கள்ளக்குறிச்சி மரணம்.. அண்ணாமலை பரப்புவது தவறான தகவல் என அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்
சென்னை: கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்திற்கு 66 உயிர்களைப் பலி கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சி, தங்கராசு என்பவரைப் பலியிட்டிருக்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பாக அண்ணாமலை பரப்புவது தவறானத கவல் என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்திற்கு 66 உயிர்களைப் பலி கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சி, தங்கராசு என்பவரைப் பலியிட்டிருக்கிறார்கள்.

ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கூட கண்காணிக்காமல் மாவட்டக் காவல்துறை செயல்படுகிறது என்பது, ஒட்டு மொத்த தமிழகக் காவல்துறைக்கே கரும்புள்ளி.
தனது துறையின் அடிப்படைப் பணிகளைக் கூட கவனிக்காத வண்ணம், அந்தத் துருப்பிடித்த இரும்புக்கரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்? மீண்டும் அதே பகுதியில், அதே கள்ளச்சாராய வியாபாரிகளால் ஒரு உயிர் போயிருக்கிறதே. இதற்கு யார் பொறுப்பு?
66 உயிர்களைக் கொன்று ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள், மீண்டும் துணிச்சலாக கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என்றால், அது காவல்துறைக்கே தெரியாமல் நடக்கிறது என்பதை எப்படி நம்ப முடியும்? காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதா அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தடுக்கப்படுகிறதா?
கள்ளச்சாராய விற்பனையில் கிடைக்கும் பணத்தில் யார் யாருக்கெல்லாம் பங்கு செல்கிறது? ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இனியும் இல்லாத காரணங்களின் பின்னால் முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கம்போல ஒளிந்து கொள்ளாமல், தைரியமாக வந்து விளக்கமளிக்க வேண்டும்" இவ்வாறு கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பதிவில் உள்ளது தவறான தகவல் என்று விளக்கம் அளித்துள்ளது. அந்த பதிவில், "கடந்த 2024ம் ஆண்டு கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் நிகழ்ந்த போது 19.06.2024 அன்று மர்மமான முறையில் தங்காசு என்பவர் இறந்து கிடந்தார். அவரது இறப்புக்கு விஷச்சாராயமே காரணம் என்று தற்போது தெரியவந்ததை அடுத்து சிறையில் உள்ள கோவிந்தராஜன் மற்றும் தாமோதரன் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்து விஷச்சாராயம் விற்றதில் மீண்டும் ஒருவர் பலி என்று தவறான தகவல்கள் பரவி வருகிறது" என்று கூறியுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
வெளியான செய்தி : கள்ளச்சாராய வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும கள்ளச்சாராயம் காய்ச்சி தங்கராசு என்பவரை பலியிட்டிருக்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
முடிவு
கடந்த 2024ம் ஆண்டு கள்ளக்குறிச்சி சாரய சம்பவம் நிகழ்ந்த போது 19.06.2024 அன்று மர்மமான முறையில் தங்காசு என்பவர் இறந்து கிடந்தார். அவரது இறப்புக்கு விஷச்சாராயமே காரணம் என்று தற்போது தெரிய வந்துள்ளது












Click it and Unblock the Notifications