அட்சய திருதியை.. விலை உயர்ந்தாலும் டன் கணக்கில் விற்பனையான தங்கம்! எவ்வளவுன்னு பாருங்க
சென்னை: தங்கம் விலை அதிகரித்து இருந்தாலும், அட்சய திருதியை நாளில் தங்கநகை விற்பனை படுஜோராக நடந்துள்ளது. சிறிய கடைகள் முதல் பெரிய நகைக்கடைகள் வரை வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது அட்சய திருதியை நாளில் எவ்வளவு தங்கம் விற்பனை ஆகியுள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற ஐதீகம் உள்ளது. இதனால், அட்சயதிருதியைக்கு குண்டுமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்று மக்கள் ஆசைப்படுவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை கடந்த ஞாயிற்றுக்கிழமையில் வந்தது. அதாவது 19 ஆம் தேதி பிற்பகலில் இருந்து 20 ஆம் தேதி பிற்பகல் வரை அட்சய திருதியை நாளாக சொல்லப்பட்டது.

14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை
இதனால், இரு நாட்களிலும் நகைக் கடைகளை நோக்கி மக்கள் படையெடுத்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாலும் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையிலும் இந்த ஆண்டு அட்சயதிருதியை நாளில் தங்கம் விற்பனை எவ்வளவு இருக்கும் என கணிக்க முடியாத நிலை இருந்தது. தங்கம் விலையை பொறுத்தவரை கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் ரூ.87,000 ஆக இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு விலை சுமார் 60 சதவீதம் உயர்ந்து விட்டது. தங்கம் விலை இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் ரூ. 1,14,240 ஆக இருந்தது. இந்த நிலையில், அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். எனினும், இந்த ஆண்டு விலை அதிகரித்து இருப்பதால் எடை அளவை வைத்து பார்த்தால் சுமார் 9 ஆயிரம் கிலோ அளவில்தான் விற்பனையாகிருக்கும் என்று நகை வியாபாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டை விட சரிந்தது
சில வியாபாரிகளிடம் கேட்ட போது 6 முதல் 7 டன் வரையே தங்கம் விற்பனை இருந்து இருக்கும் என்றனர். கடந்த ஆண்டும் கிட்டத்தட்ட இதே அளவில்தான் தங்கம் விற்பனை இருந்தது. அதாவது, கடந்த ஆண்டு இந்திய அளவில் 20 ஆயிரம் கோடியும் தமிழ்நாட்டில் ரூ.14 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் கோடியாக இருந்தது" என்றனர். விலையை பொறுத்து மதிப்பிட்டால் தங்க நகை விற்பனை கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது என்றே சொல்லப்படுகிறது. தங்கம் விலை கடுமையாக உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணம் எனவும் தெரிவித்தனர்.
தி.நகரில் அலைமோதிய கூட்டம்
அட்சய திருதியை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வந்ததால், தி.நகரில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியதை பார்க்க முடிந்தது. வழக்கமாக ஜவுளி கடைகளில்தான் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் அன்றைய நாளில், பிரபலமான நகைக்கடைகள் முதல் சிறிய நகைக்கடைகள் வரை வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது.
வாடிக்கையாளர்களை கவர பல ஆஃபர்களையும் நகைக்கடையினர் போட்டு வைத்து இருந்தனர். ஆபரணத் தங்கம் மட்டுமன்றி, வெள்ளிப் பொருட்களின் விற்பனையும் அமோகமாக இருந்தது. விளக்குகள், குங்குமச் சிமிழ் மற்றும் வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட வெள்ளி உபகரணங்களை மக்கள் அதிக அளவில் விரும்பி வாங்கினர். தி.நகரில் இரவு நேரத்தில் கூட வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியதை பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications