“சுகர்” இந்தியாவையே பயமுறுத்துதே.. 10 கோடி பேர் நீரிழிவால் பாதிப்பு! கிராமங்களின் நிலை ரொம்ப மோசம்
சென்னை: இந்தியாவில் 2021 நிலவரப்படி 10 கோடிக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சித் தகவலை மருத்துவ இதழான லான்செட் வெளியிட்டு இருக்கிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) நிதியுதவியுடன் நடத்தப்பட்ட விரிவான தொற்றா நோயியல் ஆய்வு அடிப்படையிலான ஓர் புதிய ஆய்வுக் கட்டுரை, உலக அளவில் பெரிதும் அங்கீகரிக்கப்படும் "தி லான்செட் நீரிழிவு மற்றும் நாளமில்லாச் சுரப்பியில்" (The Lancet Diabetes and Endocrinology) என்னும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) மற்றும் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட "இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் - இந்திய நீரிழிவு நோய் (ICMR-INDIAB)" என்ற ஆய்வின் முடிவுகள் அடிப்படையிலான கட்டுரையில், இந்தியாவில் வளர்சிதை மாற்ற தொற்றா நோய்களின் (NCDs) தாக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது என்கிற அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது.
நாட்டின் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 20 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள, மொத்தம் 1,13,043 நபர்கள் உள்ளடக்கிய 33,537 நகர்ப்புற மக்களிடமும் மற்றும் 79,506 கிராமப்புற மக்களிடமும் பெறப்பட்ட மாதிரியை எடுத்து, இந்த ஆய்வுக்கு பல கட்ட வடிவமைப்பைப் பயன்படுத்தித் தேர்ந்தெடுத்து, அவர்களைத் தனித்துவமான சிறு குழுக்களாகப் பிரித்து, குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த நபர்களிடத்தில் குறிப்பிட்ட நேரத்தில், மக்கள் தொகை அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வு, இந்திய நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களை உள்ளடக்கிய இந்த மிகப்பெரிய அளவில் பெறப்பட்ட மாதிரியைப் பயன்படுத்தி, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், டிஸ்லிபிடெமியா (Dyslipidaemia) போன்ற வளர்சிதை மாற்ற தொற்றா நோய்களின் பரவலை மதிப்பீடு செய்தது. மேலும், நாடு முழுவதும் உள்ள இந்தத் தொற்றா நோய்களின் பரவலில், அந்தந்த மண்டல மற்றும் மாநில அளவிலான மாறுபாடுகளையும் அடையாளம் கண்டறிந்தது.

நகர்ப்புற மற்றும் கிராமப்புற வித்தியாசம்: இயல்பான இரத்த சர்க்கரை அளவுக்கும் நீரிழிவு நோய்க்கும் இடைப்பட்ட நிலையைத் தவிர, மற்ற அனைத்து வளர்சிதை மாற்ற தொற்றா நோய்களும், கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அதிக விகிதங்களில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நீரிழிவு மற்றும் பிற தொற்றா நோய்களுக்கான (NCD's) புதிய தேசிய மதிப்பீடுகள்: இந்த ஆய்வின்படி, 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயாலும், 136 மில்லியன் மக்கள் இயல்பான இரத்த சர்க்கரை அளவுக்கும் நீரிழிவு நோய்க்கும் இடைப்பட்ட நிலையாலும், 315 மில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தாலும், 254 மில்லியன் மக்கள் பொதுவான உடல் பருமனாலும், 351 மில்லியன் மக்கள் அடிவயிற்று உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என மதிப்பிடப்படுகிறது. மேலும், 213 மில்லியன் மக்கள் ஹைபர்கொலெஸ்டிரோலீமியாவால் (Hypercholesterolemia) அவதியுற்று இருக்கிறார்கள்.
கீழ்காணும் தகவல்கள் இந்த ஆய்வின் முடிவில் கிடைத்து இருக்கின்றன.
- இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி நடத்தப்பட்ட முதலாவது விரிவான ஆய்வு அறிக்கையில், தொற்றா நோய்களின் மாபெரும் அளவிலான தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
- கிட்டத்தட்ட அனைத்து வளர்சிதை மாற்ற தொற்றா நோய்களும் (NCDs) கிராமப்புறங்களுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன மற்றும் அதிக விகிதங்களையும் காட்டுகின்றன.
- தொற்றா நோய்களின் (NCDs) பரவலில், மாநிலங்களுக்கு இடையே பலதரப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன.
- மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலங்களில், நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்ந்து ஒரே சீராக இருப்பது போலத் தோன்றுகிறது, அதேசமயம் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்களில், நீரிழிவு நோயின் தாக்கத்தின் பரவல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications