Fact check: மகாவிஷ்ணுவை கண்டித்த ஆசிரியர் சங்கர் கிறிஸ்தவர் என பரவி வரும் ஸ்கிரீன்ஷாட்.. உண்மை என்ன?
சென்னை: சென்னை அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை கண்டித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரின் ஃபேஸ்புக் பேஜ், கிறிஸ்தவர் பெயரில் இருப்பதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டு வருகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
அண்மையில் சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில், தன்னம்பிக்கைப் பேச்சாளராக அறியப்படும் மஹாவிஷ்ணு என்பவர் ஒரு நிகழ்ச்சி நடத்தினார். மாணவிகள் மத்தியில் உத்வேக உரை வழங்க வந்தவர் பாவ, புண்ணியம், முன்ஜென்ம பலன்கள் பற்றி பேசினார். மேலும் மாற்றுத்திறனாளியாகப் பிறக்க முன்ஜென்ம பாவ வினைகளே காரணம் என்றும் கூறினார்.

மகாவிஷ்ணு சர்ச்சை: அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பள்ளி ஆசிரியருடன் அவர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக தேடல் சொற்பொழிவு ஆற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பள்ளியில் பிற்போக்குத்தனமான உரையை அனுமதிப்பதா பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேற்று காலை நேரில் சென்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும், மகாவிஷ்ணு பேசியதை அப்போதே கண்டித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கருக்கு சால்வை அணிவித்து அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.
பரவி வரும் தகவல்: இந்நிலையில், மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை கண்டித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரின் ஃபேஸ்புக் பக்கம் கிறிஸ்துவர் பெயரில் இருப்பதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டு வருகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

உண்மை என்ன?: சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வரும் 'அந்தோணி பர்ணாந்து' என்ற ஃபேஸ்புக் பக்கம் ஆசிரியர் சங்கருடையது அல்ல. சென்னை அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு பேசியதை ஃபேஸ்புக்கில் தொடர்ந்து விமர்சித்து வந்த அந்தோணி பர்ணாந்து என்ற நபர், மகாவிஷ்ணுவின் பேச்சை கண்டித்த ஆசிரியர் சங்கரை பாராட்டும் வகையில் அவரது புகைப்படத்தை நேற்று தனது ப்ரொபைல் படமாக மாற்றி உள்ளார்.
ஆசிரியர் சங்கரின் புகைப்படத்தை ப்ரொஃபைல் படமாக வைத்திருப்பதால், அந்தோணி பர்ணாந்து தான் ஆசிரியர் சங்கரின் பெயர் என உள்நோக்கத்தோடு வதந்திகளைப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகியுள்ளது. மத வெறுப்பை பரப்பும் வகையில் இந்த ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டு வருவது புலனாகியுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
சென்னை அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை கண்டித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரின் ஃபேஸ்புக் பக்கம் கிறிஸ்துவர் பெயரில் இருப்பதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டு வருகிறது.
முடிவு
இது முற்றிலும் பொய்யான தகவல். ஆசிரியர் சங்கரை பாராட்டி அவரது புகைப்படத்தை புரொஃபைல் பிக்சராக வைத்துள்ளவரின் பெயர் அது.












Click it and Unblock the Notifications