இடிக்கப்பட்ட கங்கணா ராணாவத் அலுவலகம்.. புதிய கட்டிடம் கட்ட முகேஷ் அம்பானி நிதி உதவியா? உண்மை என்ன?
மும்பை: மும்பையில் நடிகை கங்கணா ராணாவத்தின் அலுவலகம் இடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு முகேஷ் அம்பானி சார்பாக புதிய அலுவலகம் கட்ட நிதி வழங்கப்படுகிறது என்று பொய்யான செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
தேசிய செய்திகளில் தற்போது கங்கணா ராணாவத் தலைப்பு செய்தியாக மாறியுள்ளார். முதலில் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து இவர் சந்தேங்களை எழுப்பி சர்ச்சையை கிளப்பினார். அதன்பின் சல்மான் கான், கரண் ஜோகர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள்தான் சுஷாந்த் சிங் மரணத்திற்கு காரணம் என்றும் குறிப்பிட்டார்.
அதோடு சுஷாந்த் மரணத்திற்கு காரணமானவர்களை மஹாராஷ்டிராவில் சிவசேனா அரசு காப்பாற்றுகிறது என்று புகாரும் வைத்தார். இதன் காரணமாக தற்போது சிவசேனாவின் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கும், கங்கணா ராணாவத்திற்கும் கடுமையான மோதல் நிலவி வருகிறது.
இன்னொரு பக்கம் கங்கணா ராணாவத்திற்கு சில மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுத்தது. இந்த நிலையில் கடந்த புதன் கிழமை மும்பை பந்த்ராவில் இருக்கும் கங்கணா ராணாவத்திற்கு சொந்தமான அவரின் அலுவலகம் மும்பை கார்ப்பரேஷன் மூலம் இடிக்கப்பட்டது .
விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டதாக கூறி இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. சிவசேனா - கங்கணா மோதலே இதற்கு காரணம் என்கிறார்கள். மும்பையில் நடிகை கங்கணா ராணாவத்தின் அலுவலகம் இடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள் . இந்த நிலையில் அவருக்கு முகேஷ் அம்பானி சார்பாக புதிய அலுவலகம் கட்ட நிதி வழங்கப்படுகிறது என்று பொய்யான செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
அதன்படி கங்கணா ராணாவத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக முகேஷ் அம்பானி ரூபாய் 200 கோடி தருகிறார் என்று இணையத்தில் பொய்யான செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியை தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. நாங்கள் கங்கணா ராணாவத்திற்கு நிதி உதவி எதுவும் அளிக்கவில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக விளக்கப்பட்டுள்ளது.
Fact Check
வெளியான செய்தி
நடிகை கங்கணா ராணாவத்திற்கு புதிய அலுவலகம் முகேஷ் அம்பானி சார்பாக கட்ட நிதி வழங்கப்படுகிறது என்று செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
முடிவு
ரிலையன்ஸ் நிறுவனம் இந்த செய்தியை மறுத்துள்ளது.