Fact Check: என்னாது சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் "கொடநாடு" என சொன்னதும் எடப்பாடி வெளியேறினாரா?
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடநாடு பற்றி பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார் என பரவி வரும் வீடியோ பொய்யானது.
தமிழக சட்டசபையில் கடந்த 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர். என். ரவி முழுமையாக படிக்கவில்லை என புகார் எழுந்தது.
ஆளுநர் உரையை படித்துக் கொண்டிருந்த போதே அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்டோர் முதல்வருக்கு தெரியப்படுத்தினர். அவரும் ஆமாம் முழுமையாக படிக்கவில்லை என கூறி ஆலோசனை நடத்தினார்.

8 நிமிடங்கள்
உடனே 8 நிமிடங்களில் ஒரு தீர்மானம் தயாரானது. அந்த தீர்மானத்தை ஆளுநர் தனது உரையை வாசித்து முடித்தவுடன் முதல்வர் ஸ்டாலின் எழுந்து தீர்மானத்தை வாசித்தார். ஆளுநர் உரை என்பதால் அன்றைய தினம் ஆளுநர் ரவி உரையை வாசிப்பதற்கும் அதை சபாநாயகர் அப்பாவு தமிழாக்கம் செய்வதற்கும் மட்டுமே மைக் வைக்கப்பட்டிருந்தது.

முதல்வர் ஸ்டாலின்
இதனால் முதல்வர் ஸ்டாலின் மைக் இல்லாமலேயே பேசினார். அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்திருந்தார். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அதில் முதல்வர் ஸ்டாலின் கொடநாடு என்றதுமே எடப்பாடி ஓட்டம் பிடித்தார் என்பது போல் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவின் உண்மைத்தன்மை
இந்த வீடியோவில் உள்ள ஆடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்ததில் ஜனவரி 9ஆம் தேதி அன்று ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தைத்தான் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தாரே தவிர கொடநாடு பற்றி அவர் பேசியதாக எந்த செய்தியும் இல்லை. மேலும் ஸ்டாலின் பேசியதாக கூறப்படும் ஆடியோவுக்கும் அவரது வாய் அசைவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே எடிட் செய்து ஆடியோ மாற்றப்பட்டது.

தமிழக அரசு
முதல்வர் பேசியது, தமிழக அரசால் தயாரித்து கொடுக்கப்பட்ட உரையை ஆளுநர் படிக்கவில்லை என்றும் ஆளுநர் தாமாக வாசித்த உரை எதுவும் அவைக் குறிப்பில் இருக்கக் கூடாது. அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் ஏற்றப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் அவையிலிருந்து வெளியேறிய எடப்படி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், நாங்கள் ஆளுநர் உரையைத்தான் கேட்க வந்தோமே தவிர முதல்வர் உரையை அல்ல என்றார். மேலும ஆளுநர் பேசிய பிறகு முதல்வர் பேசுவது மரபு அல்ல என்றும் தெரிவித்திருந்தார். அந்த பேட்டியில் அவரும் கொடநாடு குறித்து முதல்வர் பேசியதாக தெரிவிக்கவில்லை. எனவே முதல்வர் ஸ்டாலின் கொடநாடு என சொன்னதற்காக எடப்பாடி பழனிசாமி வெளியேறவில்லை.

Fact Check
வெளியான செய்தி
சட்டப்பேரவையில் கொடநாடு பற்றி பேச்சு எழுந்ததும் எடப்பாடி பழனிசாமி வெளியேறினார்
முடிவு
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதால்தான் எடப்பாடி பழனிசாமி வெளியேறினார். எனவே முதல்வர் கொடநாடு என சொல்வது போல் வைரலாகும் ஆடியோ எடிட் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications