Fact Check: சமயபுரம் கோவில் நுழைவாயில் இடிப்பு.. காட்டுத்தீயாகப் பரவிய தகவல்.. உண்மை என்ன?
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் நுழைவாயில் இன்று கிரேன் உதவியுடன் இடிக்கப்பட்ட நிலையில், "கோவில் சம்பந்தமாக அனைத்தும் இடிக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார் பாஜக முன்னாள் நிர்வாகி கல்யாண் ராமன். இந்த தகவல் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக பகிரப்பட்டு வந்த நிலையில், உண்மையான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில். சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு திருச்சி மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஏன் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் தினம்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

சமயபுரம் நுழைவாயில் இடிப்பு: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சமயபுரம் கோவிலுக்குச் செல்லும் நால்ரோடு பகுதியில், சமயபுரம் திருக்கோவில் நுழைவு வாயில் உள்ளது. பக்தர்களை வரவேற்கும் வகையில் இந்த நுழைவாயில் பல ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் மற்றும் கற்களால் பிரமாண்டமாக கட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த நுழைவாயில் இன்று இடிக்கப்பட்டது. "கோவில் சம்பந்தமாக அனைத்தும் இடிக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார் பாஜக முன்னாள் நிர்வாகி கல்யாண் ராமன். இந்த தகவல் சமூக வலைதளங்களில் திமுக அரசுக்கு எதிராக விமர்சனத்தோடு பலராலும் பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில், சமயபுரம் கோவில் நுழைவாயில் அகற்றப்பட்டதற்கு காரணம், நேற்று நள்ளிரவில் லாரி மோதி அது சேதமானதே என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே முழுமையாக அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?: நேற்று இரவு சமயபுரம் திருக்கோவில் நுழைவு வாயில் இடதுபுற சிமெண்ட் தூண் கட்டையில் நேற்று நள்ளிரவு நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மோதியுள்ளது. இதனால் தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேற்புற வளைவிலும் விரிசல் விழுந்துள்ளது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விழும் அபாயத்தில் இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததுமே, சமயபுரம் போலீசார் அங்கு சென்றுள்ளனர். அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், அந்த நுழைவாயிலில் கனரக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. போக்குவரத்து மாற்றம் செய்து போலீசாரும் தீயணைப்புத் துறையினரும், பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புக்காக இடிக்கப்பட்டது: அதைத்தொடர்ந்து இன்று இந்த நுழைவாயில் கிரேன் உதவியுடன் இடிக்கப்பட்டது. இன்று ஆடி 18 என்பதால் ஏராளமான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த நிலையில், அந்த நுழைவாயில் எந்த நேரத்திலும் அசம்பாவிதத்தை ஏற்படுத்தலாம் என்பதால், பாதுகாப்பு கருதி நுழைவு வாயில் இடிக்கப்பட்டது.

நுழைவு வாயிலின் மேற்பகுதியில் இருந்த கடவுள் சிலைகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டன. மேலும் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் வராத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கிரேன் உதவியுடன் நுழைவு வாயில் இடிக்கப்பட்டது.
வெளியான செய்தி
திருச்சி சமயபுரம் நுழைவாயில் இன்று இடிக்கப்பட்ட நிலையில் "கோவில் சம்பந்தமாக அனைத்தும் இடிக்கப்படுகிறது" என்ற தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

Fact Check
வெளியான செய்தி
திருச்சி சமயபுரம் நுழைவாயில் இன்று இடிக்கப்பட்ட நிலையில் “கோவில் சம்பந்தமாக அனைத்தும் இடிக்கப்படுகிறது” என்ற தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
முடிவு
சமயபுரம் கோயில் நுழைவுவாயில், லாரி மோதி சேதமானதால், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே இடிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications