கேரளாவில் ஜேஎன்1 கொரோனா.. இந்த அறிகுறி இருந்தால் கவனம்.. முன்னெச்சரிக்கை தேவை! மருத்துவர்கள் அட்வைஸ்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓமிக்ரானின் துணை வேரியண்ட் JN 1 கொரோனா பரவி வருகிறது. இதனால் மக்கள் விழிப்போடு இருப்பதோடு, போதுமான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தேவைப்பட்டால் சிகிச்சையை பெறுவது அவசியம் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா என்னும் பெருந்தொற்று நோய், சீனாவில் கண்டறியப்பட்டது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சில நாட்களில் மின்னல் வேகத்தில் பரவத் தொடங்கியது. உலகம் முழுவதும் பரவிய இந்த வைரசால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகனர். கோடிக்கணக்கானோருக்கு பாதிப்பு.. லட்சக்கனக்கில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி விட்டு சென்ற கொரோனா பெருந்தொற்று தடுப்பூசி கண்டறியப்பட்ட பிறகு தீவிரம் குறைந்தது.

கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் உலக மக்களை பாடாய் படுத்திய கொரோனா வைரஸ் மறையைத் தொடங்கியது. இந்த நிலையில், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இப்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதாக செய்திகள் வெளியானது. அடுத்த சில தினங்களிலேயே, கேரளாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
38 நாடுகளில் ஜே என்1 வைரஸ்: கேரளாவில் ஓமிக்ரானின் துணை வேரியண்ட் JN1 கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கே கொரோனா அதிகரிக்க இது முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் கூறினர். கேரளாவில் இப்போது ஜே.என்.1 என்ற கொரோனா வேரியண்ட் வேகமாகப் பரவும் நிலையில், காய்ச்சல், இருமல், சோர்வு, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளது.
கொரோனா வைரஸ் தொடந்து உருமாறி புதிய அலைகளாக தாக்கி வந்தது. அந்த வகையில்தான் தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸில் இருந்து இந்த ஜே என் 1 வைரஸ் உருமாறியுள்ளது. ஜேஎன் 1 கொரோனா என்பது முதலில் கடந்த ஆகஸ்ட் மாதம் லக்சம்பேர்க்கில் கண்டறியப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன் உள்பட உலகம் முழுவதும் 38 நாடுகளில் இந்த ஜே என்1 வைரஸ் பாதிப்பு உள்ளதாம்.
மருத்துவர்கள் அட்வைஸ்: வைரசின் மேற்புறத்தில் காணப்படும் ஸ்பைக் புரதத்தில் கூடுதலான மாற்றம் இருப்பதாகவும், இந்த புதிய வகை வைரஸ் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாண்டி பாதிப்பை ஏற்படுத்தும் திறனை கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டது. தற்போது கேரளாவில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
முதியவர்கள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்த கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் மருத்துவ வல்லுனர்களால் கூறப்படுகிறது. மக்கள் விழிப்போடு இருப்பதோடு, போதுமான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தேவைப்பட்டால் சிகிச்சையை பெறுவது அவசியம் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications