலம் தமிழ்நாட்டில் கட்டப்பட்டதா? உண்மை என்னவென்று பார்க்கலாம்.
சமீபகாலமாக பாலம் தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. அண்மையில் திருவண்ணாமலை அருகே கனமழை வெள்ளம் காரணமாக புதிதாக அமைக்கப்பட்ட பாலம் உடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள், தமிழக அரசை கடுமையாக விமர்சித்தன.

வாய்க்கால் இல்லாமல் பாலம்
இந்நிலையில், வாய்க்கால் இல்லாமல் பாலம் கட்டப்பட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு, தமிழக அரசையும், அதிகாரிகளையும் விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால், தமிழ்நாட்டில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளதாக பகிரப்பட்டு வரும் தகவல் முற்றிலும் பொய்யானது எனத் தெரியவந்துள்ளது. தென் ஆப்ரிக்காவின் கியானி நகராட்சியில் கட்டப்பட்டது இந்தப் பாலம் என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு ஆய்வு செய்து தெரிவித்துள்ளது. மேலும், கியானி நகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட ஃபேஸ்புக் பதிவும் ஆதாரமாக வெளியிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
உண்மை சரிபார்புக் குழு வெளியிட்டுள்ள தகவலில், "இது தமிழ்நாட்டில் நடந்தது அல்ல. தென்னாப்பிரிக்காவின் கியானி நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணியைத் தமிழ்நாடு என்று திரித்து வதந்தி பரப்பி வருகிறார்கள். இந்தப் புகைப்படங்கள் கடந்த 07.12.2024 அன்று கியானி நகராட்சியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. வதந்தியைப் பரப்பாதீர்!" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
வாய்க்கால் இல்லாமல் பாலம் கட்டப்பட்டுள்ள புகைப்படங்கள் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
முடிவு
இது தமிழ்நாட்டில் நடந்தது அல்ல. தென்னாப்பிரிக்காவின் கியானி நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணி, தமிழ்நாடு என்று திரித்து வதந்தி பரப்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications