ஓல்டு கோல்டுக்கு மவுசு.. பழசை வித்துட்டு புதுசு வாங்கும் மக்கள்! தங்க மார்கெட்டில் திடீர் பூகம்பம்!
சென்னை: இந்த ஆண்டு தீபாவளி மற்றும் தன்தேரஸ் பண்டிகை காலத்தில் தங்க விலை மிக அதிகமாக உயர்ந்ததால், மக்கள் புதிய நகைகள் வாங்குவதற்குப் பதிலாக தங்கள் வீட்டில் உள்ள பழைய நகைகளை மாற்றி புதிய நகைகளாக வாங்கும் எண்ணிக்கை சாதனை அளவுக்கு சென்றுள்ளதாக பொருளாதார அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
தீபாவளி பண்டிகை காலத்தில் தங்கத்தின் விலை 95 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. இதனால் புதிதாக தங்கம் வாங்குவதை விட, வீட்டிலிருந்த பழைய நகைகளை விற்று விட்டு, கூடுதலாக சிறிது பணம் செலுத்தி புதிய நகைகள் வாங்குவதையே விரும்பியுள்ளனர்.
'தி இகனாமிக் டைம்ஸ்' வெளியிட்ட அறிக்கையின்படி, டாடா குழுமத்துக்குச் சொந்தமான 'தனிஷ்க்' நகை நிறுவனத்தில் இந்த ஆண்டு தன்தேரஸ் நாளில் மொத்த விற்பனையில் சுமார் 50% வரை பழைய தங்க நகைகளை மாற்றிவிட்டு புதிய நகைகளை வாங்கியுள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது (35%) பெரிய உயர்வாகும்.

தங்க விலை உயர்வு
அதேபோல், ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனத்தின் நகை விற்பனையில் கடந்த ஆண்டின் 22% இல் இருந்து இப்போது 33% வரை பழைய தங்கத்தை மாற்றி விற்பனையாக உயர்ந்துள்ளது. சென்கோ கோல்டு நிறுவனத்திலும் இது 35% இலிருந்து 45% ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனத்தின் நிதி அலுவலர் தினேஷ் தலுஜா, "தங்க விலை மிகவும் கூடியுள்ளதால், மக்கள் புதிய தங்கத்தை வாங்குவதற்கு பதிலாக பழைய தங்கத்தை மாற்றுவதையே விரும்புகிறார்கள். விலை உயர்ந்ததால் பில்லின் மொத்த மதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் விற்பனை அளவு குறைந்துள்ளது. விலை சீராகியவுடன் விற்பனை அளவும் மீண்டும் உயரும்," என்றார்.
பழைய நகை மாற்றம்
இந்த ஆண்டின் தன்தேரஸ் (அக்டோபர் 18) அன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1.34 லட்சம் (ஜிஎஸ்டி உட்பட) வரை சென்றது. இது கடந்த ஆண்டு இதே நாளில் இருந்த ரூ.80,469 என்ற விலையுடன் உடன் ஒப்பிடும்போது 69% உயர்வாகும். இந்திய வீடுகளில் மொத்தம் 22,000 டன் தங்கம் 'பயன்படுத்தப்படாமல்' இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. விலை ஏற்றத்தால் பலர் பழைய குடும்ப நகைகளை மாற்றி புதிய வடிவங்களில் வாங்க ஆரம்பித்துள்ளனர்.
புதிய நகை வாங்கல்
இதனைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்க தனிஷ்க் நிறுவனம், இந்த பண்டிகை காலத்தில் எந்த கேரட்டான தங்கமாக இருந்தாலும் "Zero Price Deduction" எனப்படும் சிறப்பு திட்டத்தை அறிவித்தது. தனிஷ்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜோய் சாவ்லா கூறுகையில், "நவராத்திரி காலத்தில் எங்கள் விற்பனையில் 38-40% வரை பழைய தங்க மாற்றுகள் இருந்தன. தீபாவளி முடிவில் இது 50% வரை உயரும் என நம்புகிறோம்," என்றார்.
நகை விற்பனை
இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் மக்கள் இன்னும் புதிய தங்கம் வாங்குவதை விரும்புகிறார்கள் என்றும், பழைய தங்கம் மாற்றுவது பெரும்பாலும் மேற்கு, வடக்கு, கிழக்கு இந்தியாவில் அதிகம் நடைபெறுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கல்யாண் ஜுவலர்ஸ் நிர்வாக இயக்குநர் ரமேஷ் கல்யாணராமன் கூறுகையில், "பண்டிகை காலங்களில் பழைய தங்கத்தை மாற்றுவது தெற்கைத் தவிர்ந்த பகுதிகளில் அதிகம் நடைபெற்றன. மேலும் தங்க, வெள்ளி நாணயங்களுக்கும் தீபாவளி-தன்தேரஸ் காலத்தில் அதிகமான தேவை இருந்தது," என்றார்.
தங்க சந்தை
கொல்கத்தாவைச் சேர்ந்த சென்கோ கோல்டு நிறுவனத்திலும் இந்த தன்தேரஸ் காலத்தில் பழைய தங்கம் மாற்றி புதிதாக வாங்குவது பெரிதும் உயர்ந்துள்ளது. இதற்கிடையில், கடந்த சில நாட்களில் தங்க விலை குறைந்திருப்பதால், வரவிருக்கும் திருமண காலத்தில் விற்பனை மேலும் உயரும் என நகைக்கடை உரிமையாளர்கள் நம்புகின்றனர். சமீபத்தில் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1.26 லட்சம் (ஜிஎஸ்டி உட்பட) வரை குறைந்துள்ளதாக 'தி இகனாமிக் டைம்ஸ்' தெரிவித்துள்ளது.














Click it and Unblock the Notifications