சீனா சைலண்டாய் செஞ்ச வேலை! ஒட்டு மொத்த தங்க மார்க்கெட்டில் வரப் போகும் பூகம்பம்! இனி தான் சம்பவமே!
சென்னை: உலகின் மிகப்பெரிய தங்க சந்தைகளில் ஒன்றான சீனாவில், தங்கம் வாங்குவோருக்கு பெரிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்க சேமிப்பை மரபாகக் கொண்ட சீனர்கள், சீன அரசின் புதிய அறிவிப்பால் சற்றே அதிர்ச்சியடைந்துள்ளனர். சீனாவின் இந்த திடீர் முடிவால் தங்க விலை மேலும் உயர வாய்ப்பிருக்கும், நிலையில் தங்கத்தின் விலை 5 ஆயிரம் டாலர் என்ற நிலையை விரைவில் கடக்கும் என அஞ்சப்படுகிறது.
அதாவது, சீன அரசு நவம்பர் 1 முதல் தங்க வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த முக்கிய வரிச் சலுகையை ரத்து செய்துள்ளது. இதுவரை, ஷாங்காய் கோல்ட் எக்சேஞ்ச் மூலம் தங்கம் வாங்கும் நகைக்கடைகள் மற்றும் விற்பனையாளர்கள், அதை விற்பனை செய்யும் போது மதிப்பு கூட்டு வரியை (VAT) சமன் செய்யும் வசதியை பெற்றிருந்தனர்.
இதனால் வாடிக்கையாளர்களும் குறைந்த விலையில் தங்கம் வாங்க முடிந்தது. ஆனால் இப்போது அந்த சலுகை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவு வரவிருக்கும் மாதங்களில் அரசு வருவாயை உயர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சீனா தங்க வரி
சீனாவில் தற்போது ரியல் எஸ்டேட் துறை மந்தமாகி வருவது, பொருளாதாரம் பலத்த அழுத்தத்தில் இருப்பது போன்ற காரணங்கள் உள்ளன. அதனால் அரசு கூடுதல் வருவாயை தேட ஏற்பாடு செய்து வருகிறது. இதன் விளைவாக தங்க விலை சீனாவில் மேலும் உயரும் வாய்ப்பு அதிகம் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்நிலையில் உலக தங்க சந்தையின் நிலையையும் கவனிக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கத்தை அதிகமாக வாங்கி வருகிறார்கள்.
சீன பொருளாதாரம் அழுத்தம்
அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகள், உலக அரசியல் பதற்றம், போருக்கான பயம் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை சாதனை அளவுக்கு உயர்ந்தது. அக்டோபர் மாதத்தில் தங்க மதிப்பு ஒரு அவுன்ஸுக்கு 4,000 டாலர் என்ற உச்சத்தை எட்டியது. ஆனால் திடீரென தங்க சந்தையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. சில நாட்களில் விலை வேகமாக சரிந்தது. உலக முதலீட்டாளர்கள் ETF போன்ற மியூச்சுவல் பண்ட் வடிவ தங்க முதலீடுகளைப் பகுதியளவில் விற்றதால் சந்தையில் பூகம்பம் ஏற்பட்டது. இந்தியாவிலும் தீபாவளி, தங்க வாங்கும் சீசன் முடிந்ததால் தேவை தற்காலிகமாக குறைந்தது.
உலக தங்க நிலை
எனினும், நிபுணர்கள் தங்கத்தின் எதிர்காலம் இன்னும் வலுவாகவே உள்ளது என்கிறார்கள். உலக மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருகின்றன. மேலும், பொருளாதார திடீர் அதிர்வுகளுக்கான பயம் முதலீட்டாளர்களை தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாக பார்க்கத் தூண்டுகிறது. சில நிபுணர்கள் அடுத்த ஓராண்டில் தங்கம் ஒரு அவுன்ஸ் 5,000 டாலர் வரை செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், சீனாவின் இந்த வரி முடிவு உலக தங்க சந்தைக்குப் பெரிய சிக்னல்.
பாதுகாப்பான முதலீடு தங்கம்
தங்கம் வாங்கும் நுகர்வோருக்கு முன்பை விட விலைச் சுமை அதிகரிக்கலாம். ஆனாலும் தங்கம் இன்னமும் 'பாதுகாப்பான செல்வம்' என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். தங்கம் விலை கடந்த அக்டோபர் 17ஆம் தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கியது. கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 சரிந்த நிலையில், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.3 ஆயிரம் குறைந்து காணப்பட்டது. கடந்த 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சவரனுக்கு ரூ.9 ஆயிரம் சரிந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications