பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட்
சென்னை: உலகப் புகழ்பெற்ற 'ரிச் டாட் புவர் டாட்' (Rich Dad Poor Dad) புத்தகத்தின் எழுத்தாளரான ராபர்ட் கியோசாகி, நிதிச் சந்தை குறித்து மீண்டும் ஒரு அதிரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார். உலகப் பங்குச்சந்தைகள் விரைவில் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கப் போவதாகவும், அதே நேரத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை யாரும் ஊகிக்க முடியாத அளவிற்கு ராக்கெட் வேகத்தில் உயரப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், பிரபல சந்தை நிபுணரான ஜிம் ரிகார்ட்ஸின் கருத்தைக் குறிப்பிட்டு, "எதிர்காலத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,00,000 டாலராக உயர வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 200 டாலரைத் தொடும் என்றும் அவர் கணித்துள்ளார். தற்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 4,500 டாலரிலும், வெள்ளி 75 டாலரிலும் விற்பனையாகி வரும் சூழலில், கியோசாகியின் இந்தக் கணிப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 1 அவுன்ஸ் என்பது தோராயமாக 28.35 கிராம், அதாவது 3.5 சவரனுக்கும் சற்று அதிகம். தற்போது 1 டாலரின் இந்திய மதிப்பு தோராயமாக 85 ரூபாய்

தங்கத்தின் விலை: ஒரு அவுன்ஸ் தங்கம் 1,00,000 டாலராக உயரும் என்கிறார். இதை இந்திய மதிப்பில் மாற்றினால், நம்ப முடியாத அளவிற்கு 1 சவரன் தங்கம் சுமார் 24 லட்சம் ரூபாயாக உயரக்கூடும்! (1 கிராம் தங்கம் ₹3,00,000). சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,500 டாலர். இதை இந்திய மதிப்பில் கணக்கிட்டால், நம் ஊரில் 1 சவரன் தங்கம் சுமார் 1,08,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது (1 கிராம் ₹13,500).
வெள்ளியின் எதிர்கால விலை: ஒரு அவுன்ஸ் வெள்ளி 200 டாலராக உயரும் என்கிறார். இதை இந்திய மதிப்பில் மாற்றினால், 1 கிலோ வெள்ளி சுமார் 6,00,000 ரூபாயாக உயரக்கூடும்!
ஏன் இந்த எச்சரிக்கை?
உலக அளவில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைகளே இதற்கு முக்கியக் காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது உலகளாவிய பணவீக்கத்தை (விலைவாசி உயர்வு) அதிகப்படுத்தியுள்ளது. மேலும், நாடுகளின் அரசுப் பற்றாக்குறை கடன் அதிகரிப்பு மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதக் கொள்கைகளில் நிலவும் குழப்பங்கள் முதலீட்டாளர்களைப் பயமடையச் செய்துள்ளன.
வழக்கமாகப் பங்குச்சந்தையில் ஆபத்து அதிகமாக இருக்கும்போது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி நகர்வார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு இதுவே காரணம்.
பயப்பட வேண்டாம், பணக்காரர் ஆகலாம்!
"சந்தை வீழ்ச்சியைக் கண்டு நீங்கள் பயப்படத் தேவையில்லை. சிறந்த முதலீட்டாளர்கள் என்பவர்கள் எதிர்காலத்தைக் கணித்து முன்கூட்டியே செயல்படுபவர்கள். இந்த வீழ்ச்சியில் நீங்கள் ஒரு பாதிக்கப்பட்ட நபராக மாறாமல், புத்திசாலித்தனமாக முதலீடு செய்து மேலும் பணக்காரர் ஆக முடியும்" என்று கியோசாகி முதலீட்டாளர்களுக்கு தைரியம் கூறியுள்ளார்.
ராபர்ட் கியோசாகி பல ஆண்டுகளாகவே காகிதப் பணத்தையோ அல்லது வழக்கமான பங்குச் சந்தை முதலீடுகளையோ முழுமையாக நம்ப வேண்டாம் என்று கூறி வருகிறார். அதற்குப் பதிலாக தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் போன்ற உண்மையான சொத்துக்களைச் சேர்த்து வைப்பதே புத்திசாலித்தனம் என்பது அவரது நீண்ட கால வாதம்.
வெள்ளியின் இரட்டைப் பலன்
தங்கத்தை விட வெள்ளிக்கு இப்போது முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், வெள்ளி ஒரு மதிப்புமிக்க உலோகம் மட்டுமல்லாமல், தொழிற்சாலைகளுக்குத் தேவையான ஒரு மிக முக்கியப் பொருளாகவும் இருக்கிறது. குறிப்பாக, தற்காலத்தில் வேகமாக வளர்ந்து வரும் சூரிய மின்சக்தி (Solar Energy), எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் மின்சார வாகனங்கள் (EV) தயாரிப்பில் வெள்ளி பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
கடைசி நேரச் சந்தை நிலவரம் என்ன?
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்தில், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்றது. இதன் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை லேசான சரிவைச் சந்தித்தது. சர்வதேச சந்தையில் தங்கம் அவுன்சுக்கு 0.6% சரிந்து 4,515 டாலராகவும், வெள்ளி 1.1% சரிந்து 75.85 டாலராகவும் வர்த்தகமானது.
இருப்பினும், உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் அமெரிக்க டாலருக்கு மாற்றாகத் தங்கள் வசம் உள்ள தங்க இருப்பை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது தங்கத்தின் மீதான நம்பிக்கையை மேலும் பலப்படுத்துகிறது.
கியோசாகி குறிப்பிடுவது போல தங்கம் 1,00,000 டாலரையோ அல்லது வெள்ளி 200 டாலரையோ தொடுவது என்பது தற்போதைக்கு ஒரு கற்பனையான கணிப்பாகத் தோன்றினாலும், உலகப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியைச் சந்தித்தால் இது சாத்தியமே என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications