கொரோனாவுக்கு சிகிச்சை... தப்லீக் ஜமாத்தினர் அடாவடி என்ற வீடியோ உண்மையா...?
லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸியாபாத் மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லீக் ஜமாத்தினர் நிர்வாணமாக ஓடி அடவாடி செய்ததாக வெளியான வீடியோ பொய்யானது என நிரூபணமாகியுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் உபி மாநிலம் காஸியாபாத் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் தப்லீக் ஜமாத்தினர் நிர்வாணமாக சுற்றித்திரிந்து அடாவடி செய்வதாக ஒரு வீடியோ வெளியாகி அது சமூக வலைதளங்களில் உலா வந்தன. இந்நிலையில் அந்த வீடியோவில் இருப்பது தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதும், அந்த நிகழ்வு இந்தியாவில் நடந்தது இல்லை என்பதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதியன்று சபீக் அப்ரோ என்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர் அங்குள்ள மசூதி ஒன்றின் கழிவறையில் சுற்றிதிரிந்த போது எடுக்கப்பட்ட வீடியோ என fact check மூலம் அறியவந்துள்ளது. அதற்குள் அந்த வீடியோவில் இருப்பவர் தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர் என தவறான தகவலின் அடிப்படையில் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன.
இதனிடையே கொரோனா விவகாரத்தை அடிப்படையாக வைத்து பல்வேறு தவறான தகவல்களும், வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதை தடுக்க சைபர் கிரைம் கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே சர்ச்சைக்குரிய அந்த வீடியோவுக்கும் தப்லீக் ஜமாத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என பல்வேறு இஸ்லாமிய கட்சிகளின் தலைவர்களும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.